ஃபிளிப்கார்ட் விவகாரம்: பின்னி பன்சல் ஊழியர்களுக்கு இ-மெயிலில் அனுப்பிய விளக்கம்!
ஃபிளிப்கார்ட் இணை நிறுவனரான பின்னி பன்சல், அதன் குழும சி.இ.ஓ வாக திடிரென விலகியது ஸ்டார்ட் அப் உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய நிலையில், தனக்கும், குடும்பத்திற்கும் இது சவாலான காலம் என பின்னி பன்சல் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட நடத்தை தொடர்பாக தன்மீது கூறப்பட்ட புகார் திகைப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே ஃபிளிப்கார்ட் சி.இ.ஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, நிறுவனத்தின் நோக்கம் மற்றும் செயல்பாட்டில் எந்த மாற்றம் இருக்காது என உறுதி அளித்துள்ளார். ஃபிளிப்கார்டி இயக்குனர் குழுவும் ஊழியர்களுக்கு உறுதி அளித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் இந்திய ஸ்டார்ட் அப் வெற்றிக்கதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறிய ஸ்டார்ட்-அப்’ல் இருந்து பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த ஃபிளிப்கார்ட், இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்க ஜாம்பவான் வால்மார்ட்டால் கையகப்படுத்தப்பட்டது. ஃபிளிப்கார்ட் பயணத்தில் இது ஒரு மைல்கல்லாக கருதப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்கிழமை ஃபிளிப்கார்ட் சார்பில் வெளியான அறிவிப்பு, இணை நிறுவனர் பின்னி பன்சல் ராஜினாமா செய்வதாக தெரிவித்தது.
தனிப்பட்ட நடத்தை தொடர்பான புகார் விவகாரத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஃபிளிப்கார்ட் அறிக்கை தெரிவித்தது. இந்த நிகழ்வு ஸ்டார்ட் அப் உலகில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.
பின்னி பன்சல் திடீர் விலகலுக்கான பின்னணி என்ன எனும் கேள்வியும் எழுந்தது. இந்நிலையில், பின்னி பன்சல், இது தொடர்பாக ஃபிளிப்கார்ட் ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி தனது கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தன்மீதான புகார் திகைப்பை ஏற்படுத்தியதாகவும், இந்த தனிப்பட்ட நிகழ்வு கவனச்சிதறலை ஏற்படுத்திவிடக்கூடாது என தான் விலகி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நிறுவனம் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் பொறுப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிறுவன பங்குதாரராக மற்றும் இயக்குனர் குழும உறுப்பினராக நான் தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்.
பின்னி பன்சல் ஊழியர்களுக்கு அனுப்பிய இ-மெயில் விவரம் வருமாறு:
அன்பான ஃபிளிப்கார்ட் குடும்பத்திற்கு,
மிதமான வளத்துடன் 2007 ல் ஃபிளிப்கார்ட்டை இணை நிறுவனராக துவக்கியது முதல், நாம் ஒன்றாக, கடினமான, பலனுள்ள பயணத்தை மேற்கொண்டோம். இது இந்த ஆண்டு துவக்கத்தில் வால்மார்ட்டுடனான கூட்டு எனும் அருமையான செய்தியை வந்தடைந்தது. அவர்கள் சிறந்த பங்குதாரர்கள் மற்றும் நம்முடைய எதிர்காலத்தில் எனக்கு நம்பிக்கை உள்ளது.
சில காலமாக, குழுமத்தின் செயல்பாட்டு பொறுப்பில் இருந்து விலகுவதற்கான சரியான நேரம் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.
வால்மார்ட்டுடனான ஒப்பந்ததிற்கு பிறகான மாற்றத்தை தொடர மேலும் சில காலாண்டுகள் தற்போதைய பொறுப்பில் தொடர வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். இருப்பினும் அண்மைக் காலத்தில் நடைபெற்ற தனிப்பட்ட நிகழ்வுகளால், பதவி விலகும் எனது முடிவை விரைவாக மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
இந்த நிகழ்வுகள், என் மீதான தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பானவை. சட்ட நிறுவனம் நடத்திய சுயேட்சையான விசாரணையில் இவை ஆதாரம் இல்லாதவை என தெரிய வந்தது. இந்த புகார் என்னை திகைப்பில் ஆழ்த்தியது. அதை நான் வன்மையாக மறுக்கிறேன். இருப்பினும் இந்த விசாரணை என பக்கத்தில் முடிவெடுப்பதில் தவறு இருப்பதை குறிப்பாக இந்தச் சூழலை நான் கையாண்டதில் வெளிப்படைத்தன்மையில் தவறு இருப்பதை சுட்டிக்காட்டியது. இது எனக்கும் என் குடும்பத்திற்கும் சவாலான சூழலாகும். இது நிறுவனம் மற்றும் குழுவுக்கு கவனச்சிதறலாக அமையும் என அஞ்சுகிறேன். இந்தச் சூழலில், தலைவர் மற்றும் குழும சி.இ.ஒ பொறுப்பில் இருந்து விலகுவது சிறந்த முடிவு என கருதுகிறேன்.
நிறுவன பங்குதாரராக மற்றும் இயக்குனர் குழும உறுப்பினராக நான் தொடர்வேன்.
நம்முடைய அனுபவம் வாய்ந்த தலைவர்கள்-(கல்யாண், சமீர் மற்றும் ஆனந்த்,) வடிவில் நம் நிறுவனம் சிறந்த கைகளில் இருப்பதாக நம்புகிறேன். பல ஆண்டுகளாக அவர்கள் நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வந்துள்ளனர். இப்போது வால்மார்ட்டின் ஆதரவுடன், எதிர்காலத்தில் நிறுவனத்தை மேலும் சிறந்த வெற்றிக்கு அழைத்துச்செல்வார்கள்.
கடந்த ஆண்டுகளில் நீங்கள் என்மீது காண்பித்த நல்லெண்ணத்திற்கு நன்றி. நாம் இன்று இருக்கும் நிலையை அடைய உதவும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. வரும் ஆண்டுகளில் ஃபிளிப்கார்ட் மேலும் உயரத்தை அடைவதை பார்க்க விரும்புகிறேன்.
மிக்க நன்றி.- பின்னி பன்சால்
இதனிடையே ஃபிளிப்கார்ட் சி.இ.ஓ கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, நிறுவன செயல்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என ஊழியர்களுக்கு உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
சற்று முன்னர் தான், நிறுவனத்தில் இருந்து பின்னி பன்சல் விலகுவதை அறிவித்தோம். ஒரு இணை நிறுவனராக பின்னி பன்சல் நிறுவனத்திற்கு எப்படிப்பட்டவர் என்று நமக்கு தெரியும். ஆனால் ஃபிளிப்கார்ட், குழும நிறுவங்களான மிந்த்ரா, ஜபாங் மற்றும் போன்பே ஆகியவற்றுடன் தங்கள் பிரிவுகளில் வளர்ச்சியை தொடர, விரிவாக்கம் செய்ய முன்பைவிட வலுவாக உள்ளன. ஃபிளிப்கார்ட், மிந்த்ரா, ஜபாங்கை வழிநடத்தும் பொறுப்பை தீவிரமாக ஏற்றுக்கொள்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்.
மின்வணிக சூழலில் அனைத்து பங்குதாரர்களின் பல ஆண்டு கடின உழைப்பு காரணமாக ஃபிளிப்கார்ட் இன்றுள்ள தலைமை நிலையை அடைந்துள்ளது. குறிப்பாக உங்களுடைய அர்பணிப்பு மற்றும் ஆற்றல் இந்தியாவில் முன்னிலை பெற உதவியிருக்கிறது. எனவே, இந்த செய்தியால் நிறுவன செயல்பாட்டில் மற்றும் நிறுவன நோக்கத்தில் எந்த மாற்றமும் இருக்காது என உறுதி அளிக்க விரும்புகிறேன்.
ஃபிளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் ஜபாங் குழு நம்மை வெற்றிப்பாதையில் அழைத்துச்செல்லும் திறமை கொண்டிருப்பதில் நம்பிக்கை உள்ளது. ஃபிளிப்கார்ட், சப்ளை செயின் முதலீடு, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தும். செயல்பாட்டை சிறப்பாக மாற்றுவது மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை அளிப்பதில் கவனம் செலுத்தும். நீண்ட கால முதலீட்டில் நம் இயக்குனர் குழு ஈடுபாடு கொண்டுள்ளது. எதிர்காலத்தில் பொது நிறுவனமாக உருவாகும் தலைமையின் திட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்கிறது.
ஃபிளிப்கார்ட் தொடர்ந்து வெற்றி பெற நம்முடைய குழு சிறப்பாக செயல்பட வேண்டும். அதற்கான ஒவ்வொரு வாய்ப்பை அளிப்பதில் உறுதி கொண்டுள்ளோம். நிறுவனத்தின் பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதற்கு நன்றி. இந்திய வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மின்வணிக அலையை எடுத்துச்செல்ல இருக்கும் சூழலில் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை தொடர விரும்புகிறேன்.
அன்புடன் கல்யாண்.
ஃபிளிப்கார்ட் இயக்குனர் குழுவும் ஊழியர்களுக்கு நிறுவன செயல்பாடுகள் குறித்து உறுதி அளித்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: தாருஷ் மற்றும் திம்மையா | தமிழில்: சைபர் சிம்மன்