அப்துல் கலாமிற்கு கோயிலில் சிலை வைத்த மக்கள்!
நம் தமிழகத்தை பொறுத்தவரை பிரபலங்களுக்கு சிலை வைப்பது புதியது அல்ல. சிலையையும் தாண்டி பல நடிகைகளுக்கு கோயில் கூட கட்டியுள்ளனர் ரசிகர்கள். ஆனால் முதல் முறையாக ராமேஸ்வர கோயில் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாட்டின் 11வது குடியரசுத் தலைவராக பதவியேற்று 2002ம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அவர்களுக்கு மற்ற அரசியல் தலைவர்களை விட தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ராமேஸ்வரத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் கலாம் அவர்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்பது இச்சிலை மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
கோயில் கோபுரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் அப்துல் கலாம் சிலையின் புகைப்படத்தை முன்னாள் இந்திய கிரிக்கட் வீரர் முகமது கைப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
“அப்துல் கலாம் சிலையை பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது; அனைவரையும் உத்வேகப்படுத்தும் உண்மையான ஹீரோ அவர்...” என ட்வீட் செய்திருந்தார் கேய்ப்.
அதனை தொடர்ந்து பல நெட்டிசன்களும் அப்துல் கலாமை பாராட்டியும் நினைவு கூர்ந்து பல ட்வீட்களை செய்திருந்தனர். அப்துல் கலாமால் தான் தமிழகதிற்கும் தமிழ் மக்களுக்கும் பெருமை என்றும் புகழாரம் சூற்றி வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு மறைந்த அப்துல் கலாம் அவர்களுக்கு மக்கள் செய்யும் ஒருவித மரியாதை இது.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்