இது ஒரு நிஜ 'டங்கல்’ ஸ்டோரி: அம்மாவின் கனவை நினைவாக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் சிஸ்டர்ஸ்!
இந்தியாவில் பெண்களை விளையாட்டில் அனுமதிப்பதே அரிதான விஷயம். அதிலும் ரிஸ்க் நிறைந்த ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற ஒரு விளையாட்டில் தன் மூன்று பெண்களையும் சேர்த்து, அவர்களை சாதனையாளர்கள் ஆக்கியுள்ளார் தாய் மணிமேகலை.
மல்லுக்கட்டி குஸ்திப் போட்டு அப்பா அமீர்கானின் கனவை நினைவாக்கும், மல்யுத்த வீராங்கனைகளின் கதையான ‘டங்கல்’ திரைப்பட கதையை நிஜத்தில் பிரதிபலிக்கிறது மணிமேகலையின் குடும்பம். ஆம்... அங்கு மஹாவீர் சிங் போகட். இங்கு மணிமேகலை.
விளையாட்டுக் களத்தில் மகள்கள் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற தனது லட்சிய விதையை மகள்களின் மனதில் விதைத்து, அதை விருட்சமாக வளரச் செய்து, அது நனவாக்கும் முயற்சியில், மூம்மகள்களையும் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு அழைத்து சென்று வருகிறார் மதுரைத் தாய் மணிமேகலை.
“திருச்சி மணப்பாறையில் உள்ள கிராமம் தான் சொந்த ஊர். பசங்களும் சேர்ந்து படிக்கிறதால எட்டாம் வகுப்புக்கு மேல், பொம்பள பிள்ளைங்க ஸ்கூலுக்கே அனுப்பமாட்டாங்க எங்கூர்ல. அப்போவே, என் பிள்ளைகளை இப்படி வளர்க்கக்கூடாதுனு முடிவு செய்து விட்டேன்,”
என்று பேச்த்தொடங்கிய மணிமேகலைக்கு சௌம்யா (18), ஷோபிகா (16), பிரியதர்ஷினி (14) என்று மூன்று பெண் குழந்தைகள். மூவருக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் அறிமுகமாகி மூன்று ஆண்டுகளே ஆகியுள்ளது. ஆனால், அதற்குள் தேசிய அளவிலான பிளேயர்களாகிவிட்டனர் என்றால் அதற்கான காரணகர்த்தாவாய் இருக்கிறார் மணிமேகலை.
மணிமேகலைக்கு பிள்ளைகள், படிப்பைத் தாண்டி மற்றத் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை, அதற்கான முயற்சிகளாய், இந்தி, பரதநாட்டியம், டைப் ரைட்டிங், யோகா என ஸ்பெஷல் வகுப்புகளில் சேர்த்து, நித்தம் அழைத்து சென்று வந்துள்ளார். மூன்று பிள்ளைகளும் யோகாவில் வல்லுநர்களாக மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர். அப்படி, ஒரு முறை யோகா போட்டிக்காக சென்றிருக்கையில், பிற போட்டியாளர்கள் உடல் நெளிவுத்தன்மை மிகுந்திருக்க, அவர்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் வகுப்புக்கு செல்வதாக கூறியுள்ளனர். அன்று முதல், மூவரையும் ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சியில் சேர்த்து விட்டுள்ளார்.
“எப்போதும் மூன்று மகள்களையுமே பயிற்சிக்கு அனுப்பிவிடுவேன். எந்த பிள்ளையும் அம்மா நமக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காக, மூவரையும் அனுப்பிவிடுவேன். யாருக்கு அதிக ஆர்வமும், அதற்கான திறமையும் இருக்கிறதோ அவர்கள் தொடர்ந்து பயிற்சிக்கு செல்வர். அப்படி தொடங்கியது தான் ஜிம்னாஸ்டிக்ஸ். அதுவே, இப்போது மூத்த மகளுக்கு முழு இலவசமாக கல்லூரியில் படிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.”
மூன்று மகள்களுமே, தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளனர். இதில், ஷோபிகாவும், பிரியதர்ஷினியும் அடுத்த வாரம் திரிபுராவில் நடக்கவுள்ள நேஷனல் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்காக திரிபுராவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
“பொம்பள பிள்ளைய எதுக்கு விளையாட்லலாம் விடுறனு அக்கம் பக்கத்தார் முதல் சொந்த பந்தம் வரை எல்லாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் என்று அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என் கணவர் முழு ஆதரவு கொடுத்தார். இப்போது திரிபுராவுக்கும் எல்லோரும் அனுப்ப வேண்டாம் என்றனர். ஆனால், அனுப்பி வைத்துள்ளேன்,” என்றார்.
பிள்ளைகள் பதக்கத்துடன் திரும்பி வரவேண்டும் என்று எதிர்நோக்கிக் காத்துக் கொண்டுள்ளார். ஆனால், ஜிம்னாஸ்டிக்சில் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதே கடுமையாக உள்ளது, அதற்கு முதற்காரணம் பயிற்சிக்கு தேவையான போதிய உபகரணங்களும், வசதிகளும் இல்லை என்கிறார் சௌம்யா.
“மதுரையில் சாதரண நார்மல் மேட் பயன்படுத்தியே பயற்சி செய்கிறோம். என்னதான் மெத்தை இருந்தாலும் பயம் இருக்கும். சென்னையில் எல்லாம், மெத்தை கீழ் ஸ்பிரிங் இருக்கும். அதில் பயிற்சி எடுத்துக் கொண்டால் ஈசியாக இருக்கும். ஆனால், அங்கு சென்று தங்கியும் பயிற்சி எடுத்துக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லை,” என்றார் சௌம்யா.
பயிற்சி எடுத்துக்கொள்ள வசதிகளும் கிடையாது, உபகரணங்களும் கிடையாது. ஆனால், தீபா கர்மாக்கர்கள் மட்டும் தானாவே உருவாகிப் பதக்கங்களை பெற்றுதர வேண்டும்...