வீட்டுக்குள் குப்பை மூட்டையில் 2 லட்சம் பணம் இருந்தும் பட்டினியால் தவித்த முதாட்டிகள்!
சென்னையில், நடைபாதையில் தவித்த ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டில் குப்பை மூட்டைகளுக்கு நடுவே 2 லட்சம் பணம் மற்றும் குடம் நிறைய காசுகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னையில், ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டில் குப்பை மூட்டைகளுக்கு நடுவே 2 லட்சம் பணம் மற்றும் குடம் நிறைய காசுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் பணம் இருந்தும் அந்த மூதாட்டிகள் பட்டினியில் தவித்த செய்தி அனைவரையும் உருக்கியுள்ளது.
சென்னை ஓட்டேரி சத்தியவாணி முத்து நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதி இருக்கிறது. இதன் கீழ் தளத்தில் உள்ள 34 நம்பர் வீடு எப்போதும் பூட்டி இருப்பது வழக்கம். இந்த வீட்டுக்குள் குப்பை மூட்டைகளாக அடுக்கப்பட்டிருந்தன. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசும் என்றும் அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் சோகம் என்னவென்றால், இந்த வீட்டிற்கு சொந்தக்காரர்களான ராஜேஸ்வரி, மகாலட்சுமி மற்றும் விஜயலட்சுமி ஆகிய மூதாட்டிகள் எப்போதும் நடைபாதையில் வசித்து வந்தது தான்.
இந்த நிலையில் அண்மையில் மூதாட்டி ராஜேஸ்வரி இறந்துவிட்டார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் மற்ற இருவரும் தவித்த நிலையில், தலைமைச் செயலக காலணி காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி நிலைமையை உணர்ந்து சடலத்தை அடக்கம் செய்ய உதவினார்.
ஆனால், அதன் பிறகும் அந்த இரண்டு மூதாட்டிகளும் நடைபாதையில் வசிப்பதை அறிந்து காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி இது குறித்து கவனம் செலுத்தினார். மூதாட்டிகள் வீட்டுக்குள் குப்பைகளாக இருப்பதால் உள்ளே செல்ல முடியவில்லை என கூறியதை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அந்த இடம் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
வீட்டைச்சுத்தம் செய்த போது, துர்நாற்றத்துக்கு நடுவே மூட்டை மூட்டையாக குப்பைகள் அகற்றப்பட்டதோடு, ஒரு மூட்டையில் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வந்தது. மேலும் சில குடங்களில் சில்லறை காசுகளும் இருந்தன.
மாநகராட்சி ஊழியர்களும், பொதுமக்களும் இந்த காட்சியை பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். அப்போது, இவை எல்லாம் தாங்கள் குப்பை பொறுக்கி சேகரித்த பணம் என்று மூதாட்டிகள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்த மொத்த பணத்தை எண்ணிய போது, இரண்டு லட்சத்திற்கும் அதிகம் ரொக்கம் இருந்தது. இவற்றில் 40,ஆயிரத்துக்கும் மேல் செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளாக இருந்தன. மேலும் ஏழு சவரன் தங்கள் நகையும் இருந்தது.
இந்த வீட்டில் இருந்து மொத்தம் இரண்டு லட்சம் குப்பைகள் அகற்றப்பட்டன.
மூதாட்டிகள் முதுமையால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. வீட்டில் நிறைய பணம் வைத்துக்கொண்டு, அதை அறியாமல் நடைபாதையில் அவர்கள் தவித்தது அந்த பகுதி மக்களை பரிதாபத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனினும், மூதாட்டிகள் நிலை அறிந்து தகுந்த நடவடிக்கை எடுத்து உதவிய, காவல் துறை அதிகாரி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை பொதுமக்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு பின்னர் மூதாட்டிகள் இருவரும் சுத்தம் செய்யப்பட்ட வீட்டில் தங்கியுள்ளனர்.
செய்தி மற்றும் படங்கள் உதவி: மாலைமலர், பாலிமர்