500 கோடி ரூபாய் வணிகத்தை உருவாக்கிய செருப்பு தைப்பவரின் மகனின் வெற்றிக் கதை...
அசோக் காதேவின் அப்பா செருப்பு தைப்பவர். மும்பையின் பரபரப்பான நகரில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து செருப்புகளைத் தைப்பார். பல போராட்டங்களை எதிர்கொண்டு அசோக் வெற்றிகரமாக கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் அவரது நகரில் அரசாங்கத்தால் இயங்கும் கப்பல் துறைமுகத்தில் பணிபுரிந்தார்.
கடலை ஒட்டியுள்ள பகுதிகள் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள், பராமரிப்புப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான திறன்களைப் பெற்றதும் சொந்த நிறுவனத்தைத் துவங்கினார். இன்று இந்நிறுவனத்தில் 4,500-க்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இதன் ஆண்டு வருவாய் 500 கோடி ரூபாய்.
மஹாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த பெட் என்கிற கிராமத்தில் பிறந்தார் அசோக். இவரது குடும்பத்தில் மொத்தம் ஆறு குழந்தைகள். வறுமை காரணமாக பல நாட்கள் பசியோடு உறங்கியுள்ளனர். சாமர் என்கிற தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். விலங்குகளின் தோலை உரித்தெடுப்பது இவர்களது குலத் தொழிலாகும். இவரது அம்மா உயர் வர்க்கத்தை சேர்ந்தோரின் நிலத்தில் விவசாயக் கூலியாக பணிபுரிந்தார். சமூக புறக்கணிப்பு, வாய்ப்புகள் மறுக்கப்படுதல் என இவரது குடும்பம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் பாகுபாடுகளை சந்திக்க நேர்ந்தது.
இறுதியாக அவரது அப்பா மும்பைக்கு மாற்றலாகி பணியைத் தேட தீர்மானித்தார்.
“என் அப்பா மும்பையில் செருப்பு தைப்பவராக இருந்தார். இன்றும் சித்ரா டாக்கீஸ் அருகில் அவர் அமர்ந்து பணிபுரிந்த மரத்தடியைப் பார்க்கலாம்,”
என்று அசோக் தி எகனாமிக் டைம்ஸ் நேர்காணலில் தெரிவித்தார். சிறு வயதிலேயே படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்தார் அசோக். வெவ்வேறு அரசுப் பள்ளிகளில் படித்தார். அவரது அப்பாவும் அண்ணனும் மும்பையில் வசித்தனர். பத்தாம் வகுப்பு முடித்ததும் மும்பைக்குச் சென்று அவர்களோடு இணைந்துகொண்டார். அந்த சமயத்தில் அவரது அண்ணன் அரசாங்கத்திற்குச் சொந்தமான கப்பல்களை உருவாக்கும் நிறுவனமான மசாகான் டாக் (Mazgaon Dockyard) நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். அசோக் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டவாறே அண்ணனுடன் பயிற்சி பெறுபவராக இணைந்தார்.
1975 முதல் 1992-ம் ஆண்டு வரை மசாகான் டாக் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சொந்த நிறுவனத்தைத் துவங்கத் தேவையான தொடர்புகளையும் திறன்களையும் உருவாக்கி இருந்தார். 1983-ம் ஆண்டு ஜெர்மனி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த அனுபவம் தொழில்முனைவிற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது. பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் அசோக் தனது சகோதரர்களான தத்தா, சுரேஷ் ஆகியோருடன் இணைந்து DAS ஆஃப்ஷோர் என்கிற நிறுவனத்தைத் துவங்கினார். மூன்று சகோதரர்களின் பெயரின் முதலெழுத்தே நிறுவனத்தின் பெயராகும்.
1991-ம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் காரணமாக எண்ணெய் சேவைத் துறையில் புதிய வாய்ப்புகள் முளைக்கத் துவங்கியது. சில சிறியளவிலான துணை ஒப்பந்தங்கள் கையாண்ட பிறகு இவர்கள் முன்னர் பணியாற்றிய மசாகான் டாக் நிறுவனத்திடமிருந்து முதல் பெரிய ப்ராஜெக்ட் கிடைத்தது. ஏற்கெனவே இவர்கள் பணியாற்றிய நிறுவனங்களிடமிருந்து கடன் முறையில் பொருட்கள் கிடைத்தது. கடலை ஒட்டியுள்ள பகுதியில் எண்ணெய் கிணறு துளையிட பயன்படுத்தும் உபகரணம் (offshore oil rig) தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் பணியைத் துவங்கினார். விரைவில் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். ஓஎன்ஜிசி, எஸ்ஸார், ஹுண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் இவர்களது வாடிக்கையாளர்கள் என என்டிடிவி தெரிவிக்கிறது.
தற்சமயம் DAS ஆஃப்ஷோர் நிறுவனத்தில் 4,500-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது ஆண்டு வருவாய் 500 கோடி ரூபாயாகும்.
அசோக் அவரது அம்மாவின் விருப்பப்படி அவரது கிராமத்தில் ஒரு கோவிலை புதுப்பித்துள்ளார். இவர்களது ஜாதியின் காரணமாக இதே கோவிலுக்குள் இவரது குடும்பத்தினர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. எதிர்காலத்தில் இவரது கிராமத்தில் ஒரு மருத்துவமனை, பள்ளி, பொறியியல் கல்லூரி ஆகியவற்றை துவங்க திட்டமிட்டுள்ளார்.
கட்டுரை : Think Change India