வரலாற்றை மாற்றிய தீர்ப்புகள்: 2018ல் நிகழ்ந்த சட்ட சீர்திருத்தங்கள்!
ஜனநாயகம் மிகச் சிறப்பான ஆட்சிமுறை கிடையாது. ஜனநாயக ஆட்சி முறையில் ஏகப்பட்ட குறைகள் இருக்கின்றன - அதன் விளைவாய் நம் தினசரி வாழ்க்கையில் தொடர்ந்து ஏமாற்றத்தையும், போலிகளையும், மோசடிகளையும் நாம் சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால், ஜனநாயகத்திற்கு மாற்றாக நமக்கொரு ஆட்சி முறை இல்லை. ஜனநாயகத்தின் சாரத்தை கொஞ்சமேனும் நிலைநிறுத்திக் கொள்ள அவசியமாக இருப்பது சட்ட சீர்திருத்தம்.
2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் சில முக்கியமான சட்ட சீர்திருத்தங்கள் நடந்திருக்கின்றன. காலனிய காலத்து சட்டங்கள் சமகால இந்தியாவிற்கு பொருந்தி போவதில்லை என்பதை ஒருமுறைக்கு மேலாகவே வெளிப்படுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றம்.
1) லிவ்-இன் உறவுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கிறது !
மிகத் துல்லியமாக இதை சட்ட சீர்திருத்தம் என்று சொல்லிவிட முடியாது என்றாலும், அப்போதுவரை ’லிவ்-இன்’ உறவு சட்டத்திற்கு புறம்பானது என இருந்து வந்த பொதுப்புத்திக்கு இதொரு புதிய செய்தியாகவே இருந்தது.
கடந்த மே மாதம், கேரளாவை சேர்ந்த நந்தகுமார், தனக்கு திருமண வயது (21) ஆகியிருக்காத காரணத்தால் தன்னுடைய திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றத்திற்கு எதிராக வழக்கு தொடுத்திருந்தார். கேரள உயர் நீதிமன்றம், நந்தகுமாரின் துணைவியான துஷாரவின் கஸ்டடியை அவருடைய அப்பாவிற்கு கொடுத்திருந்தது.
இந்த வழக்குக்கு தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்,
“நந்தகுமாரும், துஷாரவும் மேஜர் தான். அவர்கள் ஒன்றாய் வாழ தீர்மானித்தால், திருமணத்தில் இருந்தால் மட்டும் தான் ஒன்றாய் வாழ வேண்டும் எனும் அவசியமில்லை. திருமணம் பந்தத்தில் இல்லாமலும் அவர்கள் ஒன்றாய் வாழ தேர்வு செய்யலாம். இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் முழு சுதந்திரமும் துஷாராவிடமே இருக்கிறது,” என்று தெரிவித்தது.
2) செக்ஷன் 377
தன்பால் புணர்ச்சி இயற்கைக்கு மாறானது என்பதால் அது சட்டத்திற்கு புறம்பானது எனும் 157 ஆண்டு பழைமையான விக்டோரிய காலத்து சட்டத்தை மிகச் சமீபத்தில் ரத்து செய்தது உச்சநீதிமன்றம். ஆனால், இது தடாலடியாக நடந்துவிட்ட ஒரு மாற்றம் கிடையாது. பல ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த பதிலாகவே இந்த சட்டம் வரவேற்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி தீபக் மிஸ்ரா,
“எந்தவொரு சாதாரண குடிமகனை போலவும், எல்.ஜி.பி.டி.க்யூ சமுகத்தை சேர்ந்தவர்களுக்கும் அத்தனை உரிமைகளும் இருக்கின்றன. தனிநபரின் தேர்வுகளை மதிப்பது தான் விடுதலையின் சாரம். தன்பால் புணர்ச்சியை க்ரிமினல் குற்றமாக்குவது பகுத்தறிவற்ற செயல்,” என்று கூறினார்.
3) சபரிமலை கோவிலுக்கு பெண்கள் செல்லலாம்!
