நெட்பிலிக்சில், இயேசுநாதரை தவறாக சித்தரிக்கும் படத்தை நீக்குமாறு 1.5 மில்லியன் பேர் மனு!
Change.org தளத்தில் துவக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை மனுவுக்கு ஆதரவாக 1.5 மில்லியன் பேருக்கு மேல் கையெழுத்திட்டுள்ளனர்.
இயேசுநாதர் ஓரினச்சேர்க்கை உறவில் இருந்தது போல, சித்தரிப்பதாகக் கூறப்படும் திரைப்படத்தை நீக்க வேண்டும் என, ஆன்லைன் ஸ்டிரீமிங் சேவையான ’நெட்பிலிக்ஸ்’ நிறுவனத்தை வலியுறுத்தும் ஆன்லைன் மனுவில் 1.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.
"தி ஃபர்ஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிரைஸ்ட்", எனும் இந்த போர்சுகிசிய மொழிப் படம், பிரேசில் நாட்டில் நெட்பிலிக்ஸ் சேவையில் டிசம்பர் 3 ம் தேதி வெளியானது. இயேசுநாதர் மற்றும் அவரது நண்பர் ஆர்லாண்டோ இடையே ஓரினச்சேர்க்கை உறவு இருந்ததாக சித்தரித்ததால் இந்த படம் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இயேசுநாதரின் தாய் மேரி, கஞ்சா புகைப்பது போல் இந்த படம் காண்பிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், போர்டா டாஸ் பண்டோஸ் (பேக்டோர்) எனும் குழு உருவாக்கிய இந்த படத்தை நீக்குமாறு, Change.org இணையதளத்தில் ஆன்லைன் மனு உருவாக்கப்பட்டு, இதுவரை 1,529,504 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
"நெட்பிலிக்சில் இருந்து படத்தை நீக்க வேண்டும் மற்றும் விஷமத்தனமான நம்பிக்கையை ஏற்படுத்திய குற்றத்திற்காக பேக்டோர் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கிறிஸ்துவர்கள் மத உணர்வுகளை புண்படுத்தியிருப்பதால், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்று அந்த ஆன்லைன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் நெட்பிலிக்சில் இந்த படம் பார்க்கக் கிடைக்கவில்லை என்றாலும், கிறிஸ்துவ அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்தியன் கிறிஸ்டியன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஆப்ரகாம் மதாய், இது தொடர்பாக நெட்பிலிக்ஸ் சி.இ.ஓ, ரீட் ஹாஸ்டிங்சிற்கு திறந்த கடிதம் அனுப்பியுள்ளார். இந்த படம் விஷமத்தனமாக, விவகாரமாக, மாண்பை குலைக்கும் வகையில் இருப்பதாகவும், கிறிஸ்துவர்களின் மத உணர்வுகளை ஆழமாக பாதித்திருப்பதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.
"கருத்து சுந்தந்திரம் என்பது அடிப்படை உரிமை என்றாலும், இதே உரிமையை குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை காயப்படுத்த பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது,’ என்று அவர் கூறியுள்ளார்.
”21 ம் நூற்றாண்டில் டிஜிட்டல் அலை, உலகை நம் உள்ளங்கையில் கொண்டு வந்திருக்கும் நிலையில், வரலாறு மற்றும் எதிர்காலம் தொடர்பான தகவல்களின் பாண்டோரா பெட்டிக்கு நாம் இலக்காகி இருக்கிறோம். இந்த ஊடகத்தை நாம் விரும்பினாலும், இதை வரலாற்று நோக்கில் மோசமாக ஒருவர் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நையாண்டி என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையை கிறிஸ்து மதத்துடன் தொடர்ப் படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளவர், இந்த படத்தை நெட்பிலிக்ஸ் நீக்குவதோடு, கிறிஸ்துவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, பேக்டோர் குழு, படைப்பு சுதந்திரம் மற்றும் நையாண்டி முக்கியம் என்றும், ஜனநாயக நாட்டின் செயல்பாட்டிற்கு கருத்து சுதந்திரம் அவசியம் என்று கூறியுள்ளது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ள நிலையில், நெட்பிலிக்ஸ் நிறுவனம் இது தொடர்பாக இன்னமும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்