2,000 லோன் ஆப்’கள் கூகுள் பிளேஸ்டோரில் இருந்து நீக்கம்!
பாதுகாப்பு காரணங்களுக்காக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர் கடன் வழங்கும் செயலிகளை கூகுள் இந்தியா பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர் கடன் வழங்கும் செயலிகளை கூகுள் இந்தியா பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இவை நீக்கப்பட்டுள்ளன.
இணையம் மூலம் கடன் வழங்கும் செயலிகள் அண்மை காலமாக கவனத்தை ஈர்த்திருப்பதோடு சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கின்றன. இவற்றில் சில செயலிகள் நுகர்வோரிடம் முறைகேடாக நடந்து கொள்வதாக புகார்களும் எழுந்துள்ளன.
அண்மையில் ரிசர்வ் வங்கியும் டிஜிட்டல் கடன் செயலிகளுக்கான புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. முறைகேடான செயல்பாடுகளில் இருந்து நுகர்வோரை காக்கும் வகையில் கட்டுப்படுத்தப்படாத செயலிகளை தடை செய்வதற்கான சட்டம் உருவாக்கப்படவும் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு துவக்கம் முதல் இதுவரை, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிநபர் லோன் வழங்கும் செயலிகளை கூகுள் இந்தியா பிளேஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
“உள்ளூர் ஆய்வு மற்றும் பங்குதாரர்களின் கருத்து அடிப்படையில், இந்தியாவில் தனிநபர் கடன் செயலிகள் தொடர்பான கூகுள் பிளே கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன,” என்று கூகுள் ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை பிரிவு மூத்த இயக்குனர், தலைவர் சைகத் மித்ரா தெரிவித்துள்ளார்.
செயலிகள் தொடர்பான கட்டுப்பாடு அமைப்புகள் விசாரணையில் ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் பிளேஸ்டோரில் பதிவேற்றப்படும் ஆப்’கள் பலவகையான சோதனைகளுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆனால் கடன் செயலிகளில் கிரிமினல் செயல்கள் செயலிக்கு வெளியே நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்’களில் கடன் பெற்றவர்கள் பல்வேறு வகையான மிரட்டல்களுக்கு இலக்காவதாக புகார்கள் தெரிவித்துள்ளனர்.”
“ஒரு சில தனிநபர் கடன் செயலிகளால் மோசமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிய வந்ததையடுத்து, துறையினர் மற்றும் கட்டுப்பாடு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக, மித்ரா தெரிவித்துள்ளார்.
பிளேஸ்டோரில் இருந்து தீங்கான செயலிகளை நீக்குவதற்கு செயற்கை நுண்ணறிவு / இயந்திர கற்றல் நுட்பங்களை கூகுள் பயன்படுத்தி வருகிறது.
தனிநபர் கடன் செயலிகள் பிரச்சனைக்கு ஒட்டுமொத்த தடை தீர்வாகுமா எனும் கேள்விக்கு, இந்த செயலிகளில் ஒருவித பயன்பாடு இருப்பதாக அவர் கூறினார். குறிப்பாக பெருந்தொற்று சூழல் மற்றும் வேலையிழப்புக்கு பிறகு, பலருக்கு கடன் தேவை ஏற்பட்டது. ஒவ்வொரு மோசமான கடன் செயலிக்கும், ஒரு டஜன் நல்ல செயலி இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
தொகுப்பு: சைபர் சிம்மன்