லிட்டருக்கு 200 கிலோமீட்டர் தூரம் பயணிக்கக்கூடிய திறன்மிகு காரை உருவாக்கியுள்ள VIT மாணவர்கள்!
VIT-ஐ சேர்ந்த இளம் பொறியியல் மாணவர்கள் குழு 'Eco Titans' சிங்கப்பூரில் நடக்கும் ஷெல் இகோ மாரத்தானில் இந்தியா சார்பாக பங்கேற்கத் தயாராக உள்ளனர்!
எரிபொருள் நெருக்கடி என்பது எப்போதோ எதிர்காலத்தில் வரப்போகிற கான்செப்ட் அல்ல. அடுத்த நாற்பதாண்டு காலங்களில் இது உலகை உலுக்கக்கூடிய உண்மை. எனவே வரவிருக்கும் நெருக்கடியை முழுமையாக தீர்க்கமுடியாவிட்டாலும் அதைக் குறைக்க உதவும் ஒரு உறுதியான தீர்விற்காக பணிபுரியும் நோக்கத்துடன் இளம் பொறியியல் மாணவர்கள் அடங்கிய ஒரு குழு களம் இறங்கியுள்ளது. Eco Titans என்கிற இந்தக் குழு ’ஹைப்பர்மைல்’ (Hypermile) என்கிற எரிபொருள் திறன் கொண்ட கார் ப்ரோடோடைப்பை உருவாக்கியுள்ளனர்.
தமிழகத்தின் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியைச் (VIT) சேர்ந்த எட்டு பேர் அடங்கிய குழு 20 வயது எஸ்.அனிருத் தலைமையில் செயல்படுகின்றனர். நிலையான ஆற்றலின் தேவையையும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு வடிவமைக்கப்பட்டு உற்பத்திசெய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்துள்ளனர்.
எண்ணெய் நெருக்கடி நிலவுகிறது
40 ஆண்டுகளில் எண்ணெய் நெருக்கடி உலகச் சந்தையை தாக்கப்போகிறது. ஏற்கெனவே பல நாடுகள் இந்த வளம் வேகமாக குறைந்து வருவதை உணர்ந்து கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றமானது போக்குவரத்துத் துறையில் வரவிருக்கும் அழிவையே குறிக்கிறது என்கிறார் அனிருத்.
”இந்தக் காரை உருவாக்குவதும் இந்தத் துறையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும் ஷெல் இகோ மாரத்தானைத் தாண்டி நிலையான வளர்ச்சியைச் சார்ந்ததாகும். இப்போதே இந்தத் துறையில் ஏதாவது உருவாக்கினோமானால் ஒரு நாள் அதைச் சாலையில் காண முடியும்.” என்றார்.
இந்தக் குழு ஏற்கெனவே இந்தியாவில் மட்டுமல்லாமல் அருகாமையிலுள்ள நாடுகளிலும் பிரபலமடைந்துவிட்டது. மக்களை ஊக்குவிக்கவும், நிலையான வளர்ச்சிக்காக மற்றவர்கள் பாடுபட உத்வேகம் அளிக்கவும் அனிருத் மற்றும் அவரது குழுவினர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ப்ரோக்ராம்களை நடத்தியுள்ளனர். ஜனவரி மாதத்தில் நேபாலிலுள்ள காட்மண்டு பல்கலைக்கழகத்தின் மாணவர்களுடன் இரு தரப்பினரும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் விதத்திலான கூட்டத்தை நடத்தினர்.
எரிபொருள் திறன்மிக்க கார்
ஒரு நபர் இருக்கைக் கொண்ட இந்தக் கார் குறைவான எடை கொண்டது. மிகச்சிறிய என்ஜினுடன் ஏரோடைனமிக்கல் டிசைன் கொண்டது. இதனால் இது எரிபொருள் திறன் மிக்கது. இதன் வெளிப்புறம் மிகக்குறைவான எடையும் திடமும் மிக்க கார்பன் ஃபைபராலானது. மேலும் வணிகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களில் இருக்கும் carburetor என்ஜின் இதில் பயன்படுத்தப்படவில்லை. இந்த ப்ரோடோடைப்பில் எரிபொருள் திறன் மிக்க Electronic Fuel Injection (EFI) என்ஜின் உள்ளது. ’ஹைப்பர்மைல்’ மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் 150-200 கிலோமீட்டர் மைலேஜ் கொடுக்கும் என்று மதிப்பிடப்படுகிறது என்று ஹைப்பர்மைலின் அம்சம் குறித்து அனிருத் விவரித்தார்.
