2.0 உள்ளிட்ட திரைப்படங்களின் தொழில்நுட்ப மையமாக எழுச்சி பெறும் ஐதராபாத்
இந்தியத் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளூர் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, ஐதராபாத் நகரை வி.ஆர், ஏ.ஆர் மற்றும் வி.எப்.எக்ஸ் விளைவுகளில் சிறந்து விளங்கும் பொழுதுபோக்கு தொழில்நுட்ப மையமாக உருவாக்கியுள்ளன.
பறக்கும் மொபைல்கள் மற்றும் திகில் கலந்த அறிவியல் புனைகதை ஆகிய அம்சங்கள் ரஜினிகாந்தின் சமீபத்திய படமான 2.0 பற்றி பரபரப்பாகப் பேச வைத்திருக்கிறது. அண்மையில் வெளியான ’தக்ஸ் ஆப் இந்துஸ்தான்’ படம் கூட, பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை மீறி, அதன் வி.எப்.எக்ஸ் விளைவுகளுக்காக பரபரப்பாக பேசப்பட்டது. இதற்காக ரூ.200 கோடி செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆக, விஷுவல் எபெக்ட்ஸ் தான் புதிய ஈர்ப்பாக இருக்கிறது என்றால், ஐதராபாத் அதன் மையமாக இருக்கிறது.
2017 ஏப்ரலில் வெளியான பாகுபலி இரண்டாம் பாகத்துடன் இது துவங்குகிறது. இந்த படத்தின் வெற்றி, ரசிகர்கள் புதிய வகை உள்ளடக்கம் மற்றும் கதைகளை எதிர்பார்க்கின்றனர் என்பதையும், வி.எப்.எக்ஸ் விளைவை ரசிக்கின்றனர் என்பதையும் இயக்குனர்களுக்கு உணர்த்தியது.
பாகுபலி ஆர்வத்தை உண்டாக்கி இருந்தாலும், ஐதராபாத்தில் எப்போதும் திறமைக்கு பஞ்சமில்லை. நகரின் வி.எப்.எக்ஸ் தொழில்துறை டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் காமரூனின் அவதார், தி க்ரோனிகல்ஸ் ஆப் நாரினியா, பீட்டர் பான் உள்ளிட்ட திரைப்படங்களுக்கும் பங்களித்துள்ளது.
தொழில்நுட்ப ஆற்றல்
ஹாலிவுட் இயக்குனர்கள் மட்டும் அல்ல, தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய மொழி இயக்குனர்களும் அனிமேஷன், வி.எப்.எக்ஸ் மற்றும் பிற தொழில்நுட்பம் கதை சொல்லலில் உதவும் என்பதில் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் செலவு மிக்கது என்பதால், திரைப்பட நிறுவனங்கள் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
நடிகர் மற்றும் தொழில்முனைவோரான ரானா டகுபதி, அண்மையில் யுவர்ஸ்டோரியிடம் பேசிய போது,
“உலகின் மற்ற பகுதிகளில் திரைப்படங்களில் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. பாகுபலி வெற்றிக்குப்பிறகு, வி.எப்.எக்ஸ் கொண்டு கதை சொல்வதை ரசிகர்கள் விரும்புகின்றனர் என தெரிந்து கொண்டோம்,” என்று கூறினார்.
தொழில்நுட்பம், விஷுவல் எபெக்ட்ஸ் இரண்டுமே ரானாவுக்கு புதிதல்ல. நடிகராவதற்கு முன், அவர் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு காட்டத்துவங்கிவிட்டார். அவரது நிறுவனமான ஸ்பிரிட் மீடியா ரஜினியின் சிவாஜி மற்றும் கமலின் தசாவதாரம் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் அமைத்து கொடுத்துள்ளது.
இந்திய திரைப்படங்களில் தொழில்நுட்பம் பெரிய மற்றும் முக்கிய பங்காற்றுவதை மற்ற திரைப்பட பிரமுகர்களும் ஒப்புக்கொள்கின்றனர்.
“திரைப்படங்கள் இனியும் பழைய வடிவில் இருக்காது. திரைப்படங்களை மேலும் புதுமையான அனுபவமாக்கும், ஆர்/ விஆர் நோக்கிய நகர்வு நிகழ்வும். இவை எதிர்காலத்தில் தான் நிகழும். தற்போதைய நிலையில், திரைப்படங்களுடன் ஏதேனும் ஒரு வழியில் தொடர்பு கொள்ள முடியுமா என்று தான் பார்க்கின்றனர். எனவே விஷுவல் எபெக்ட்ஸ், படங்களுக்கு பிந்தைய காமிக் புத்தகங்கள், நீட்டிப்பு தொடர் வரிசைகள் மற்றும் ரசிகர்களுக்கான பக்கங்கள் முக்கியமாகின்றன,” என்கிறார் சுரேஷ் புரடக்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர், தயாரிப்பால்ளர் மற்றும் விநியோகிஸ்தரான சுரேஷ் பாபு.
தெலுங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மிகப்பெரிய திரைப்பட நிறுவனங்களில் ஒன்றாக சுரேஷ் புரடக்ஷன்ஸ் திகழ்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேல், 13 மொழிகளில் 155 படங்களுக்கு மேல் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ஐதராபாத்தில் ஸ்டுடியோ கொண்டுள்ள சுரேஷ் புரடக்ஷன்ஸ், மற்ற திரைப்பட நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நவீன திரை தயாரிப்பு தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.
சோதனைகள் மூலம் துவக்கம்
ஆனால் எல்லோராலும் கோடிக்கணக்கில் செலவிட முடியாது. ஷங்கரின் 2.0 படம், 75 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் தான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வருகின்றன. இவை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் தொழில்நுட்பத்தை சோதனை முறையில் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றன.
தற்போதுள்ள திறமை, தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப்பின் இணைந்த கலவையாக அந்தில் ஸ்டூடியோஸ் (Anthill Studios) உருவானது. அந்தில் வென்சர்ஸ் மற்றும் சுரேஷ் புரடக்ஷன்ஸ் இணைந்து இந்தத் திட்டத்தை உருவாக்கின. இது ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்களுக்கான முதலீடு மற்றும் வளர்ச்சி மையமாக இருக்கிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
“இன்று தொழில்நுட்பம் சார்ந்த பல ஸ்டார்ட் அப்கள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தை, திரைப்படங்கள், கேம்கள், கதை சொல்லலில் பயன்படுத்த முடியும்,”
என்கிறார் அந்தில் வென்சர்ஸ் நிறுவனர் மற்றும் சீப் ஆக்சலேரட்டர் பிரசாத் வாங்க.
ஸ்டார்ட் அப் வழி
ஐதராபாத் ஏற்கனவே அதிக அளவில் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களை பெற்றுள்ளது. வர்த்தகத்தை எளிதாக்கும் அரசு கொள்கை முடிவுகள், வழிகாட்டி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழல் ஆகியவை ஐதராபாத் நகருக்கு சாதகமாக அமைந்துள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் அமைக்கப்பட்ட, ஐஐடி ஐதராபாத்தின் செண்டர் பார் இன்னவேஷன் அண்ட் எண்டர்பிரனர்ஷிப், ஐஎஸ்பி ஐதராபாத்தின் இன்னோவேஷன் செல் மற்றும் தெலுங்கானாவில் டி ஹப் ஆகியவை ஸ்டார்ட் அப்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் ஐதராபாத் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 869.012 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளன. இந்த ஆண்டு மட்டும் 400.95 மில்லியன் டாலர் திரட்டியுள்ளன.
ஸ்டார்ட் அப் செயல்பாடு தான் சுரேஷ் புரடக்ஷன்ஸ் கவனத்தை ஈர்த்தது. பொழுதுபோக்கு துறைக்காக எண்ணற்ற தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் அவை மிகவும் தொலைவில் அமைந்திருந்ததை உணர்ந்ததாக ரானா கூறுகிறார். இதன் காரணமாகவே அந்தில் ஸ்டுடியோஸ் உருவாக்கப்பட்டது.
“திரைப்படங்கள் அனுபவம் சார்ந்தவை. கதை சொல்வதற்கான புதிய வழிகளை இயக்குனர்கள் நாடத்துவங்கியுள்ளனர். திரைப்பட துறையின் தேவைகளுக்கு ஏற்ப, இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வர்த்தக மாதிரி உருவாக உதவ விரும்புகிறோம்,” என்கிறார் ரானா.
அந்தில் 150 விண்ணப்பங்களில் இருந்து 10 ஸ்டார்ட் அப்களை தேர்வு செய்துள்ளது. அந்தில் ஸ்டூடியோவின் அங்கமாக, இவை விர்ச்சுவல் ரியாலிட்டி, விசுவல் எபெக்ட்ஸ் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்கி வருகின்றன.
முதல் கட்டத்தில் அங்கம் வகித்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடும் ரானா,
“அனைத்து காட்சி ஊடக வீடியோக்களை காமிக் வடிவில் மாற்றித்தரும் சேவையை காமிக்பிளிக்ஸ் வழங்குகிறது. சரன்யூ ஓடிடி சேவை உருவாக்க உதவுகிறது. வி ஹேவ் வுட்கட்டர், திரைக்கதையாக்கத்தில் ஆய்வு மற்றும் அனல்டிகஸ் சேவையை அளிக்கிறது,” என்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஸ்டார்ட் அப் நிறுவனமும், அந்தில் வென்சர்சிடம் இருந்து ஒரு மில்லியன் நிதி பெற்று, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இயக்குனர்கள் கூட்டு மூலம் பரவலான வலைப்பின்னல் தொடர்புகளையும் பெறுகின்றன.
ஐதராபாத் மட்டும் அல்ல
ஐதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டாலும் ஸ்டார்ட் அப்கள் மற்றும் அவற்றின் பணி ஐதராபாத்துடன் நின்றுவிடவில்லை. இந்நிறுவனங்கள், ஆல்ட் பாலாஜி, அக்சன்சர், வயகாம், சோனி எண்டர்டெயின்மண்ட் மற்றும் ஐபிஎம், டெக் மகிந்திரா போன்ற வர்த்தக வாடிக்கையாளர்களுக்கும் சேவை அளிக்கின்றன. வர்த்தக நிறுவனங்கள் தொழிநுட்பத்தை பயிற்சி அளிக்கப் பயன்படுத்துகின்றன.
ஆனால் திரைப்பட இயக்குனர்கள் இன்னும் அதிகமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வைப்பதில் தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
“தொழில்நுட்பத்தில் புதியவற்றுக்கான தேவை உள்ளத் துறையாக இது இருக்கிறது. கூட்டு மூலம் வளர்ச்சி பெறுவது தான் ஒரே வழி,” என்கிறார் பிரசாத்.
பல்வேறு பயன்பாடுகளில் தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தத் திட்டத்தின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஒன்றான, ஸ்கேபிக், 2018 டெக் 30 நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆகிசலர் வென்சர்சின் அங்கமான இது ஏற்கனவே பெங்களூரு ஐபிஎல் அணியுடன் செயல்பட்டிருக்கிறது.
“ஏஆர் மற்றும் விஆர் நுட்பங்களை அதிக நுகர்வோர் ஈடுபாட்டிற்காக பயன்படுத்தலாம். அந்தில் மூலம் ஏற்கனவே சந்தைக்கான வசதி இருக்கிறது. பெரிய ஸ்டுடியோக்கள் மற்றும் மீடியா நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்,” என்கிறார் ஸ்கிரேபிக் இணை நிறுவனர் சாய்.
தொழில்முனைவோருக்கு வர்த்தகத்தை எப்படி நடத்துவது என்று சொல்லித்தருவதில்லை என்கிறார் பிரசாத். வர்த்தக மாதிரி மற்றும் விலையில் ஆலோசனை வழங்கினாலும், நல்ல குழு மற்றும் சிறந்த வளத்தை ஸ்டார்ட் அப்கள் பெற்றிருக்க வேண்டும்.
ஊக்கம் அளிப்பது
வர்த்தகச் சூழலை உருவாக்குவதில் ரானா நம்பிக்கைக் கொண்டுள்ளார். உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் தொழில்நுட்பத்தை அணுக வழி செய்வதோடு, திறமைகளை நிர்வகிப்பதில் அவரது குழு உதவுகிறது.
“ஒரு முழுமையான சந்தை இடம் தேவை. தொழில்நுட்பம் மற்றும் வேகமான செயல்பாடு கொண்ட ஸ்டார்ட் அப்கள் இருக்கின்றன. ஓடிடி மேடைகள் மற்றும் உள்ளடக்கத்தின் வளர்ச்சி காரணமாக, வேறுபட்ட திறமைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இவற்றை ஒருங்கிணைப்பது தான் முக்கியம்” என்கிறார் ரானா.
இதைத் தான் அவரது குழு செய்து கொண்டிருக்கிறது. எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு சூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
“வயகாம், சோனி, ஸ்டார், ஆல்ட் பாலாஜி போன்ற பெரிய ஸ்டூடியோக்களை எங்களால் அணுக முடிகிறது. மீடியா மற்றும் திரை வாடிக்கையாளர்களைக் கொண்ட சுரேஷ் புரடக்ஷன்ஸ் மற்றும் இன்னும் பெரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது பற்றி பரிசீலித்து வருகிறோம். சந்தை மற்றும் வளர்ச்சி வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு ஏ சுற்று நிதி திரட்ட் உள்ளோம்,” என்கிறார் காமிக் பிளிக்ஸ் இணை நிறுவனர் குரு பாபாசன்.
சந்தை வாய்ப்பு இருப்பதால், பெரிய அளவில் நிதி திரட்டும் வாய்ப்புகள் உள்ளனவா?
பெயர் குறிப்பிட விரும்பாத சில முதலீட்டாளர்கள், இந்த பரப்பு கடினமாக இருந்தாலும் உள்ளடக்கம் மற்றும் தேவை முதலீட்டை ஈர்ப்பதாக தெரிவித்தனர். எனினும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட எல்லோரும் தயாராக இல்லை.
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு ஸ்டூடியோ என சொல்லப்படும் கொல்கத்தாவின் எஸ்.வி.எப் செயல் இயக்குனர், விஷ்ணு மோத்தா, எல்லாவற்றையும் நிறுவனத்திற்குள் செய்ய விரும்புவதாக கூறுகிறார். அனைத்துத் தயாரிப்பு பிந்தைய பணிகளையும் ஒருங்கிணைக்கும் பிரத்யேக ஸ்டுடியோவை எங்கள் அலுவலகத்தில் அமைத்து வருகிறோம் என்கிறார் அவர்.
ஸ்டூடியோக்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களால் நீண்ட காலம் பணியாற்ற முடியுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் ஐதராபாத் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறது.
ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்; சைபர்சிம்மன்