வர்த்தகர்கள், தனிநபர்கள் தங்களின் எல்லா சேவை தேவைகளுக்கும் ’விசில் போடு’
"உள்ளூர் கடைக்கார ஆயா சுடச்சுட வடை ரெடியாக உள்ளது. அருகில் உள்ளவர்கள் உடனே வந்து வாங்கிச் சாப்பிடலாம்...,” இப்படி ஒரு அறிவிப்பு ஒரு செயலி மூலம் உங்களுக்குக் கிடைத்தால் எப்படி இருக்கும்?
ஆம் இது போன்ற உள்ளூர் தேவை மற்றும் இருப்பு பற்றிய தகவல்களை நிகர்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கும் ‘விசில்’ எனும் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கோயமுத்தூருக்கு அருகிலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தகவல் தொழில்நுட்பப் பொறியாளரான ராஜா எம் அப்பாச்சி. இவர் எம்சிஏ முடித்துள்ளார். டிசிஎஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக தனது பணி வாழ்க்கையைத் துவங்கி, டெவலப்பர், பிக் டேட்டா ஆர்கிடெக்ட் என பல்வேறு பதவிகளை வகித்து 20 ஆண்டு கால அனுபவம் பெற்றுள்ளார்.
ஸ்டார்ட் அப்கள் (நெட்ஃப்ளிக்ஸ்), டெலிகாம் (ஸ்பிரிண்ட்), வங்கி (சிட்டி பேங்க்), சுகாதாரம் (கெய்சர்) என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய இவர் ’ஒன்விசில்’ 'One Whistle Inc' நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ. இந்நிறுவனம் மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ’விசில்’ என்கிற ஜிபிஎஸ் ட்ராக்கிங் தளத்தை உருவாக்கியுள்ளது.
”விசில் சிறியளவிலும் மிகப்பெரிய அளவிலும் செயல்படும் உற்பத்தியாளர்களை நுகர்வோருடன் ஒன்றிணைக்கிறது. பயனர்களுக்கு எந்தவித சேவை தேவைப்பட்டாலும் அதை இந்தத் தளத்தில் பதிவிடலாம். அதே போல் அவர்கள் வழங்க விரும்பும் சேவைகளையும் இதில் பட்டியலிடலாம்," என்றார் ராஜா.
ஒருவர் வீட்டிலோ, அலுவலகத்திலோ, பயணத்திலோ எங்கு இருந்தாலும் அருகில் தயாரிப்பாளரோ அல்லது நுகர்வோரோ இருந்தால் உடனே அவருக்கு இந்தச் செயலி ஒலி எழுப்பி தெரியப்படுத்தும். சில்லறை வர்த்தகம், சமூகம், தனிநபர் சார்ந்த தேவைகள் இந்த தளத்தின் வாயிலாக பூர்த்திசெய்யப்படும்.
வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உகந்த பகுதிகளை சுட்டிக்காட்டும் திறன் கொண்டது விசில். இதனால் கணக்கெடுப்பு, தொடர் கண்காணிப்பு, தேடும் நடவடிக்கைகள் போன்றவை தவிர்க்கப்படும், என்றார் மேலும்.
ஸ்டார்ட் அப்பிற்கான உந்துதல்
மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது சவால் நிறைந்த பணியாகும். அதே சமயம் சிறு உற்பத்தியாளர்கள் தங்களது தற்போதைய சேவை குறித்து வெளிப்படுத்தவும் எளிமையான விதத்தில் புதுமைகளை படைக்கும் செயல்பாடுகளை தெரியப்படுத்தும் விதத்திலான செயலிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு சந்தையில் உள்ளது. உதாரணத்திற்கு பள்ளிப் பேருந்து எங்குள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள உதவும் செயலி இருந்தால் குழந்தைகளோ அல்லது பெற்றோரோ சரியான நேரத்தில் சென்றடைய முடியும்.
