தூங்கினால் 1லட்சம் சம்பளம்: தூக்க பயிற்சித் திட்டத்திற்கு 23 பேர் தேர்வு!
100 நாள் தினமும் 9 மணி நேரம் தூங்கினால் ஒரு லட்சம் சம்பளம் அளிப்பதாக கூறிய வேக்ஃபிட் நிறுவனம், சென்னை உட்பட பல நகரங்களில் இருந்து 23 பேரை தேர்வு செய்துள்ளது.
தூக்கப்பிரியர்களுக்கான பயிற்சித் திட்டதை அறிவித்து, இணையத்தில் வைரலான பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘Wakefit', இத்திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 23 போட்டியாளர்களை அறிவித்துள்ளது. இதில் இரண்டு பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்ல தூக்கத்திற்கான புதுமையான தீர்வுகளை இணையம் மூலம் வழங்கி வரும் பெங்களூருவைச் சேர்ந்த ‘வேக்ஃபிட்’ நிறுவனம், கடந்த ஆண்டு, தூங்குவதற்கான இண்டெர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் நபர்கள் 100 நாள் தினமும் 9 மணி நேரம் தூங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்து, இதற்கான நிபந்தனைகளையும் வெளியிட்டு விண்ணபங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், வேக்ஃபிட் நிறுவனம் இந்த இண்டெர்ன்ஷிப் திட்டத்திற்கான தேர்வு செய்யப்பட்டுள்ள 23 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வைரல் நிகழ்வானது என்றும், நாடு முழுவதிலும் இருந்து 1.7 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்ததகாவும் நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தோனேசியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட 30 வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் விண்ணப்பித்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெங்கள்ரு, சென்னை, டெல்லி, மும்பை, புனே என பல்வேறு நகரங்களில் இருந்தும் விண்ணப்பம் வந்ததாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
விண்ணப்பித்தவர்களில் இருந்து, கவனமான பரிசீலனை மற்றும் வீடியோ நேர்காணலுக்குப் பிறகு 1,000 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் இருந்து 99 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
சைரஸ் ப்ரோச்சா, மல்லிகா டுவா, ஷிவாங்கி சிங், நவீன் கவுசிக் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு இவர்களிடம் நேர்முகத்தேர்வு நடத்தியது. இதன் அடிப்படையில் 23 பேர் இறுதி செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையைச் சேர்ந்த ஸ்வாதி மற்றும் ராஹுல் என்பவர்களும் இந்தத் திட்டத்தில் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்பட்டுள்ள 23 பேரும், 100 நாள் தூக்கப் பயிற்சி திட்டத்தில் பங்கேற்பார்கள். இவர்களுக்கு வேக்ஃபிட் மெத்தை மற்றும் தூக்கத்தை கண்காணிப்பதற்கான டிராக்கர் கருவி வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள நன்றாக தூங்குவதற்கான ஆலோசனைகள் பயிற்சி பெறுபவர்களுக்கு வழங்கப்படும். 100 நாள் முடிவில் 23 பேருக்கும் சம்பளமாக ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொகுப்பு.: சைபர்சிம்மன்