கொச்சி நகரின் நிசப்தமான சாலைகளை ஆவணப்படம் ஆக்கிய 14 வயது சிறுவன்!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் சமூகப் பணியில் ஈடுபட்டவாறே ஆவணப்படம் எடுத்துள்ளார் 14 வயதான ஸ்ரீஹரி ராஜேஷ்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். சாலைகள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருக்கும் சுற்றுலாத் தளங்கள்கூட நிசப்தமாக காட்சியளிக்கின்றன.
இந்தச் சூழலில் கேரளாவைச் சேர்ந்த 14 வயதான ஸ்ரீஹரி ராஜேஷ் ‘அமைதியான சாலைகள்’ (Silent Roads) என்கிற ஆவணப்படத்தைப் படம்பிடித்துள்ளார். மக்களுக்கு உணவு கொடுப்பதற்காக கொச்சி சாலைகளில் அப்பாவுடன் பயணிக்கும்போது இந்த ஆவணப்படத்தைப் படம்பிடித்துள்ளார். ஸ்ரீஹரி ஏற்கெனவே இதுபோன்ற படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைவரும் கொச்சியின் பரபரப்பான சாலைகளைப் பார்த்திருப்போம். எனவே வெறிச்சோடிய சாலைகளை மக்களுக்குக் காட்ட திட்டமிட்டேன். என் மொபைல் போனில் படம்பிடித்து ‘அமைதியான சாலைகள்’ என்று பெயரிட்டேன்,” என்று ஏஎன்ஐ-இடம் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார்.
கொச்சியில் கேரள காவல்துறையால் தொடங்கப்பட்ட சமூக நல முயற்சி ‘நன்மா ஃபவுண்டேஷன்’. இதில் பங்களிக்கும் விதமாக சமூக நலப் பணிகளில் ஈடுபட்டவாறே ஸ்ரீஹரி இந்த ஆவணப்படத்தைப் படம்பிடித்துள்ளார்.
இதற்கு முன்பு ஸ்ரீஹரி Puka – The Killing Smoke என்கிற குறும்படத்தை இருமொழிகளில் எடுத்துள்ளார். 33 நிமிடங்கள் நீண்ட இந்த குறும்படம் போதைப்பொருள், புகையிலை ஆகியவற்றின் தீமைகள் குறித்து குழந்தைகளுக்கு எச்சரிக்கிறது. கதை எழுதி இந்தத் திரைப்படத்தை இயக்கியதுடன் ஸ்ரீஹரி இதில் ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
14 வயதான ஸ்ரீஹரி, ஏற்கெனவே சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு திரைப்படங்களை எடுத்துள்ளார். கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘கவர்’ என்கிற திரைப்படத்தையும் பிளாஸ்டிக்கின் தீமைகளை காட்சிப்படுத்தும் வகையில் ‘Chatti’ என்கிற திரைப்படத்தையும் எடுத்துள்ளார்.
“நோக்கமின்றி ஏதோ ஒன்றைப் படம்பிடிப்பதற்கு பதிலாக பொதுமக்களுக்கு பயனுள்ளவற்றை உருவாக்க விரும்பினேன். எனவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தையே மையமாக எடுத்துக்கொண்டேன்,” என்று ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இடம் குறிப்பிட்டுள்ளார்.
கொச்சி நகரில் எர்னாகுளம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரி எலூரில் உள்ள பவன்ஸ் வித்யா மந்திர் மாணவர்.
“போக்குவரத்து விதிமீறலை மையமாகக் கொண்டு ‘அலாரம் ஆஃப் லைஃப்’ என்கிற பெயரில் படத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு என் குடும்பத்தினர் பெருமளவு ஆதரவளிக்கின்றனர்,” என்று ஸ்ரீஹரி தெரிவித்ததாக Edexlive குறிப்பிட்டுள்ளது.
கட்டுரை: THINK CHANGE INDIA