சுற்றுச் சூழலை பாதுகாக்க இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த 11 வயது ஆர்வலர்!
அதிக மாசு ஏற்படுத்துவதாக ஐந்து நாடுகள் மீது வழக்கு தொடர்ந்துள்ள 16 குழந்தைகளில் 11 வயது ரிதிமா பாண்டேவும் ஒருவர்.
16 வயதான க்ரேடா தன்பெர்க் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் பருவநிலை மாற்றம் தொடர்பாக போராடி வருகிறார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை மாநாட்டில் க்ரேடா உரையாற்றினார். இதில் உலக தலைவர்களிடம் பருவநிலை மாற்றங்களின் விளைவுகள் குறித்து ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.
பின்னர் க்ரேடாவுடன் ரிதிமா பாண்டே உள்ளிட்ட 15 இளம் ஆர்வலர்கள் இணைந்து கொண்டனர். இவர்கள் அர்ஜெண்டினா, பிரேசில், பிரான்சு, ஜெர்மனி, துருக்கி ஆகிய நாடுகளுக்கு எதிராக புகார் பதிவுசெய்தனர். இந்த நாடுகள் அதிக மாசு ஏற்படுத்துவதாக இந்த ஆர்வலர்கள் நம்புகின்றனர். உலகத் தலைவர்களின் செயலால் எதிர்கால சந்ததியினர் ஆபத்தை சந்திக்க உள்ளதாக இவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்ததாக Firstpost தெரிவிக்கிறது.
உத்தர்கண்ட் பகுதியைச் சேர்ந்த 11 வயது ரிதிமா பாண்டே முதலில் நமஸ்தே என்கிற வார்த்தையுடன் உரையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் இந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஐக்கிய நாடுகள் மாநாட்டில் ரிதிமா கூறும்போது,
”உலக தலைவர்கள் அனைவரும் பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். இதைச் செய்யத் தவறினால் நம் எதிர்காலம் பாதிக்கப்படும்,” என்றார்.
பிரான்சு, ஜெர்மனி, பாலவு, மார்ஷல் தீவு, நைஜீரியா, தென்னாப்ரிக்கா, அர்ஜெண்டினா, பிரேசில், ஸ்வீடன், துனிஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 8 முதல் 17 வயதுடைய 14 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். இவர்களில் ரிதிமாவும் ஒருவர்.
அரசாங்கத்தையும் மற்ற நிறுவனங்களையும் எதிர்த்து பருவநிலை மாற்றம் தொடர்பாக இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் குரல் கொடுப்பது இது முதல் முறையல்ல.
முதலில் 2017-ம் ஆண்டு சுற்றுச்சூழல் சட்டங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதற்காக இந்திய அரசை எதிர்த்து இவரது சட்ட பாதுகாவலர் மூலமாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த சமயத்தில் ஒன்பது வயதான ரிதிமா, மாசு பிரச்சனைகளையும் தொடர்ந்து சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளையும் சுட்டிக்காட்டினார். தொழில்துறை திட்டங்களை மதிப்பீடு செய்யுமாறும் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த ’கார்பன் பட்ஜெட்’ தயாரிக்குமாறும் தேசிய பருவநிலை மீட்பு திட்டத்தை உருவாக்குமாறும் அரசாங்கத்திடம் அவர் கோரிக்கை விடுத்ததாக Reuters தெரிவிக்கிறது.
ரிதிமாவின் அப்பா தினேஷ் பாண்டே அவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர். 2013-ம் ஆண்டு உத்தர்காண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வசிப்பிடத்தை இழந்து தவித்தனர். அந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர் என்பதால் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை இவர் நன்கறிவார்.
”ரிதிமா இளம் வயதிலேயே பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளை அறிந்திருந்தார். இதனால் வருங்காலத்தில் அவருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை நினைத்து அவர் மிகுந்த கவலையடைந்தார்,” என்று ரிதிமாவின் வழக்கறிஞரான ராகுல் சௌத்ரி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான வலைதளம் ஒன்றில் (Children vs Climate Crisis) இந்த இளம் ஆர்வலரைப் பற்றிய குறிப்புகளில் இவரது விருப்பம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
”என்னுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அதைப் பாதுகாக்க விரும்புகிறேன். எனக்காக மட்டுமின்றி இனிவரும் சந்ததியினர் அனைவருக்காகவும் வருங்காலத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன்,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA