வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவும் சுதா மூர்த்தியின் 10 மேற்கோள்கள்!
விருதுகள் வென்ற, எழுத்தாளரான சுதா மூர்த்தி மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார். வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவும் இவரது மேற்கோள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவைச் சேர்ந்த லாப நோக்கமற்ற நிறுவனமான 'இன்போசிஸ் அறக்கட்டளை’ நலிந்த மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கிறது. இதன் தலைவர் சுதா மூர்த்தி கொடையாளி. விருதுகள் வென்ற நூலாசிரியர். பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். இவர் கல்வி, கிராமப்புற வளர்ச்சி, சுகாதார பராமரிப்பு, பொது சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் இத்தகைய மக்களின் நிலையை மேம்படுத்துகிறார்.
How I Taught My Grandmother to Read என்கிற இவரது புத்தகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் புத்தகம் தொடர்ந்து பலருக்கு உந்துதலளித்து வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்காக பாடப்புத்தகங்களிலும் இது இணைக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். Here, There and Everywhere, The Mother I Never Knew, Three Thousand Stitches போன்றவை இவர் எழுதிய புத்தக தொகுப்பில் அடங்கும்.
பலதரப்பட்ட மக்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுதா மூர்த்தி மற்றவர்களுக்கு சேவை செய்வதிலேயே அதிக ஆர்வம் இருப்பதை உணர்ந்தார். இவர் தனது வாழ்க்கையில் லட்சியத்தை நோக்கி சிந்திக்க இவரது மகள் தூண்டுகோலாக இருந்துள்ளார். இதன் காரணமாக சுமார் இருபதாண்டுகளுக்கு முன்னர் வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கியதாக சுதா மூர்த்தி குறிப்பிடுகிறார்.
நீங்களும் உங்களது வாழ்க்கையை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவக்கூடிய, சுதா மூர்த்தியின் 10 மேற்கோள்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
”நீங்கள் அனைவரையும் திருப்திப்படுத்த முயன்றால் அது சாத்தியமல்ல. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அமைத்துக்கொள்ள முடியாது.”
”இயற்கை மிகவும் புத்திசாலி. உங்கள் தோற்றம் எப்படி இருந்தாலும், நீங்கள் புத்திசாலியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வசதி படைத்தவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்களிடம் இருப்பது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் மட்டுமே. இந்த நேரத்திற்குள் உங்களது பிரச்சனைகள், தீர்வுகள் அனைத்தையும் நீங்கள் கையாளவேண்டும்.”
”நீங்கள் புத்திசாலியாக இருந்தாலும், வசதி படைத்தவராக இருந்தாலும், மற்றவர்களுடன் சிறப்பாக ஒருங்கிணைந்து வாழ்பவராக இருந்தாலும், உங்களிடம் விடாமுயற்சியும் துணிச்சலும் இருந்தால் மட்டுமே உங்களால் வெற்றியடையமுடியும்.”
”வாழ்க்கை ஒரு தேர்வு. இதற்கான பாடதிட்டம் ஒருவருக்கும் தெரியாது. வினாத்தாள் தயாராக இல்லை. உங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும் மாதிரி விடைத்தாள்களும் இல்லை.”
”நெருப்பை நெருப்பால் அணைக்கமுடியாது. தண்ணீரால் மட்டுமே அது சாத்தியப்படும்.”
”நீங்கள் தற்சாற்புடன் இருக்கவேண்டும். உங்களுக்குள் துணிச்சல் இருப்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இதற்கு அவகாசம் தேவைப்படும். ஆனால் நீங்கள் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.”
”செயல்பாடுகள் ஏதுமற்ற நோக்கம் வெறும் கனவிற்கு சமம். நோக்கமற்ற செயல்பாடுகள் நேரத்தைக் கடத்துவதற்கு சமம். ஆனால் சரியான நோக்கத்துடன்கூடிய செயல்பாடுகளே மாற்றத்தை ஏற்படுத்தும்.”
”தனியாக இருப்பதற்கும் தனிமையில் இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. தனியாக இருப்பது சோர்வளிக்கும். ஆனால் தனிமையில் இருப்பது சுய ஆய்விற்கும் சுய சிந்தனைக்கும் வழிவகுக்கும்.”
”சாதனை, விருது, பட்டம், பணம் போன்றவற்றைக் காட்டிலும் நல்ல உறவு, இரக்கக் குணம், அமைதியான மனநிலை போன்றவை முக்கியம்.”
”உங்களுக்குத் தேவையான, சரியான சுதந்திரத்தைப் பெறுவதே வாழ்க்கையில் விலைமதிக்கமுடியாத விஷயம்.”
ஆங்கில கட்டுரையாளர்: சஷா ஆர் | தமிழில்: ஸ்ரீவித்யா