11 துறைகளைச் சேர்ந்த 35 சிறந்த மகளிர் தொழில் முனைவோருக்கு ‘சுயசக்தி விருதுகள்’
வீட்டிலிருந்தே தொழில் செய்யும் / பகுதி நேரமாக தொழில் செய்யும் பெண் தொழில் முனைவோர்களான ‘ஹோம்ப்ரூனர்ஸ்’களை கெளரவிக்கும் ‘சுயசக்தி விருதுகள்’ நேற்று பிரம்மாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது. 11 வெவ்வேறு துறைகளில் சிறந்து தொழில் புரியும் 35 பெண்கள், வெற்றி பெற்று இவ்விருதினை பெற்றனர்.
பிரபல ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான ‘பிராண்ட் அவதார்’ (Brand Avatar), ‘நேச்சுரல்ஸ் சலூன் மற்றும் ஸ்பா’ (Naturals Salon and Spa) அழகுக் கலை நிறுவனத்துடன் இணைந்து சிறந்த மகளிர் தொழில் முனைவோரைத் தேர்ந்தெடுத்து ‘சுயசக்தி விருது’களை கடந்த ஆண்டு (2017) முதல் வழங்கி வருகிறது.
இரண்டாவது ஆண்டாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. யுவர்ஸ்டோரி தமிழ் பார்ட்னராக உள்ள இந்த நிகழ்வில், 11 வெவ்வேறு துறைகளில் சிறந்த, 35 குடும்பத் தலைவிகள், தொழில் தலைவிகளாகவும் வெற்றி பெற்றதற்காக சுயசக்தி விருதினைப் பெற்றனர். மேலும், 4 பெண் தொழில் முனைவோர்கள் சிறப்பு விருதுகளையும், (Special Mention), 5 பெண் தொழில் முனைவோர்கள் சிறப்பு தகுதியுடன் கூடிய அங்கீகார விருதுகளையும் (Special Mention Recognition) பெற்றனர்.
தன்னம்பிக்கையோடு துணிச்சலும் சேர, களமிறங்கி போராடி, இலக்கு நோக்கிய அயராத பயணத்தால், இன்று தொழிலில் வெற்றிக்கொடி நாட்டி, பல புதுமையான வணிக யுக்திகளைக் கையாண்டு வரும் இந்தப் பெண் தொழில்முனைவோர்கள் கட்டாயமாக பாராட்டுக்குரியவர்களே!
இதில் சிறந்த தொழில் முனைவோர்களை பாராட்டி கவரவித்து, டாக்டர் கமல்ஹாசன் சிறப்பு விருதுகளை வழங்கி பேரூரையாற்றினார்.
விருது பெற்ற இந்தப் பெண்களுக்குக் கூடுதலாகத் தேவைப்படும் தொழில் ஆலோசனைகளை வழங்குதல், முதலீடு திரட்டுதல் போன்றவற்றிலும் உதவி, அவர்களது வணிகத்தைப் பெருக்குவதற்கும் பிராண்ட் அவதார் மற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனங்கள் துணை புரியவுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிராண்ட் அவதாரின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஹேமச்சந்திரன்,
“இந்த விருது சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. அதனால்தான் சுய முயற்சியில் தானே முயன்று போராடி வெற்றி பெற்ற குடும்பத் தலைவிகளை விருதுக்கு தேர்வு செய்துள்ளோம். அதோடு, விரிவாக்க வாய்ப்புள்ள, சந்தைக்கு ஈடுகொடுக்கும், சிறந்த தொழில் ஐடியா உள்ளவர்களின் பல்வேறு தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியிலும் உதவிக்கரம் நீட்டும் திட்டம் எங்களிடம் உள்ளது,” என்றார்.
