PEAT - இந்திய விவசாயிகளுக்கு உதவும் ஜெர்மன் ஸ்டார்ட் அப்!
PEAT தனது தகவல் சேகரிப்பு அம்சம் மூலமாக பயிரை மேம்படுத்தி பயிர் சேதத்தைக் குறைத்து விவசாயிகளுக்கு உதவ விரும்புகிறது. இந்தியாவின் எந்தப் பகுதியாக இருந்தாலும் ஒரு விவசாயியின் வாழ்க்கை அவ்வளவு சுலபமானதல்ல. பூச்சிகள் பிரச்சனையில்லாது போனால் பருவமழை பிரச்சனை வரும். பருவமழை இல்லையென்றால் கடன்கொடுத்தவர்கள் அணுகுவார்கள். அனைத்திற்கும் மேல் ரசாயனங்கள் இல்லையென்றால் நிலம் பயனற்று போய்விடும். அல்லது இடைத்தரகர்கள் விளைச்சலுக்கு நியாயமான விலையை செலுத்தாமல் கொள்ளை அடிப்பார்கள். மொத்தத்தில் பல எதிர்மறை செயல்கள் உள்ளன.
ஆனால் நாட்டில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் ஒரு ஜெர்மன் ஸ்டார்ட் அப்பிற்கு இந்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் வாய்ப்பாக அமைந்தது. PEAT நிறுவனர்கள் இந்தியாவில் விவசாயத்தை காப்பாற்ற விரும்புகின்றனர். ப்ரொக்ரசிவ் என்விரான்மெண்டல் அண்ட் அக்ரிகல்சர் டெக்னாலஜிஸ் (PEAT) கடந்த இரண்டு வருடங்களாக 30,000 இந்திய விவசாயிகளுடன் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று விவசாயத்தில் 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள வாய்ப்புகள் உள்ளன. 30க்கும் மேற்பட்ட இந்திய ஸ்டார்ட் அப்கள் இந்தத் துறையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். VDrone, கிசான் நெட்வொர்க், க்ரோஃபார்ம் போன்ற ஸ்டார்ட் அப்கள் ட்ரோன்கள், சப்ளை செயின் தொழில்நுட்பம், ஃபார்ம் அக்ரிகேஷன் போன்றவற்றைப் பயன்படுத்தி விவசாய முறையை எளிதாக்க முயல்கின்றனர்.
தங்களது துறையில் விருப்பம் காட்டப்படுவது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
“பயிர் ஏன் ஆரோக்யமாக இல்லை என்பதை நான் தெரிந்துகொள்ள இது போன்ற தொழில்நுட்பங்கள் உதவுகின்றன,”
என்கிறார் ஆந்திராவின் குண்டூர் பகுதியைச் சேர்ந்த விவசாயியான சூர்யநாராயண ரெட்டி. உலக வங்கியின் கணக்குப்படி இந்தியாவில் 395 மில்லியன் ஏக்கர் சாகுபடி நிலங்கள் உள்ளது. இதில் 215 மில்லியன் ஏக்கரில்தான் சாகுபடி ஆகிறது.
தொடக்கம்
PEAT 2015-ல் அமைக்கப்பட்டது. ஆனால் தென் அமெரிக்காவில்தான் தொடங்கியது. PEAT-ன் ஏழு நிறுவனர்களில் நான்கு பேர் அமேசானியாவின் ஒரு ஜெர்மன் – பிரேசிலியன் ஆராய்ச்சி ப்ராஜெக்டில் சந்தித்தனர். இந்த ப்ராஜெக்ட் க்ரீன்ஹவுஸ் கேசஸ் (GHG), நீடிப்புத்திறன் மற்றும் நிலத்தோற்றத்தை மாற்றும் முறை போன்றவற்றைக் குறித்ததாகும்.
”மனித நடவடிக்கைகள் நிலத்தோற்றத்தை மாற்றும் முறையால் தூண்டப்பட்டு GHG வெளிப்படுத்துதல் மற்றும் அதைக் குறைக்கும் வாய்ப்புகள்’ என்பதுதான் எங்களது ஆராய்ச்சித் தலைப்பு,”
என்று விவரித்தார் இணை நிறுவனர்சார்லோட் சூமான் (Charlotte Schumann). GHG குறித்தோ அல்லது மண்ணின் கார்பன் அளவு குறித்தோ விவசாயிகள் ஒருபோதும் கேட்பதில்லை என்பதை வெகுவிரைவில் இந்த நால்வரும் உணர்ந்தனர்.