”நான் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது பகுப்பாய்வு பகுதி எனக்கு புதிதாக இருந்தது. வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் பொதுவாக யூகத்தின் அடிப்படையிலேயே கணிக்கப்படும். அவ்வாறின்றி மக்கள் தங்களது தேவை குறித்தோ அல்லது குறிப்பிட்ட தேவையை பூர்த்திசெய்பவர்களுடன் ஒருங்கிணையவோ உதவக்கூடிய ஒரு தளத்தை (விசில்) உருவாக்க விரும்பினேன்.”
அது வெறும் திட்டமாகவே இருந்தபோது பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். சிலர் மக்கள் தங்களது தேவைகளை உரக்க தெரிவிக்க விசில் தளத்தை பயன்படுத்த வைப்பது கடினமான செயல் என்றனர். சிலர் கூகுள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வைக் கண்டறிந்துவிடும் என்பதால் இவர் அதற்கு நேரம் செலவிட வேண்டாம் என்றும் மக்களிடையே நம்பிக்கையை வரவழைப்பது இயலாத செயல் என்றும் இந்த திட்டம் குறித்து பலர் எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தினர் என்று பகிர்ந்தார்.
ஒருமுறை ராஜா அப்பாச்சி ஸ்டாண்ட்போர்ட் கிராஜுவேட் பள்ளியின் துணை தலைவர் ராஜாவிடம் விசில் பற்றி விவாதிக்கையில், அவர்,
“நடு இரவில் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மாணவன் ஒருவன் விசில் அடித்து யாரிடம் பீர் இருக்கிறது என சகமாணவர்கள் மத்தியில் கேட்கலாம் அல்லவா? இந்த விசில் முயற்சியின் ஆழம் குறித்து என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால் உன் முன்னால் பல சவால்கள் உள்ளன. இம்முயற்சிக்கு உண்மையில் எது பிரச்சனையாக இருக்கும் என்பதை கண்டறிந்து அந்தப் பிரச்சனையை தீர்த்துவிடு. நீ வளர்ச்சியடையத் துவங்குவாய்,” என்று அறிவுரைத்துள்ளார். அவர் ராஜாவிற்கு ஆதரவளித்து நிறுவனத்தின் ஆலோசகராகவும் இணைந்துகொண்டார்.
பின்னர் ‘OneWhiste Inc' என்ற நிறுவனத்தை தொடங்கிய ராஜா அப்பாசி உடன் கார்த்திக் சுப்பிரமணியம், சிவா ஜெயராமன், பரிமளா நாகராஜன் மற்றும் பிரகாஷ் பள்ளக்கரை ஆகியோர் நிறுவனர்களாக இணைந்தனர்.
விசில்-ன் வளர்ச்சி மற்றும் ஒப்பந்தங்கள்
எய்ட்வுட்ஸ் நிறுவனத்துடன் பார்ட்னராக இணைந்து ’Omamori’ என்கிற செயலியை ஜப்பானில் அறிமுகப்படுத்தியது விசில். இந்த செயலி சுற்றுலாப்பயணிகளை மொழிபெயர்ப்பாளர்கள், வழிகாட்டிகள், விற்பனையாளர்கள் போன்றோருடன் இணைக்கிறது.
இந்த முயற்சி வாயிலாக எய்ட்வுட்ஸ் நிறுவனத்திற்கு ஆண்டு வருவாயாக 30 மில்லியன் டாலரும் விசில் நிறுவனத்திற்கு ஆண்டு வருவாயாக 3 மில்லியன் டாலரும் கிடைத்தது.
இந்தியாவில் விசில் 50,000 பதிவிறக்கங்களுடன் ரத்த தானம் செய்வோரை நோயாளிகளுடன் இணைத்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் கூப்பன்களுக்காக இந்தியாவிலுள்ள நேச்சுரல்ஸ் சலூன் நிறுவனத்துடன் விசில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
பேருந்தில் பயணிக்கக் காத்திருக்கும் பயணிகளை பேருந்து நடத்துனர்களுடன் இணைத்து வருவாயையும் பேருந்து போக்குவரத்தையும் அதிகரிக்க ஆந்திரப்பிரதேச மாநகர போக்குவரத்துக் கழகம் விசில் நிறுவனத்தை அணுகியுள்ளது என்றார் ராஜா.
