கோவிட்-19 நிவாரண ‘ஹெல்ப்லைன்’ உருவாக்கிய இரட்டைச் சகோதரிகள்!
24X7 உதவி எண் அறிமுகப்படுத்தி டெலிவரி சேவைகள் செய்யும் இரட்டைச் சகோதரிகளான அஷீர், அசீஸ்.
உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள், புலம்பெயர்ந்தோர், சம்பளம் வாங்கும் ஊழியர்கள், தொழில் துறையினர் என ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழலில் மக்கள் ஒருங்கிணைந்து தேவையிருப்போர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த 16 வயது இரட்டைச் சகோதரிகளும் சமூக நலப் பணியில் பங்களித்துள்ளனர்.
இரட்டைச் சகோதரிகளான அஷீர், ஆசீஸ் காந்தாரி இருவரும் சமீபத்தில் கோவிட்-19 உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். இவர்கள் தங்களது நண்பர்களான அமன் பங்கா, ஆதித்யா துபே ஆகியோர்களுடன் இணைந்து இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளனர்.
இவ்விருவரும் டெலிவரி சேவை வழங்குவோர், உணவு அவுட்லெட்கள், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் இணைந்து நலிந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களையும் வழங்கி வருகின்றனர்.
“Bercos, Big Jar போன்றவற்றுடன் பல நண்பர்களுக்கு தொடர்பு இருந்தது. அவர்கள் சமையல் ஏற்பாடுகள் செய்தனர். உணவை டெலிவர் செய்ய நாங்கள் ஸ்விக்கியுடன் இணைந்தோம். தன்னார்வலர்கள் பலர் இணைந்து டெலிவர் செய்ய உதவினார்கள்,” என்று அஹீர் என்டிடிவி-இடம் தெரிவித்துள்ளார்.
இந்த இரட்டைச் சகோதரிகள் 24X7 உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளனர். உணவு, மருந்துப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் போன்றவற்றிற்கான தேவை இருப்போர் +91-9529863506 என்கிற எண்ணில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் போதும். தேவையான உதவிகள் செய்யப்படுகிறது.
டெல்லி பல்கலைக்கழகம், இந்து கல்லூரி, செயிண்ட் ஸ்டீஃபன்ஸ் ஆகிய கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் தன்னார்வலர்களாக இணைந்து களப்பணியாற்றினர். டெல்லி காவல்துறையும் இவர்களது சேவைக்கு ஆதரவளித்ததாக `தி லாஜிக்கல் இந்தியன்’ தெரிவிக்கிறது.
“ஒரு குழந்தையின் அம்மா அதிகாலை 3 மணிக்கு எங்களைத் தொடர்பு கொண்டார். தனது பெண் குழந்தைக்கு 103 டிகிரி காய்ச்சல் இருப்பதாக தெரிவித்தார். நான் அந்த நேரத்தில் காவலர்களைத் தொடர்புகொண்டு தேவையான மருந்துகளை ஒப்படைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு எங்களை அழைத்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தார்,” என்று ஆஷீர் நினைவுகூர்ந்தார்.
சகோதரிகள் அஷீர், அசீஸ் இருவரும் இதுவரை டெல்லி-என்சிஆர் தவிர 30-க்கும் அதிகமான இந்திய நகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவியுள்ளனர்.
கட்டுரை: THINK CHANGE INDIA