”அவர்களது தாவரத்தில் என்ன பிரச்சனை என்றும் அந்த குறிப்பிட்ட நோய்க்கு எப்படி சிகிச்சை அளிக்கலாம் என்றும் தெரிந்துகொள்ளத்தான் விரும்புகிறார்கள்,” என்றார் இணை நிறுவனர் Alexander Kennepohl. மேலும் இப்படிப்பட்ட விவசாயிகளில் பெரும்பாலானோர் அத்தகைய நோய்க்கிருமிகளுக்கு அவர்களாகவே ஒரு உள்ளூர் பெயரும் வைத்திருப்பதால் அது உதவுவதில்லை.
”உங்களுக்குத் தேவையானது ஓர் அறிவியல் பெயர். இந்த ஆழ்ந்த அறிவுதான் டிஜிட்டல் மற்றும் முழுமையாக தானியங்கி முறையில் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண உதவும் ஸ்டார்ட் அப் நோக்கி வழி நடத்தியது,” என்கிறார் சார்லோட்.
எனவே அலெக்சாண்டர் மற்றும் சார்லோட் இருவரும் Simone Strey, Pierre Munzel, Robert Strey, Bianca Kummer and Korbinian Hartberger ஆகியோருடன் இணைந்து தொடங்கியதுதான் PEAT.
ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட இண்டர்நேஷனல் க்ராப் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஃபார் தி செமி-ஆரிட் ட்ராபிக்ஸ் (ICRISAT) மூலமாகவே PEAT இந்தியாவில் நுழைந்தது. ICRISAT உலகெங்கும் அவர்களது முக்கிய பயிர்களை (பருப்புவகைகள்) மேம்படுத்தும் பணிக்காக டிஜிட்டல் விவசாயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது.
இந்த வருடம் ICRISAT- உடன் இணைந்து PEAT தென்னிந்திய விவசாயிகளுக்காக Plantix எனும் இலவச செயலியை அறிமுகப்படுத்தியது. அந்தப் பகுதியின் முக்கிய பயிர் வகையைக் குறித்த இந்த செயலி உள்ளூர் மொழிகளில் உள்ளது. செயலி மட்டுமல்லாது இந்நிறுவனம் மற்ற செயலிகளுக்கான API, விவசாய மேலாண்மை அமைப்பு, கேமிரா மற்றும் இணையதள வசதி கொண்ட சிஸ்டம் போன்றவற்றை அளிக்கிறது. விவசாயத்தைச் சேர்ந்த மற்ற நிறுவனங்கள் விவசாயிக்கு ஆதரவளிக்க PEAT தளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
“இந்திய விவசாய வணிகத்தைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்களுக்கு இதை அளிக்கிறோம். இந்தியா முழுவதும் இணையத் தொடங்கியுள்ளோம்.” என்றார் அலெக்சாண்டர்.
ஜெர்மன் தூதரகத்தின் உதவியுடன் நிலையான விவசாயத்திற்கு தீர்வுகாண விரும்பும் பல்வேறு இந்திய நிறுவனங்களை PEAT சந்தித்தது. இந்தியாவில் 30,000 பயனாளிகள் Plantix-க்கு உள்ளனர். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளும் ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளனர்.
PEAT 2016-ல் Merck Accelerator-ல் பங்கெடுத்து அதன்பின்னர் அறிவிக்கப்படாத நிதித்தொகையை ஜெர்மன் முதலீட்டாளரான கிரிஸ்டோஃப் மெயர் மற்றும் அதன் நிறுவனமான அட்லாண்டிக் லேப்ஸ் மூலமாக பெற்றது.
தொழில்நுட்பத்தின் செயல்பாடு
PEAT சுயமாக கற்கும் வழிமுறைகளில் (டீப் நியூரல் நெட்வொர்க்) பயிற்சியளிக்கிறது. தாவர நோய், பூச்சிகள் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு என வேறுபடுத்த பயிற்சியளிக்கப்படும். மனிதன் கற்கும் அதே பேட்டர்னை அடிப்படையாகக் கொண்டே இந்த டீப் நியூரல் நெட்வொர்க் அமைந்துள்ளது. ஒவ்வொரு தாவர நோயின் வேறுபட்ட பேட்டர்ன் மற்றும் தனிச்சிறப்பு பேட்டர்ன்களைக் கொண்ட லெர்னிங் மெட்டீரியல்ஸை ஒரு நிபுணரைப் போல நீங்கள் தயாரித்து இயந்திரத்திற்கு அளிக்கவேண்டும்.
