சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரண சலுகைகள்!
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் உதவியளித்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் விதமாக 20 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைகளை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
தற்போது சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரண சலுகைகள் வழங்கப்படவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக இவ்வளவு அதிகமான தொகையை அறிவிப்பது இதுவே முதல் முறை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டார்.
“எம்.எஸ்.எம்.ஈ துறையை ஊக்குவிக்கும் வகையிலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் பல்வேறு முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்தத் தொழில் நிறுவனங்களுக்கான 20,000 கோடி ரூபாய் சலுகைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
அதன்படி ‘நடுத்தர' நிறுவனங்களுக்கான முதலீடு 20 கோடி ரூபாயாகவும் விற்றுமுதல் வரம்பு 250 கோடி ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முதலீடு ஒரு கோடி ரூபாய் வரையிலும் விற்றுமுதல் வரம்பு 5 கோடி ரூபாய்க்கும் குறைவாகவும் கொண்டுள்ள நிறுவனங்கள் ‘குறு' நிறுவனங்களாக வரையறுக்கப்படுகிறது.
அதேபோல் முதலீடு 10 கோடி ரூபாயாகவும் விற்றுமுதல் வரம்பு 50 கோடி ரூபாய்க்கும் குறைவாகவும் கொண்டுள்ள நிறுவனங்கள் ‘சிறு' நிறுவனங்களாக வரையறுக்கப்படுகிறது.
மேலும் விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள் போன்றோருக்கு உதவும் வகையிலான திட்டங்கள் குறித்தும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தகவல்: ஏஎன்ஐ