1990-ல் பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படக் கூடாது என்று எஸ்.மகேந்திரன் என்பவர் அளித்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலை கோவிலுக்குள் குறிப்பிட்ட வயது வரம்பில் இருக்கும் பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவித்தது. இதற்கு எதிராக, 2006 ஆம் ஆண்டு முதலே வழக்குகள் நடந்துவந்தன. கடைசியாக, 2018 செப்டம்பரில் வயது வரம்புகள் எதுவும் இன்றி, பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான நீதிபதிகளின் அமர்வு இந்த தீர்ப்பை வெளியிட்டது.
“கோவிலுக்குள் சென்று வழிபட பெண்களுக்கு இருக்கும் உரிமையை இந்த வழக்கம் மறுக்கிறது என்பதை சொல்வதில் எங்களுக்கு ஒரு தயக்கமும் இல்லை. மாதவிலக்கு நிலவரத்தை வைத்து பெண்களை நிராகரிப்பது தீண்டாமை தான், அரசியலமைப்புச் சட்டம் அதை ஏற்றுக் கொள்ளாது,” என்று நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
4) திருமணம் தாண்டிய உறவு க்ரிமினல் குற்றம் கிடையாது!
உச்சநீதிமன்றம் இந்த வருடம் ரத்து செய்த இரண்டாவது விக்டோரிய கலாச்சார சட்டம் இது. முன்னர், திருமணம் ஆன பெண்ணோடு ஒரு ஆண் உறவு கொள்வது க்ரிமினல் குற்றமாக கருதப்பட்டது. இதற்கு எதிராக வழக்கு தொடுத்த ஜோஷப் ஷைன், ’இது பெண்களை ஆண்களின் உடைமைகள் ஆக்கும் சட்டமாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டு 45 பக்க மனுவை சமர்பித்திருந்தார். மேலும் இந்த சட்டம் பெரும்பாலும் பழி வாங்கல் நடவடிக்கைகளுக்காவே உபயோகப்படுகிறது எனும் சட்ட அறிஞர்கள் சொல்கிறார்கள்.
“கணவன் மனைவியின் முதலாளி கிடையாது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே சலுகைகள் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். இந்த சட்டம் பெண்களின் செக்ஸுவாலிட்டியை கட்டுப்படுத்தி, அவர்களை அவமரியாதை செய்கிறது,” என உயர்நீதிமன்றம் இது குறித்து தெரிவித்தது.
5) முத்தலாக் தண்டனைக்குரிய சட்டம்!
ஒரு ஆண் மூன்று முறை தலாக் என்று சொல்வதனால், திருமணத்தை ரத்து செய்யப்படும் எனும் வழக்கம் இஸ்லாம் மதத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் பெண்கள் இவ்வகையில் விவாகரத்து செய்ய முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இது
1) சமத்துவத்திற்கான உரிமை 2) விடுதலைக்கான உரிமை 3) சுரண்டலுக்கு எதிரான உரிமை - ஆகிய மூன்று அடிப்படை உரிமைகளுக்கு எதிரான வழக்கம் ஆகும். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் இதுவும் ஒன்று.
இந்நிலையில், பாராளுமன்றத்தில், முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கக் கோரும் சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
“இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்த சட்ட வரைவு இயற்றப்பட்டது. தேசிய நலனுக்காகவும், அரசியலமைப்பு சட்டத்தை மதிப்பதற்காகவுமே இது இயற்றப்பட்டிருக்கிறது,” என சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பேசியிருக்கிறார்.
பிரம்மாண்டமான மக்கள்தொகை இருக்கும் இந்தியா போன்றதொரு நாட்டிற்கு இவ்வளவு சட்ட சீர்திருத்தங்கள் மட்டுமே போதுமானவை கிடையாது. போராடுவதும், தொடர்ந்து இயங்குவதும் மட்டுமே சட்ட சீர்திருத்தங்களுக்கான பாதையாக இருக்கிறது. இந்தியா எனும் ஜனநாயக நாடு மக்களுக்கானதாக இருக்க, அடிப்படையிலேயே நம் செயல்பாடுகள் அதிகார அமைப்பிற்கு எதிரான போராட்டமாக இருக்க வேண்டும் என்பதை 2018 அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது!
"