பயணிகள் தங்களது அன்றாட போக்குவரத்து ஏற்பாடுகளை சிறப்பாக திட்டமிட உதவும் வகையில் நிகழ்நேர தகவல்களை வழங்கி அவர்களை அரசுப் பேருந்துடன் இணைக்க (நாள் ஒன்றிற்கு 20 மில்லியன்) விசில் நிறுவனத்தை அணுகியுள்ளது தமிழ்நாடு மாநகரப் போக்குவரத்துக் கழகம்.
டேக்ஸி ஓட்டுநர்களின் மேம்பாட்டிற்காக விசில் நிறுவனத்துடன் இணைந்துகொள்ளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது மஹாராஷ்டிர அரசாங்கம் என்று தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து விவரித்தார் ராஜா அப்பாச்சி.
விசில் தீர்வளிக்கும் பிரிவு
இன்று சிறியளவில் சேவை/தயாரிப்புகளை வழங்குவோர்களை நேரடியாக உள்ளூர் வாடிக்கையாளர்களை இணைக்கவோ அதே போல் வாடிக்கையாளர்களை சேவை/தயாரிப்பை வழங்குவோருடன் இணைக்கும் விதத்திலோ எந்த ஒரு தளமும் செயல்படவில்லை.
”சிறியளவில் சேவை வழங்குவோர் தங்களது சேவை குறித்து வெளிப்படுத்தி பயிற்சி பெற்று சிறப்பாக தொழில் புரிய உதவுகிறோம். உதாரணத்திற்கு அருகாமையிலுள்ள சலவைக்காரர் அந்த நிமிடத்தில் சேவை வழங்கத் தயாராக இருப்பதை அறிவிப்பார்.”
இவர்களது தளத்திற்கான கட்டணம் மிகவும் குறைந்த விலையில் உள்ளது. உற்பத்தியாளரின் அளவைப் பொருத்து ஒரு மாதத்திற்கு 0-20 டாலர் வரை சந்தா வசூலிக்கப்படுகிறது.
விசில் செயல்பாடுகளில் 20 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு அவர்களது உழைப்பிற்கு ஏற்றவாறான பங்குகளில் ஊதியம் கிடைக்கிறது.
ஆலோசகர் மற்றும் நிதி
ராஜாவின் ஆலோசகர்களே நிறுவனத்துக்கு வழிகாட்டிகளாக உள்ளனர். அவர்கள் தன்னிடம் எப்போதும் கூறும் வரிகளான ‘செய்வன திருந்தச் செய்’ என்பதை ஆழமாக பின்பற்றுவதாக தெரிவித்தார்.
டெஸ்லா மோட்டார்ஸ் முன்னாள் சிஐஓ ஜெய் விஜயன் 50,000 டாலர் தொகையும், தென்றல் மேகசின் சிஇஓ 50,000 டாலர் தொகையும், நிறுவனர்கள் 2,80,000 டாலர் தொகையும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 1,00,000 டாலர் தொகையும் அளித்து விசில் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
சந்தித்த சவால்கள்
சேவை வழங்குவோர், வாடிக்கையாளர்கள் என இருவருமே விசில் தளத்தில் செயல்படவேண்டிய தேவை இருப்பதால் யாரை முதலில் இணைப்பது என்ற பிரச்சனை எழுந்தது.
விசில் சேவைகள் பல பிரிவுகளில் விரிவடைதற்கான சாத்தியம் இருக்கையில் ஒரே ஒரு பகுதியில் கவனத்தை செலுத்தி குறைந்த நேரத்தில் வளர்ச்சியை எட்டுவதற்கு போராட்டத்தை சந்திக்கவேண்டியிருந்தது.
இருப்பினும் இந்தியா போன்ற அதிக மக்கள் வசிக்கும் நாட்டில் சேவையும், தேவையும் தொழில்நுட்பம் மூலம் இணைக்கப்படவேண்டிய அவசியம் உள்ளதால் இந்த விசில் முயற்சி பல மாநிலங்களில் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர் ராஜா மற்றும் அவரது குழுவினர்.