கல்விக் கடன் நடைமுறை எளிமைப் படுத்தப்படும்: நிதித்துறை இணை அமைச்சர் அறிவிப்பு!
பொதுத்துறை வங்கிகள் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
சென்னையில் பிரைம் பாய்ண்ட் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட கல்விக்கடன் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர் கல்விக்கடன் பெற்று வெற்றிபெற்ற மாணவர்களின் வாழ்க்கை மாற்றத்தை வங்கிகள் பிரபலப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வங்கிகள் தங்களது தலைமையகத்தில் கல்விக்கடன் பெறாத மாணவர்களின் குறைகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய தொடர்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக தமது அமைச்சகம் விரைவில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பும் என்று அவர் தெரிவித்தார்.
கல்விக்கடன் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக மத்திய அரசு வித்யா லட்சுமி போர்ட்டல் எனப்படும் இணையவாசல் ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த இணைய வாசலில் மாணவர்கள் தங்களது தேவைகளை பதிவு செய்தால் வங்கிகள் அந்த மாணவர்களுக்கு கடன் வழங்க முன் வரும் என்றும், இந்த வசதியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
கல்விக்கடன் பெற்ற மாணவர்கள் வங்கிகளுக்கு கடனைத் திரும்ப செலுத்தினால்தான் வங்கிகள் பிற மாணவர்களுக்கும் கடன் வழங்க இயலும் என்றும் இதனைக் கருத்தில் கொண்டு மாணவர்களும் பெற்றோர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார்.