மேலும் இந்த விருது ஆயிரக்கணக்கான இளம் பெண்களை வெற்றிகரமான ஹோம்ப்ரூனர்களாகத் தூண்டும் என எதிர்பார்க்கிறோம். அவரவர் வாழும் சூழலில், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வதுடன், வீட்டில் உள்ள ஆண்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி, பெண்களின் தொழில் முயற்சிக்கு இவ்விருதுகள் துணை நிற்கும் வகையில் ஆதரவை உண்டாக்கும் என நம்புகிறோம், எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் பத்மஸ்ரீ கமல் ஹாசன் விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசுகையில், தான் எப்போதும் பல அசாத்திய பெண்கள் மத்தியில் வளர்ந்தவன் என்றும் தன் தாய் அதற்கு ஒரு சிறந்த உதாரணம் என்றும் கூறினார். தற்போது மேலும் பல வெற்றிப் பெண்களை சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்தார்.
“பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்று தீவிரமான நம்பிக்கை உள்ளவன். இதை நான் முழுமையாக நம்புகிறேன். நம்மை விட, ஆண்களை விட அவர்கள் திறமையானவர்கள் என்பதில் அதீத நம்பிக்கை உடையவன் நான்,” என்றார் கமல் ஹாசன்.
சமூகம் பெண்களை மதிப்பது எத்தனை முக்கியம் என்பதை நான் முற்றிலும் உணர்வேன், என்றார் மேலும். கல்வியைத் தாண்டி தமிழக பெண்கள் பலர் தொழிலில் வெற்றி கண்டுள்ள கதைகளை நான் பல அறிவேன், இங்கும் அதுபோன்ற பலரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பாராட்டி பேசிவிட்டு, விருது வென்றவர்களுடன் கூட்டாக புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியை இணைந்து வழங்கும் நேச்சுரல்ஸ் சலூன் மற்றும் ஸ்பா நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சி.கே. குமாரவேல் கூறுகையில்,
“வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் இந்தப் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். மேலும், படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அல்லும் பகலும் போராடி அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றக் கற்றுக் கொண்டுள்ளனர். அவர்களது குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.”
எனவே, இதுபோன்ற விருதுகள், அவர்களைப் பாராட்டுவதோடு, ஊக்கம் அளித்து, அவர்கள் மேலும் தொழிலில் சிறக்க வழிகாட்டுகிறது என்பதில் மகிழ்ச்சி என்றார்.
விருதுக்கான தேர்வு முறை:
இந்த விருதுக்காக விண்ணப்பித்த 6500 தொழில் முனைவோரில் இருந்து 150 நபர்கள் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். அந்த 150 பேரிடமும் தனித்தனியாக நேர்காணலில், அவர்களது பின்னணி மற்றும் முழு விவரங்களை ஆய்வு செய்த நீதிபதிகள் கீழ்க்கண்ட அம்சங்களின் அடிப்படையில் அவர்களை மதிப்பீடு செய்தனர்.
1. தொழில் ஐடியாவின் தனித்தன்மை, 2. சமூகத்தில் அந்த ஐடியாவின் தாக்கம், 3. குடும்பத்தில் ஏற்படுத்திய மாற்றம், 4. தொழில் வருவாய் மற்றும் வளர்ச்சி, 5. தொழிலை விரிவாக்கும் வாய்ப்பு மற்றும் அதில் காட்டும் ஈடுபாடு.
இந்த அம்சங்களின் படியான மதிப்பீட்டில் (11 பிரிவுகளின் கீழ்) அதாவது, விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம், அழகுணர்வு மற்றும் ஆரோக்கியம், பழையனவற்றை ஒதுக்கி, புதிய பாதையில் தடம் பதித்தல், கல்வி மற்றும் இலக்கியம், உணவு மற்றும் பானங்கள், வீட்டில் இருந்தபடியே செயல்படும் தொழில் முனைவோர்கள், சுகாதாரம், வீட்டுக்கான சில்லறை தேவைகள், ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடல்திறன், சமூக மேம்பாடு, 35 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சுயசக்தி விருதுக்கானவர்களைத் தேர்வு செய்த குழுவில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த, முத்திரை பதித்த பெண்கள் பலர் ஜூரி உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.