'ராப் இசைக்கு இந்தியாவில் வேர் இருக்கிறது': லேடி காஷ்
ராப் இசையில் வில்லுப்பாட்டை ஒன்றாக்கி, அதன் ஒற்றுமைகளை வெளிச்சம் போட்டு காட்டி உலகளவில் அதை பிரபலப்படுத்த நினைக்கும் ‘ராப் பாடகி’ லேடி காஷ்!
‘லோக்கல் இஸ் இண்டர்நேஷனல்’ என்றொரு வாக்கியம் சமீபத்தில் வெளியான ஈ.மா.யௌ படத்தின் போஸ்டர்களில் இருப்பதை பார்த்திருப்போம். அலெக்ஸ் ஹேலியின் ‘ரூட்ஸ்’ நாவல், வெற்றி மாறனின் ‘ஆடுகளம்’, திலீஷ் போத்தனின் ‘மஹேஷிண்டே பிரதிகாரம்’ என பல படைப்புகள், மேற்குலக நாடுகளின் கலை உலகின் செலுத்தும் ஆதிக்கத்தை உடைப்பதனாலேயே மக்களுக்கு நெருக்கமானவையாக இருக்கிறது.
மேற்குலகிலுமே சில கலை வடிவங்கள் கலகத்திற்கு பிறந்தவையாக இருக்கும். கிடாரை வைத்துக் கொண்டு வீதிக்கு வந்து பாப் மார்லி பாடியதும், ஸ்ட்ரீட்- டான்ஸ் எனும் நடன வகையும், ராப் பாடல்களும் ஒடுக்கப்பட்டோருக்கான கலை வடிவங்களாக பாடப்படுகின்றன.
இந்த ராப் இசையை தன் ஆயுதமாக்கி உலகோடு பேச நினைக்கும் லேடி காஷ், ராப் இசைக்கும் வில்லுப்பாட்டுக்கும் இருக்கும் தொடர்பை உலகிற்கு எடுத்துச் செல்ல நினைத்து சமீபத்தில் ஒரு பாடல் வெளியிட்டிருக்கிறார். இந்த பாடல் வீடியோவில் வில்லுப்பாட்டு பாடும் பூங்கனி அம்மாவை சந்தித்து, ராப் இசைக்கு இந்தியாவில் ஒரு வேர் இருக்கிறது என நிறுவுகிறார் லேடி காஷ்.
ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், சந்தோஷ் நாராயணன் என பல இசையமைப்பாளர்களோடு வேலை செய்திருப்பவர், சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த தமிழ், ஆங்கிலத்தில் பாடல்கள் பாடி வரும் இந்தியப்பெண் லேடி காஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் பாரம்பரியத்தை கொண்டாடும் பலருக்கும் இந்த பாடல் பெரிய பரிசாக கிடைத்திருக்கிறது. இந்த பாடல் வீடியோவை பார்த்த தமிழக அரசின் தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், வீடியோவை பாராட்டியது மட்டுமல்லாமல், தமிழக அரசு பூங்கனி அம்மாவை சந்தித்து உதவிகள் வழக்கும் எனவும் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
லேடி காஷ் உடன் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய பிரத்யேக பேட்டி :
உங்களுடைய பேஷன் பற்றி சொல்லுங்கள்?
குழந்தையாக இருக்கும் போதே எனக்கு கவிதைகள் மீதும், தாளம் மீதும் ஒரு இயல்பான காதல் இருந்தது. அங்கிருந்து தான் நான் ராப்பிங் செய்வதும், பாடல்கள் எழுதுவதும் தொடங்கியது. ‘எந்திரன்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘இரும்பிலே ஒரு இருதயம்’ பாடல் பாடியது தான் எனக்கு கிடைத்த பிரேக் என நினைக்கிறேன்.
ராப் பாடத் தொடங்கவில்லையென்றால் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ராப் பாடுவது உங்களுக்கு எவ்வளவு முக்கியம்?
என்னால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை. ராப் இசை இல்லையென்றால் என் வாழ்க்கை அர்த்தமில்லாததாக இருந்திருக்கும்.
என்னுடைய இசை வாழ்க்கை வெறும் தொழிலாக மட்டுமே எனக்கு இருக்கவிலை. ஹிப் ஹாப் எனக்கொரு வாழ்க்கை முறை. இந்த உலகோடு நான் பேச தேர்ந்தெடுத்திருக்கும் ஆயுதம் தான் ராப் இசை. இதைக் கொண்டு மாற்றத்தை உருவாக்கவும், இந்த உலகை கொஞ்சம் சிறப்பானதாக்கவும் விரும்புகிறேன்.
கதை சொல்லுதல் என்பது உலகை ஆவணப்படுத்தும் வழியில் ஒன்று. அதனால் அதை ஒரு பொறுப்பாக எடுத்து செய்கிறேன்.
நீங்கள் வில்லுப்பாட்டுக்கு அறிமுகமானது எப்படி?
சிங்கப்பூரில் நான் படித்துக் கொண்டிருந்த போதே புத்தகங்களில் வில்லுப்ப்பாட்டைப் பற்றி படித்திருக்கிறேன். என்னுடைய அப்பா ஒருமுறை வில்லுப்பாட்டு பார்க்க என்னை அழைத்துப் போனார். அது மெலிதாக தான் நினைவில் இருக்கிறது என்றாலும் நினைவில் இருக்கிறது. நான் ‘ராப்’ பாடத் தொடங்கிய போது தான் எனக்கு வில்லுப்பாட்டிற்கும் ராப் இசைக்கும் இருக்கும் ஒற்றுமை புரிந்தது.
இந்தியாவினுடைய இசை கலாச்சாரத்தில் ஆச்சரியமளிப்பதாக இருப்பது எது?
இந்தியாவின் கலாச்சார வரலாறு ஆழமானது. மற்ற நாடுகளிடமும், இனங்களிடமும் இந்த பாரம்பரியத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. உண்மையான கலைகளையும், கலைஞர்களையும் கண்டுபிடித்து நாம் பராமரிக்க வேண்டியது அவசியம்.
பூங்கனி அம்மா போன்றவர்கள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். அவர்களுக்கு அரசாங்கம் இன்னும் நிறைய செய்ய வேண்டும். தற்போதைய தலைமுறைக்கு, இந்த கலைகளின் மரவை இழக்காமல், நவீன வழிகளை வைத்து அவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
வில்லுப்பாட்டையும் , ராப் இசையையும் ஒன்றாக்க நினைத்தது ஏன்?
வில்லுப்பாட்டு, இன்றைய நவீன ராப் இசை வளர ஒரு விதையாக இருந்திருக்கும் என நான் நம்புகிறேன். எனவே நம்முடைய வேர்களை கொண்டாடுவதன் முக்கியத்துவத்தை பற்றி ஒரு பாடல் எழுத நினைத்தேன். ராப் இசை மேற்குலகில் இருந்து வரும் கலை வடிவமாகவே எல்லாரும் நினைத்திருக்கிறார்கள். ராப் இசைக்கு கிழக்குலகிலும் வேர்கள் இருக்கிறது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
உங்களுடைய ரோல் மாடல்கள் பற்றி..?
எனக்கு உண்மையில் ரோல் மாடல்கள் என்று யாரும் இல்லை. நல்ல குணமும், வேலை தார்மீகமும் கொண்ட பல்வேறு மக்களை நான் மதிக்கிறேன். ஒவ்வொரு நாளும் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
‘ராப்’ இசை பாடத் தொடங்கும் ஒருவர் எப்படி தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது? தயக்கங்களை எல்லாம் எப்படி விட்டொழிப்பது?
ப்ராக்டீஸ், ப்ராக்டீஸ், ப்ராக்டீஸ். இணையத்தில் கிடைக்கும் மோடிவேஷனல் உரைகளை கேளுங்கள். தடைகளை உடைத்து மாற்றங்களை கொண்டு வந்திருக்கும் மக்களின் கதைகளை படியுங்கள். உங்களுடைய பேஷன் எதுவாக இருக்கிறதோ, அது தொடர்பாக நிறைய ஆய்வு செய்து, ஹோம் வொர்க் செய்யுங்கள். மிக முக்கியமாக, கற்றுக் கொள்ளவும், தோற்கவும், கேள்வி கேட்கவும் அஞ்சாதீர்கள்.
நீங்கள் நீங்களாகவே இருந்து ஜொலிப்பது அவசியம். வேறொருவரை போல நடித்து புகழ் பெறுவது ஒருவேலை சில காலத்திற்கு வெற்றிகரமாக நடக்கலாம், ஆனால், நிலைக்காது. உங்களுக்கென ஒரு தனி மரபை உண்டாக்குங்கள்.
வேர்களை மறக்க வேண்டாம் என பாடும் கலைஞர்கள் இருக்கும் வரையில் நமக்கு கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது!
பேட்டி உதவி : AKASHIK