சச்சினின் 30 ஆண்டு சாதனையை முறியடித்த 15 வயது இளம் வீராங்கனை!
இந்தியாவின் இளம் துவக்க வீராங்கனையான ஷஃபாலி சர்மா, சர்வதேச போட்டியில் இளம் வயதில் அரை சதம் அடித்த சச்சின் சாதனையை முறியடித்துள்ளார்.
இளம் கிரிக்கெட் நட்சத்திரமான ஷஃபாலி வர்மா, சர்வதேச போட்டிகளில் மிகவும் இளம் வயதில் அரை சதம் அடித்த இந்தியர் எனும் சாதனையை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரன முதல் டி-20 போட்டியில் அவர் 49 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார்.
15 ஆண்டுகள் 285 நாட்கள் வயதில், அவர் இந்த சாதனையை நிகழ்த்தி 30 ஆண்டுகளாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பெயரில் இருந்த சாதனையை முறியடித்தார். சச்சின் 16 ஆண்டுகள் 214 நாட்களில் தனது முதல் அரைசதத்தை அடித்தார். ஷஃபாலி, டி-20 போட்டிகளில் அரை சதம் அடிக்கும் இரண்டாவது இளம் வீரர் எனும் சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
தனது ஐந்தாவது சர்வர்தேச போட்டியில் முதல் அரைசதம் அடித்தவர், ஆறு பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசினார். அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித் தந்தது.
“இந்த போட்டியை பார்த்தால், அவர் ஒற்றை மற்றும் இரண்டு ரன்களை எடுத்து, ஸ்டிரைக் சுழற்சி செய்து கொண்டிருப்பதை உணரலாம். இந்த இளம் வயதில் அவர் பதற்றம் இல்லாமல், அமைதியாக விளையாடுகிறார். சச்சின் போலவே, அவர் இயற்கையாக திறமை கொண்டவர்,” என்று ரோத்தக்கில் உள்ள பயிற்சி அகாடமியில் அவரது பயிற்சியாளரான அஸ்வினி குமார் கூறுகிறார்.
அவரது ஆட்டம் முதல் போட்டியில் மட்டும் அல்லாது இரண்டாவது போட்டியிலும் தொடர்ந்தது. இரண்டாவது டி-20 போட்டியில் அவர் இரண்டாவது அரை சதம் அடித்தார். 35 பந்துகளில் 69 ரன் குவித்தார். இரண்டு போட்டிகளிலும், ஷஃபாளி மற்றும் மந்தனா 100 ரன்னுக்கு மேல் ஜோடியாக சேர்த்தனர். இரண்டாவது போட்டியில் இந்த ஜோடி குவித்த 143 ரன்கள் டி-20 போட்டியில் இந்திய ஜோடி குவித்த அதிகபட்ச ரன்களாகும்.
மிதாலி ஓய்வு பெற்ற பிறகு அணியில் தேர்வு செய்யப்பட்ட இந்த இளம் வீராங்கனை வேகமாக முன்னேறி வருகிறார். அதிரடி ஆட்டம் காரணமாக அவர் டி-20 அணியில் சேர்க்கப்பட்டர். அவர் ஏற்கனவே ஹரியானா மாநிலத்திற்காக மூன்று பருவம் ஆடியுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டி மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர் தனது திறமையை நிருபித்து கவனத்தை ஈர்த்தார்.
2018 -19 உள்ளூர் போட்டிகளில் அதிக ரன் குவித்த நிலையில் தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்டார். தனது மூன்றாவது சீசனில் ஹரியானாவுக்காக 1,923 ரன்கள் குவித்தார். ஆறு சதங்கள் இதில் அடங்கும்.
இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் மற்றும் இங்கிலாந்து வீராங்கனை டெனியேலா இவரது திறமையை பாராட்டியுள்ளனர். டேனியேலா அவரை புதிய சூப்பர் ஸ்டார் என வர்ணித்துள்ளார். 2019 பெண்கள் ஐபிஎல் போட்டியில் வெலாசிட்டி அணியில் இடம்பெற்றுள்ள ஷஃபாலி, துவக்க வீராங்கனையாக கலக்கி வருகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: நிரந்தி கவுதமன் | தமிழில்: சைபர்சிம்மன்