இந்த மாடல் வணிக நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை என்றாலும் இந்த யோசனையும் தொழில்நுட்பமும் வருங்காலத்தில் பெரியளவில் உற்பத்தி செய்வதற்கு அடித்தளமாக அமையலாம் என்றார் அனிருத். காரின் அம்சங்கள் வணிகத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களிலும் செயல்படுத்தலாம். EFI என்ஜினுடன் கூடிய ஏரோடைனமிக்ஸ் மாடல் மற்றும் கார்பன் ஃபைபரினாலான வெளிப்புறம் ஆகியவற்றை பயன்படுத்தப்படுவதால் எரிபொருள் திறன் அதிகரிக்கும்.
பாடம், ஆராய்ச்சி மற்றும் புதுமை…
அனிருத் மற்றும் குழுவினர் பொறியியல் படித்துக்கொண்டிருப்பதால் பெரும்பாலான பணிகளை இரவு நேரத்தில் மேற்கொள்கின்றனர். வகுப்பு நேரங்களுக்கிடையில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள ஆட்டோமொபைல் ரிசர்ச் செண்டருக்கு செல்கின்றனர். அதிகாலை நான்கு மணி வரை பணிபுரிகின்றனர். Eco Titan குழு திறம்பட தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்ற அயராது உழைக்கின்றனர்.
கல்லூரி படிப்பில் கவனம் செலுத்துவதுடன் வாரம் முழுவதும் மாற்று ஆற்றல் வளத்தை கண்டறிவதையே ஒரே நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
”எந்த காரணத்திற்காக இந்தப் பணியை மேற்கொண்டுள்ளோமோ அதுதான் எங்களுக்கு உத்வேகமளிக்கிறது. ஒவ்வொரு நாளும் எரிபொருள் விலையுயர்வு குறித்து படிக்கிறோம். எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பதால் மாற்று ஆற்றல் வளத்தின் முக்கியத்துவம் குறித்த செய்திகள், புள்ளிவிவரங்கள் மற்றும் ஆராய்ச்சிகளின் விவரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. பொறியாளர்களாக வருங்கால ஆற்றல் நெருக்கடியை மனதில் கொண்டு அதற்கான தீர்வை கண்டறிவது அவசியமாகிறது.” என்று விவரிக்கிறார் அனிருத்.
காரின் பெரும்பாலான பாகங்கள் வெளியிலிருந்து வாங்காமல் உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இளம் மாணவர்கள் அடங்கிய குழுவிற்கு பல்கலைக்கழகம் ஆதரவளித்து வருகிறது. Eco Titans குழுவிற்கு பணியிடம் மற்றும் உபகரணங்களை வழங்குகிறது VIT பேராசிரியர்கள் அவ்வப்போது இணைந்து வழிகாட்டுகின்றனர். இக்குழுவினர் பல பாராட்டுகளை பெற்றுள்ளனர். புதுமை, படைப்பாற்றல், நடைமுறைப்படுத்த உகந்தது ஆகியவற்றிற்கான பாராட்டுகளைப் பெற்ற முதல் மூன்று குழுக்களில் ஒன்றாக இடம்பெற்றனர்.
உற்பத்தியில் ஈடுபட்ட சமயத்தில் இந்தக் குழுவினருக்கு பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு தனியார் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து பகுதியாக ஸ்பான்சர்ஷிப் கிடைத்தது. தற்போது அவர்களது ப்ரோடோடைப்பை போட்டிக்காக சிங்கப்பூருக்கு அனுப்புவதற்கு தேவையான நிதி இல்லாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். க்ரவுட் சோர்சிங் மூலமாக நிதியை உயர்த்தலாம் என்கிற நம்பிக்கையில் உள்ளனர். அவ்வாறு சேகரிக்கப்படும் நிதி, மாற்று ஆற்றல் வளத்தைக் கொண்ட நிலையான சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்று திடமாக நம்புகின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கெடியா