'தோல்வியை கண்டு துவளாதீர்; அதுவே வெற்றியின் ரகசியம்': தொழில்முனைவர் ஹேமச்சந்திரன்
பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் தோல்வி, அதன் பிறகு சந்தித்த அவமானங்களைத் தொடர்ந்து, வாழ்க்கையை சவாலாக எடுத்துக் கொண்டு டிப்ளோமா படிப்பில் மாநிலத்தில் முன்னணி மாணவராக வெற்றி பெற்று, தனக்கென்று ப்ரேத்யேக பாதையை வகுத்துக் கொண்ட ஹேமச்சந்திரன், சரிவை சந்தித்து, தோல்வியில் துவளும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்புத் துறையில் தற்போது முன்னணியில் இருக்கும் 'ப்ராண்ட் அவதார்' என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர், செலப்ரிடீ பாட்மிண்டன் லீக் என்ற நிறுவனத்தின் நிறுவனர் என்று பல்வேறு நிறுவனங்களைக் கொண்டு, தொழிலில் சிறந்து விளங்கும் ஹேமச்சந்திரன், தான் கடந்து வந்த பாதையை தமிழ்யுவர்ஸ்டோரியிடம் பகிர்ந்து கொண்டார்.
தோல்வி தந்த ஊக்கம்
சென்னை அருகே அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்த ஹேமசந்திரன் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆங்கில வழிக் கல்வியில் பயில ஆரம்பித்த அவர் வறுமை காரணமாக அரசு பள்ளியில் தமிழ் வழி கல்வியில் படிப்பை தொடர நேரிட்டது. இது பெரும் சவாலாக இருந்ததாக கூறும் ஹேமச்சந்திரன், "இந்த மாற்றம் என்னுடைய தேர்ச்சியை வெகுவாக பாதித்தது. வேறு சூழலுக்கு தயார் படுத்திக்கொள்ள முடியவில்லை. பனிரெண்டாம் வகுப்பில் அனைத்து பாடத்திலும் தோல்வி கண்டேன்" என்கிறார்.
"இந்த தோல்வியால் ஒரு வருட காலம் வீட்டிலேயே முடங்கினேன். நண்பர்கள், உற்றார் உறவினர்களின் அவமதிப்பை பெற்றேன். என்னுடைய திறனை நானே கேள்விக்கு உள்ளாக்கினேன்,"
என்று கூறும் ஹேமச்சந்திரன் இதன் பிறகு மூன்று வருட டிப்ளோமா படிப்பைத் தொடர முடிவெடுத்தார்.
தோல்வியை சந்தித்தாலும், கல்வியின் முக்கியத்துவம் அறிந்த காரணத்தால் தனது முழு சிந்தனையையும், கவனத்தையும் டிப்ளோமா படிப்பின் மீது திருப்பினார். இதன் காரணமாக 93% பெற்று மாநிலத்தில் முன்னணி மாணவராக தேர்ச்சி பெற்றார். "வாழ்க்கையில் சந்தோஷ தருணம் எட்டிப் பார்த்தது. இதே உத்வேகத்துடன் பொறியியல் படிப்பை மேற்கொள்ள முடிவெடுத்தேன்" என்கிறார் ஹேமச்சந்திரன்.
சென்னை நோக்கி பயணம்...
பொறியியல் படிப்பை மேற்கொள்ள சென்னை வர முடிவெடுத்த ஹேம் தகுதியின் அடிப்படையில் கிரெசன்ட் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். "சென்னையின் சூழல் புதிதாக இருந்தது, அதன் கலாச்சார வேறுபாட்டிற்கு என்னை தயார் படுத்திக் கொள்ள சிரமப்பட்டேன், தோல்வியில் இருந்து மீண்டெழுந்த அனுபவம் எத்தகைய சவாலையும் சமாளிக்கும் உத்வேகத்தை அளித்தது" என்கிறார்.
சற்றே வெற்றியின் பூரிப்பில் இருந்த அவருக்கு அடுத்து இடியாய் இறங்கியது அவரது தந்தையின் மரணம்.
"என் இரண்டாவது செமஸ்டரில், புற்றுநோய் காரணமாக என் தந்தையை இழந்தேன். படிப்பை தொடரும் ஆர்வம், குடும்பத்தையும் கவனிக்கும் பொறுப்பு என்று இவற்றிற்காக சம்பாதிக்கும் வழிமுறைகளை ஆராய ஆரம்பித்தேன்,"
என்று கூறும் ஹேம் அப்பொழுது அவருடைய ஒரே திறனாக நோட்ஸ் எடுக்கும் வழக்கம் மட்டுமே புலப்பட்டது என்கிறார்.
தொழில்முனை ஆர்வம்
மக்களை சந்திப்பது அவர்களுடன் பணி புரிவது என்பது ஹேமச்சந்திரனுக்கு பிடித்தமான ஒன்று. கல்லூரியில் தன் திறமையை தொழிலாக மாற்றியது அவரின் தொழில்முனை ஆர்வத்திற்கு முன்னோடியாக அமைந்தது என்றே கூறலாம். தமிழ் மையம் என்ற அமைப்பிற்காக பல்வேறு ஈவண்ட்ஸ் மேற்காணல், சென்னை சங்கமம், சென்னை மராத்தான் என்று பல வகையான நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைப்பு செய்த அனுபவமே 'ப்ராண்ட் அவதார்' என்ற நிறுவனத்தை தோற்றுவிக்க காரணமாக அமைந்தது என்கிறார் அவர்.
இது தவிர மாஃபா நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் தொழில் திறமையை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருந்ததோடு நிறைய கற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.
தொழில் முனைவராக மட்டுமில்லாமல் பல தொழில்முனைவர்களை ஊக்குவிக்கும் செயலிலும் ஈடுபடுகிறார். பல்வேறு கல்லூரிகளில் ஊக்குவிக்கும் பேச்சாளாராக TiE போன்ற அமைப்பில் முக்கிய பங்களிப்பாளராகவும் திகழ்கிறார்.
சென்னையில் பல தொழில் திறமைகள் புதைந்து கிடப்பதாக கூறும் ஹேமச்சந்திரன், தொழில் முனைவிற்கான அத்தனை தகுதி பெற்ற இளைஞர்கள் இங்கு நிரம்பி உள்ளதாக கூறுகிறார். அத்தோடு ஏஞ்சல் முதலீட்டார்கள் தகுதியான தொழில்முனை நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் கூறுகிறார்.
உந்துதல்
"உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தி உங்களிடம் தான் இருக்கிறது" என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஹேமச்சந்திரன் .
முன்னாள் ஜனாதிபதி Dr கலாம், மாஃபா நிறுவனர் பாண்டியராஜன், தற்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாஆகியோரை முன்னோடிகளாகக் கொண்டு தூண்டுதலுடன் செயல்படுவதாகக் கூறுகிறார்.
தொழில் முனைவர்கள் எந்த சூழ்நிலையிலும் மனம் தளரக் கூடாது என்றும் தோல்விகளை கண்டு துவளக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். "தோல்வி இல்லையெனில் பெரிதாக எதையும் சாதிக்க இயலாது" என்று கூறும் ஹேமச்சந்திரன் தோல்வியில் கற்கும் பாடமே வெற்றிக்கு வழி வகுக்கும் என்றும் கூறுகிறார்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
பஸ் கண்டக்டரின் மகன் குரு பிரசாந்த் கோவையில் தொடங்கிய ‘மெட்ஸ்பி’
படிப்பை பாதியில் விட்ட விவசாயி மகன், ஒரு டெக் மில்லினியரான வெற்றி கதை!