250 சிறுகதைகளையும் 14 புத்தகங்களையும் மொழி பெயர்த்துள்ள கட்டுமானப் பணியாளர்!
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தின் பசுமையான சூழலில் வசிக்கும் ஷஃபி செருமாவிலாயி ஒரு எழுத்தாளர். இவர் தினக்கூலியாக உள்ளார். இவர் இதுவரை தோப்பில் முகமது மீரான், பெருமாள் முருகன், சல்மா, ஜி திலகவதி, சோ. தர்மன், எஸ் பாலபாரதி, ஆர் மாதவன், கந்தசாமி, மேலாண்மை பொன்னுசாமி, மீரன் மொஹிதீன், சுப்ரபாரதிமணியன் ஆகியோரது படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார்.
தீவிர இலக்கிய ஆர்வலரான ஷஃபி 250 சிறுகதைகளையும் 14 புத்தகங்களையும் தமிழில் இருந்து மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார். 1980-களில் பெங்களூருவில் ஒரு டீக்கடையில் பணிக்குச் சேர்ந்தபோதுதான் முதலில் தமிழ் மொழிக்கு பரிச்சயமானார். இந்த மொழியின் மீது பற்று இருப்பதை உணர்ந்து திரைப்படங்களின் பெயர்கள், உரையாடல்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள் போன்றவற்றை ஆராயத் துவங்கினார். அதன் பிறகு தமிழில் புத்தங்களை படிக்கத் துவங்கினார். பின்னர் தனது தாய்மொழியான மலையாளத்தில் அவற்றை மொழிபெயர்த்தார்.
ஒரு மலையாள செய்தித்தாளில் இவரது பணி வெளியிடப்பட்டது. அதுவரை அவர் மொழிபெயர்ப்பை ஒரு பொழுதுபோக்காகவே கருதினார். விரைவில் பெங்களூருவில் இருந்து மாற்றலாகி கண்ணூர் சென்றார். அங்குள்ள பத்திரிக்கை ஆசிரியர்களையும் வெளியீட்டாளர்களையும் அணுகி அவர்களது புத்தகங்களை மொழிபெயர்க்க அனுமதி கோரினார். இவரது முதல் மொழிபெயர்ப்பு தோப்பில் மீரான் எழுதிய ’அனந்த சயனம் காலனி’ என்கிற சிறுகதை தொகுப்பு. இந்தப் புத்தகம் 2008-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.
’தி நியூஸ் மினிட்’ உடனான நேர்காணலில் இவர் குறிப்பிடுகையில்,
“நான் பத்திரிக்கைகளில் கதைகள் படிக்கத் துவங்கினேன். அது பிடித்திருந்தால் கதாசிரியருக்கு கடிதம் எழுதி ஒரு பிரதியை பெற்றுக்கொள்வேன். அந்தக் கதையை மொழிபெயர்க்க அனுமதியும் கேட்பேன். பலர் எனக்கு அனுமதி அளித்தனர்,” என்றார்.
கட்டுமானப் பணியாளராக இருக்கும் ஷஃபி இரவு நேரங்களை மொழிபெயர்ப்பிற்காக ஒதுக்குகிறார். இவர் நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே உள்ள குடும்பத்தில் பிறந்ததாகவும் இவரது அப்பா குடும்பச் செலவுகளை பராமரிக்க மீன் விற்பனை செய்ததாகவும் தனது குழந்தைப் பருவம் குறித்து நினைவுகூறுகையில் குறிப்பிட்டார். எனினும் இவரிடம் எப்போதும் புத்தகங்கள் இருந்தது.
”என் கிராமத்தில் உள்ள பொது நூலகங்கள் எனக்குப் பெரிதும் உதவியது. நான் நிறைய புத்தகங்களைப் படித்தேன். புத்தகங்கள் வாங்குவதற்காக அனைத்து பணிகளையும் செய்தேன். என்னுடைய பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் இலக்கியம் படிக்க ஊக்குவித்தனர். ஆனால் அதன் பிறகு நான் எழுதுவதற்கு எந்தவித ஊக்குவிப்பும் கிடைக்கவில்லை. என்னைச் சுற்றியிருந்த அனைவருமே வருவாய் ஈட்டுவதற்காகவே போராடி வந்தனர்,” என்றார்.
2013-ம் ஆண்டு ஆன்லைன் புத்தக விற்பனைக்கு இணையதளம் வழிவகுத்த காலகட்டத்தில் இவர் அவன்–அது = அவள் புத்தகத்தை மொழிபெயர்த்தார் என ’தி ஹிந்து’ தெரிவிக்கிறது. அப்போதிருந்து இவருக்கு சாதகமான சூழலே இருந்து வருகிறது.
எனினும் தனது குடும்பத்தைப் பராமரிக்க மாற்று வழி கிடைக்குமானால் ஷஃபி எழுத்துப்பணியில் முழுநேரமாக ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார்.
கட்டுரை : THINK CHANGE INDIA