பத்திரிகை உலகில் ஒரு வலுவான இடத்தை விட்டுச் சென்ற பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ்!
மூத்த கன்னட பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், திரைப்படத் தயாரிப்பாளர், பிரபலமான நாடக நடிகர் மற்றும் சிறந்த அரசியல் விமர்சகருமான கௌரி லங்கேஷ் செவ்வாய்க்கிழமை இரவு அவரது இல்லத்தில் கொல்லப்பட்டார். முகம் தெரியாத நபரால் சுடப்பட்டார்.
கெளரி லங்கேஷ் 1962ல் கவிஞர்-பத்திரிகையாளரான பி. லங்கேஷ்க்கு மகளாக பிறந்தார். முதல் முதலில் 'டைம்ஸ் of இந்தியா' பத்திரிக்கையில் இணைந்து ஒரு பத்திரிகையாளராய் தன் பயணத்தை தொடங்கினார். 2000-ல் தன் தந்தையை பறிகொடுத்த கௌரி அவர் நடத்தி வந்த லங்கேஷ் பத்திரிக்கையை தனது சகோதரருடன் இணைந்து நடத்தினார். தன் தந்தை இறந்த பொழுதே 16 வருடம் ஊடகத்தில் பணிப்புரிந்திருந்தார். தன் சகோதரருடன் ஏற்பட்ட வேறுப்பாட்டால் லங்கேஷ் பத்திரிக்கையில் இருந்து வெளியேறி “கௌரி லங்கேஷ் வார பத்திரிக்கை” என்ற பெயரில் தொடர்ந்தார்.
கௌரி லங்கேஷ் வார பத்திரிக்கையில் சர்ச்சைக்குரிய பல செய்திகளை பாரபட்சமின்றி எழுதியவர். வலதுசாரி இந்துத்துவ கட்சியின் கடுமையான விமர்சகர். தனது பத்திரிக்கை மற்றும் எழுத்தின் மூலம் அச்சமின்றி பல வலுவான செய்திகளை கௌரி கொடுத்துள்ளார்.
அவரது ‘Kanda Hagey’ நான் பார்ப்பதை போல என்ற பத்தியில் அரசியல் அல்லது சர்ச்சைக்குரிய பல செய்திகளை தான் பார்த்தவாறே எழுதுவார். இறுதியாக அவரது கடைசி நிரலில் போலி செய்தி மற்றும் பொய்களை பரப்பும் ஆளும் கட்சியின் பரந்த பிரச்சாரத்தை பற்றி எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2008-ல் கௌரி மீது அதிக வெளிச்சம் படத் தொடங்கியது, காரணம் தன் பத்திரிக்கையில் அவர் சில அரசியல் தலைவர்களை பற்றி விமர்சித்து எழுதியதே ஆகும். அதனால் அவர்மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது, பின் அதற்காக அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் 10000 ரூபாய் அபராதம் வழங்கப்பட்டது. இருப்பினும் முன்கூட்டியே ஜாமீன் பெற்று வெளியேறினார் கௌரி. அவருக்கு எதிரான வழக்கை எதிர்த்து ஒரு பத்திரிகையாளர் தன் கட்டுரையின் ஆதாரத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறி அவரது கூற்றுகளுக்கு ஆதாரங்களை வழங்க மறுத்துவிட்டார்.
ஒரு பத்திரிக்கையாளராய் என்றும் நிலையாக நின்று எந்த பக்கமும் பரிந்து பேசாமல் துணிச்சலாய் பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர் சுதந்திரத்திற்கு ஒரு முன்னோடியாய் இருந்தார் கௌரி லங்கேஷ்.
அவரது இந்த கொடூர மரணத்தை தொடர்ந்து பலர் தங்கள் அனுதாபங்களை ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தி வருகின்றனர். அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலர் கௌரி லங்கேஷ்க்கு இரங்கல் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.
நாடெங்கிலும் பத்திரிகைத்துறை, ஊடகத்துறையைச் சேர்ந்த பலரும் கெளரி லங்கேஷ் கொலைக்கான நீதி கிடைக்கவேண்டும் என்றும் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் போராட்டமும், இரங்கல் கூட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி
பெங்களூரில் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷைக் கொன்றது மிகவும் வருத்தமளிக்கிறது. மிகவும் துரதிர்ஷ்டம் மற்றும் ஆபத்தானது, இதற்கு நிச்சயம் நீதி தேவை என ட்வீட் செய்துள்ளார்.
கர்நாடக முதல் அமைச்சர்,
மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூர செயல் கண்டனத்திற்குரியது எனவும். மேலும் நான் டிஜிபி யுடன் பேசியிருக்கிறேன், குற்றவாளிகளை உடனடியாக நீதிக்கு முன் கொண்டு வருமாறும் மற்றும் முழுமையான விசாரணையை உறுதி செய்யும்படி அறிவித்துள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார்.
ஒரு பக்கம் அவருக்கு இரங்கல் தெரிவிக்க பலர் அவருக்கு எதிரான சர்ச்சைக்குரிய பல செய்திகளை ட்விட்டரில் பரப்பி வருகின்றனர். கௌரி லங்கேஷ் ஒரு குற்றவாளி என்றும் அவருக்கு இறுதி மரியாதை தேவை இல்லை என்று ஒரு சில முக்கிய பிரபலங்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
அவரது இறுதி சடங்கு எந்த வித மதச்சார்பின்றி நிறைவேற்றப் பட்டது. அவரது அடக்கத்தில் கௌரியின் சகோதரர் இந்தரஜித் லங்கேஷ், அவரது தாயார், குடும்பம், நண்பர்கள், நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் பசவ குரு ஜெயு சுவாமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
"கௌரி ஒரு பகுத்தறிவாளராக இருந்தார், எந்த மத பழக்கவழக்கத்திலும் நம்பிக்கை வைக்கவில்லை, சடங்கின் போது அவரது கருத்தாக்கத்திற்கு எதிராக நாங்கள் செல்லமாட்டோம்,”
என்று அவரது சகோதரர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.
கௌரி லங்கேஷ் இறுதியாக தனது ட்விட்டர் பக்கத்தில்,
“நாம் அனைவரும் போலி செய்திகளை பரப்பி தவறு செய்கிறோம் நாம் ஒருவருக்கொருவர் எச்சரித்துக்கொள்வோம்...” என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் நமது பெரிய எதிரி யாரென்று தெரியும் ஏன் நமக்குள் சண்டைப் போட்டு கொள்கிறோம் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். இதன் மூலம் அவரக்கு ஆபத்துகள் உள்ளது என்று அவர் ஏற்கனவே அறிந்திருப்பார் என பலர் யூகிக்கின்றனர்.
கத்தி முனையை விட பேனா முனை வலிமை வாய்ந்தது என்ற பழமொழிக்கு மாறாக இன்று கத்தி முனையே கூர்மையானது என நிரூபனமானது. ஓங்கி நின்ற குரல் இன்று அடங்கியது.