மூன்று சக்கர வண்டியில் பெற்றோரை 600 கி.மீ தூரம் ஊருக்கு அழைத்துச் சென்ற சிறுவன்!
ஊரடங்கால் தவித்த பெற்றோரை 11 வயதான தபாரக் தொடர்ந்து ஒன்பது நாட்கள் மூன்று சக்கர வண்டியை ஓட்டி சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கொரோனா ஊரங்கு காரணமாக பலர் சொந்த ஊர் திரும்ப நீண்ட தூரம் நடந்தே செல்லும் காட்சிகள் நம் மனதை உலுக்கச் செய்கிறது. படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டாலும்கூட போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.
தபாரக் 11 வயது சிறுவன். இவரது பெற்றோருக்கு ஆறு குழந்தைகள். இவர் ஐந்தாவது குழந்தை. தபாரக் உத்திரப்பிரதேசத்தின் வாரனாசி பகுதியில் இருந்து பீஹாரின் அராரியா பகுதிக்கு தனது பெற்றோரை கூட்டிச் சென்றுள்ளார். மூன்று சக்கர வண்டியில் பெற்றோரை உட்காரவைத்து தொடர்ந்து ஒன்பது நாட்கள் ஓட்டி ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இவர்கள் தங்கள் ஊரைச் சென்றடைய 600 கி.மீட்டர் வரை பயணத்துள்ளனர். இவர்களுக்கு சொந்த நிலம் இல்லை. அராரியாவின் ஜோகிஹாத் பிளாக்கில் ஒரு குடிசையில் வசித்து வருகின்றனர். இவரது அப்பா இஸ்ராஃபிலுக்கு ஒரு விபத்து காரணமாக காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவரது அம்மா சோக்ராவிற்கு நெல் அறுவடை செய்யும்போது ஏற்பட்ட காயத்தால் கண்ணில் பார்வை இல்லாமல் போனது.
“நான் வேலை செய்துகொண்டிருந்த நான்காவது நாள் என் காலில் கல் விழுந்தது. கடை உரிமையாளர் எனக்கு மருத்துவச் சிகிச்சை வழங்கினார். ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்புதான் என் மனைவியும் மகனும் என்னைப் பார்க்க வந்தார்கள். எங்களுக்கு உணவு இல்லை. மூன்றுசக்கர வண்டி மட்டும் இருந்தது. எனவே இங்கேயே பட்டினி கிடக்காமல் ஊருக்குத் திரும்பலாம் என்று கிளம்பினோம். ஆனால் கடவுள் கருணையால் வழியில் நாங்கள் சந்தித்தவர்கள் நாங்கள் பாதுகாப்பாக ஊர் திரும்ப உதவினார்கள்,” என்று 55 வயதான இஸ்ராஃபில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஊர் திரும்பியதும் தபாரக், இஸ்ராஃபில் இருவரும் அரசுப் பள்ளி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதே இடத்தில் பெண்களை தனிமைப்படுத்தும் வசதி இல்லாத காரணத்தால் சோக்ரா வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.
“தற்சார்புடன் திகழும் மிகவும் இளம் வயதினரான 11 வயது சிறுவன் தபாரக்கிற்கு வாழ்த்துக்கள்,” என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் மது சிங் எழுதியுள்ளதாக `ஸ்டோரிபிக்’ குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் 15 வயதான ஜோதி டெல்லியில் இருந்து பீஹாரின் தர்பாங்கா வரை காயம்பட்ட தனது அப்பாவை உட்கார வைத்து சைக்கிளில் அழைத்துச் சென்ற சம்பவம் நடந்தது.
தபாரக், ஜோதி போன்றோர் நம்பிக்கைக்கும் மன உறுதிக்கும் எடுத்துக்காட்டாக இருப்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்தினாலும் புலம்பெயர் தொழிலாளர்களும் தினக்கூலிகளும் சந்திக்கும் துயரநிலையை நம் மனதில் ஆழமாகப் பதியவைக்கிறது.
கட்டுரை: THINK CHANGE INDIA