‘தல’ அஜித் ஆலோசனையில் உருவான மாணவர்களின் ஆளில்லா விமானம் உலக சாதனை!
நடிகர் அஜித்குமாரை ஆலோசகராகக் கொண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம், 6 மணி நேரம் 7 நிமிடங்கள் வானில் பறந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
இயற்கை பேரிடர்கள், ஆபத்து காலங்களில் மக்களை மீட்க முடியாமல் தவிப்போருக்கு உதவியாக இருக்கும் தொழில்நுட்ப நண்பனாக விளங்குபவை ஆளில்லா குட்டி விமானங்கள். ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளை மாணவர்கள் செய்து வருகின்றனர். அடுத்தடுத்த கட்டங்களை எட்டி வரும் இந்த குட்டி விமானங்களின் வளர்ச்சிப் பாதையில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு மைல்கல்லை அடைந்துள்ளனர்.
ஏரோநாடிக்கல் படிக்கும் மாணவர்களின் குட்டி விமானங்கள் உருவாக்கும் திறனை ஊக்குவிக்கும் விதமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் SAE ISS ஏரோ டிசைன் சேலஞ்ச் 2018 நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 100 குழுக்களைக் கொண்ட 700 இளநிலை மற்றும் பட்டதாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
கண்காட்சியில் ஆளில்லா விமானங்களின் அடுத்த கட்ட படைப்புகள், யூஏவி ஹெலிகாப்டர், குவாட்காப்டர் உள்ளிட்டவை வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சியில் அனைத்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி கேம்பஸ் ஏரோஸ்பேஸ் ஆராய்ச்சி மைய மாணவர்களின் ஆளில்லா குட்டி விமானம். ஏரோநாடிகல் மாணவர்களின் தக்ஷா குழுவினர் உருவாக்கியுள்ள ஆளில்லா குட்டி விமானம் பல சாதனைகளை செய்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ஆளில்லா விமானங்கள் அதிக நேரம் வானில் பறக்காது, ஆனால் அதனை முறியடித்து தக்ஷா ஆளில்லா விமானம் தொடர்ந்து 6 மணி நேரம் 7 நிமிடங்கள் வானில் பறந்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
பெட்ரோலை மின்சாரமாக மாற்றும் முறை கையாளப்பட்டுள்ளதால் இந்த ட்ரோன் அதிக நேரம் வானில் வட்டமிடுவதாக் கூறுகிறார் திட்ட இயக்குனர் தாமரைச்செல்வி. மேலும் வழக்கமாக இயக்கப்படும் ரிமோட் மூலம் இயக்கப்படாமல் கணினி மூலம் இயக்கப்படுவதால் எந்த இடத்தில் எவ்வளவு உயரத்தில் நிலைநிறுத்த வேண்டும் என்பதை துள்ளியமாக செய்ய முடியும் என்பது தக்ஷா குட்டி விமானத்தின் சிறப்பு என்கிறார் அவர்.
2015 சென்னை பெருவெள்ள வெள்ள மீட்புப் பணி, உத்தரகாண்ட் வெள்ளம், தமிழகத்தில் கல்குவாரி ஆய்வு என பல இடங்களில் இந்த ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றவர்கள் காட்டுத் தீயில் சிக்கிய போது ஆட்கள் எளிதில் சென்றுவிட முடியாத அந்தப் பகுதியில் தீயின் அடர்த்தி எவ்வளவு, எந்தப் பகுதியில் சென்று சிக்கியவர்களை மீட்க முடியும் உள்ளிட்டவற்றை இந்த ட்ரோன் பயன்படுத்தி உதவி இருக்கிறது தக்ஷா குழு.
இந்த விமானத்தல் பொருத்தப்பட்டுள்ள தெர்மல் கேமரா வெப்பநிலை மாற்றங்களையும், உயர் தரம் வாய்ந்த எச்டி கேமரா காட்சிகளை தெளிவாகவும் படம் பிடித்துக் காட்டுபவை.
”விபத்து நடக்கும் பகுதிக்கே சென்று மீட்புக்குழுவினருக்கு நாங்கள் ட்ரோன் மூலம் உதவி செய்து வருகிறோம், அதனால் மீட்புப் பணியில் என்ன பிரச்னை வருகிறது என்பதை அறிந்து கொண்டு அதனை சரிசெய்வதற்கான அடுத்தகட்ட ஆராய்ச்சியில் இறங்குவோம், இப்படி தொடர் ஆராய்ச்சிகளின் விளைவாகவே தற்போது புதிய உலக சாதனையை எட்டியுள்ளோம்,” என்கிறார் திட்ட இயக்குனர் தாமரைச் செல்வி.
செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்டில் நடக்கும் யூஏவி மெடிக்கல் சேலஞ்ச் 2018 இறுதிச் சுற்றுக்காக இந்த ட்ரோனை உருவாக்கும் குழுவின் ஆலோசகராக திரைப்பட நடிகர் அஜித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஏரோ மாடலிங்கில் பள்ளிப் பருவம் முதலே ஆர்வமாக இருந்தார் அஜித்குமார். நடிகர், பைக் ரேசர் என பன்முகம் கொண்டவராக திகழ்ந்தாலும் ரிமோட் மூலம் இயக்கும் வாகனங்களை உருவாக்குவதில் அவருக்கு இருந்த ஆர்வம் குறையவில்லை.
இதனால் தாமாக முன் வந்து எம்ஐடியின் தக்ஷா குழுவினருக்கு யூஏவி சேலஞ்ச் போட்டியில் பங்கேற்கும் ஆளில்லா குட்டி விமானத்தை உருவாக்கும் முயற்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
அஜித்குமார் ஒவ்வொரு முறையும் ஆலோசனைக்காக வருவதற்கு ஊதியமாக அவருக்கு ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அந்தத் தொகையையும் அவர் எம்ஐடியின் ஏழை மாணவர்கள் கல்விச் செலவிற்காக அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் யூஏவி சவாலானது ஒவ்வொரு ஆண்டும் ஏரோஸ்பேஸ் துறை, அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து 100 நாடுகள் பங்கேற்றாலும் 55 நாடுகள் மட்டுமே 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன, அதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா ட்ரோனும் ஒன்று. ஆளில்லா விமானங்களை உருவாக்குவதில் அஜித் குமாருக்கு இருக்கும் அனுபவத்தை வைத்து தற்போது 6 மணி நேரம் 7 நிமிடங்கள் ட்ரோன் பறக்கும் சாதனையை இந்தக் குழு செய்துள்ளது.
அடுத்தகட்டமாக 30 கிலோ மீட்டர் தொலைவு பறந்து சென்று நோயாளியின் ரத்த மாதிரிகளை சேமித்து வந்து பரிசோதனை நிலையத்தில் அளிக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது இந்தக் குழு.
இதே போன்று 10 கிலோ எடையை தூக்கிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள குட்டி விமானம் மூலம் வாகன நெரிசலான நேரத்தில் ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு உறுப்புகளை கொண்டு செல்லும் மருத்துவ வாகனமாக இதனை பயன்படுத்த முடியுமா என்றும் தக்ஷா குழுவினர் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.
ஒரு நிமிடத்திற்கு 1 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் இந்த ட்ரோன் காவல்துறையினரின் அனுமதி மறுப்பால் 200 மீட்டர் உயரம் வரையில் மட்டுமே வட்டமிடும் வகையில் கண்காட்சியில் பறந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 45 நிமிடங்கள் வானில் பறக்கும் 4 ஆளில்லா விமானங்களை காவல்துறையினருக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளனர் என்பது இந்த மாணவர்களின் திறனை அதிகாரிகள் அங்கீகரித்ததற்கான உதாரணம் என்றும் சொல்லாம்.
கட்டுரை : பிரியதர்ஷினி