போதுமான மெட்டீரியல்ஸ் இருந்தால் ஒரு படத்தை காட்டினாலே போதும் குறிப்பிட்ட நோயை எப்படி அடையாளம் காண்பது என்பதை மெஷின் புரிந்துகொள்ளும். ஃப்யூச்சர் க்ரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி கூறுகையில்,
”விவசாயியின் துயரங்களை ஒழிப்பதற்கு தேவையான வலிமை தகவல்களுக்கு உள்ளது. விவசாயியின் வாழ்க்கையை மேம்படுத்தும் எந்த ஒரு தகவலும் நுகர்வோருக்கு சிறந்த தயாரிப்பை அளிப்பதிலும் பங்களித்து மதிப்பைக் கூட்டுகிறது. இதில் இணைந்திருக்கும் அனைவரும் பலனடைவார்கள்.”
வணிகம்
PEAT ஒரு ப்ராடக்ட் நிறுவனம். இது தற்போது பயனாளிகளை பெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போது எந்த ஒரு வருவாயையும் ஈட்டவில்லை. இந்த செயலி ஒரு படத்தை எடுப்பதன் மூலமாகவே தாவரத்தின் சேதத்தை கண்டறிகிறது. இதனால் அதிக நேரத்தை இழக்காமல் பயிரைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு உதவுகிறது.
“இந்த சுயமாக கற்கும் வழிமுறைகளில் பயிற்சி பெற ஒரு மிகப்பெரிய டேட்டாபேஸ் தேவைப்படுகிறது. இன்று 270,000 பெயரிடப்பட்ட படத்தை எங்கள் டேட்டாபேஸ் கொண்டுள்ளது. படத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் எங்களுக்கு அனுப்புவதால் இது ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டிருக்கிறது.” என்றார் சார்லோட்.
தாவரம் எதனால் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறது என்பதற்கான காரணத்தை மட்டும் சொல்வது ஸ்டார்ட் அப்பின் மதிப்பை கூட்டப்போவதில்லை. ஆகையால் PEAT தொற்றிற்கான காரணம் குறித்த தகவல்களையும் வழங்குகிறது. மேலும் அதை எப்படி விவசாயி தவிர்க்கலாம் அல்லது உயிரியல் மற்றும் ரசாயன பொருட்கள் கொண்டு சிகிச்சையளிக்கலாம் என்கிற தகவல்களையும் வழங்குகிறது.
விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவதைத் தாண்டி PEAT-ன் தொழில்நுட்பம் தாவர நோய்கள் மற்றும் பூச்சிகள் குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்களையும் வழங்குகிறது. ஒவ்வொரு படமும் அதன் இருப்பிடம் மற்றும் நேரத்தை குறிப்பிடக்கூடிய முத்திரையுடன் PEAT-வின் சர்வருக்கு வருவதால் எந்த இடத்தில் இருக்கும் பயிராக இருந்தாலும் எந்தவிதமான பயிராக இருந்தாலும் நிகழ் நேர கண்காணிப்பை அளிக்கிறது.
படங்களை அடையாளம் காணக்கூடிய இந்த மென்பொருள், தகவல்களைக் கொண்டு விவசாயிகளுக்கு சேவை புரியும் விவசாய நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படும். படங்கள் அனுப்பப்படும் எண்ணிக்கைகளைக் கொண்டு நிறுவனம் பணத்தை ஈட்டலாம். மேலும் நிறுவனங்களுக்கு நுண்ணறிவை அளிக்கும் அனலிடிக்ஸ் என்ஜினாலும் பணம் ஈட்டலாம்.
”நுகர்வோர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு புதிய தூண்டுதல் விவசாயத்திற்கு தேவைப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன்கள், ட்ரோன்ஸ், மண் மற்றும் தாவர ஆரோக்யத்தை கண்காணிக்கும் சாதனங்கள் ஆகியவைதான் எதிர்காலத்தில் பயன்பாட்டில் இருக்கப்போகிறது.” என்றார் VDrone Agro நிறுவனத்தின் இணை நிறுவனரான ப்ரணவ் மனுபுரியா.
குறைவான விளைநிலங்கள் கொண்ட இந்தியாவில் மோசமான விளைச்சல் காரணமாக விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர். ஆனால் PEAT போன்ற தொழில்நுட்பங்களே இப்போதைய தேவையாக உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா