இண்டெர்நெட் இல்லாது ரயில் பயணத் தகவல்களை அறிய உதவும் செயலி!
பெங்களூருவைச்சேர்ந்த சிக்மாய்ட் லேப்ஸ் உருவாக்கியுள்ள ‘Where is my Train’ ஆப், ஐ.ஆர்.சி.டி.சி சேவைகள் மற்றும் ரயில் பயணங்களை நேர்த்தியாக ஒருங்கிணைக்கிறது. இணைய இணைப்பு இல்லாமல் செயல்படும் இதற்கு ஆண்ட்ராய்டில் அதிக ரேட்டிங் உள்ளது.
இந்திய ரயில்வேக்கு 165 வயதாகிறது. அது உலகின் நான்காவது பெரிய ரெயில் சேவையாக இருப்பதோடு, இந்திய மக்களுக்கான முக்கிய போக்குவரத்து சேவையாகவும், நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு தரும் அமைப்பாகவும் இருக்கிறது.
இந்திய ரயில்வே சேவையில் தினமும் 20,000க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் இயங்குகின்றன மற்றும் நீண்ட தொலைவு மார்கங்கள், புறநகர் ரயில் சேவைகளில் 23 மில்லியன் மக்களுக்கு மேல் பயணிப்பதாக ரயில்வே அமைச்சக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
2017-18 ல் இந்திய ரயில்வே நாட்டில் உள்ள 7,400 ரயில் நிலையங்கள் வாயிலாக 8.2 பயணிகளுக்கு சேவை அளித்துள்ளது. எனவே ரயில் பயணத்தை எளிதாக்கக் கூடிய எந்த சேவையும் வரவேற்கக் கூடியதே.
டிக்கெட் முன்பதிவு, பணம் செலுத்துவது, டிக்கெட்டை ரத்து செய்வது, உணவு தருவிப்பது என ரயில் போக்குவரத்தின் அனைத்து அம்சங்களும் தொழில்நுட்ப புதுமையால் பெருமளவு மாற்றத்தை எதிர்கொண்டுள்ளன.
மாதந்தோறும் லட்சக்கணக்காணக்கானோர் பயன்படுத்தும் ஐ.ஆர்.சி.டிசியின் அதிகாரப்பூர்வ செயலி இருக்கிறது. இது தவிர, இக்சிகோ (செக்கோயா கேபிடல் மற்றும் எஸ்.ஏ.ஐ.எப் பாட்னர்ஸ் நிதி பெற்றது), ரெயில்யாத்ரி (நந்தன் நிலேகனி ஆதரவு பெற்றது), டிரைன்மேன், ரெயில் மேடாட் மற்றும் எம்-இண்டிகேட்டர் உள்ளிட்ட செயலிகளும் இருக்கின்றன.
இணைய இணைப்பு இல்லாமல், ரெயில்களின் தற்போதைய நிலையை தெரிந்து கொள்ள உதவும், வேர் ஈஸ் மை டிரைன் (Where Is My Train) செயலி இந்த பிரிவில் புதிய வரவாகும்.
ஆண்ட்ராய்டில் 10 மில்லியன் தரவிறக்கத்தை பெற்று கூகுள் மற்றும் ஜியோமி ஆகிய நிறுவனங்களின் கவனத்தை இது ஈர்த்துள்ளது. இரண்டு நிறுவனங்களுமே இதில் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கூகுள் பிளேஸ்டோரில் பயணம் மற்றும் உள்ளூர் பிரிவில் இது முதலிடம் பிடித்துள்ளது.
பெங்களூருவைச்சேர்ந்த சிக்மாய்ட் லேப்ஸ் உருவாக்கிய இந்த செயலிக்கு இது மிகப்பெரிய வளர்ச்சியாகும். இந்த ஆண்டு துவக்கத்தில் ’வேர் ஈஸ் மை டிரைன்’ செயலி இந்தியாவில் 2018 ந் சிறந்த செயலியாக பிளே ஸ்டோரில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. (பொதுமக்கள் வாக்குகள் அடிப்படையிலான இந்த பட்டியல் இன்னமும் அறிவிக்கப்படவில்லை).
இந்திய ரயில் பயணிகள் மத்தியில் இந்த செயலி பெரும் வரவேற்பைப் பெற என்ன காரணம்?
முதல் விஷயம் இந்த செயலி பயன்படுத்த எளிதாக இருக்கிறது. இரண்டாவதாக முன்பதிவு தினம், பிஎன்.ஆர் போன்ற கூடுதல் விவரங்களை எல்லாம் கேட்காமல் இந்த தகவல்களை அளிக்கிறது. மூன்றாவதாக, இந்த செயலி செல் கோபுர தரவுகள் கொண்டு ரயில்களை கண்டறிவதால், ஜிபிஎஸ் அல்லது இணைய இணைப்புக்கான தேவையில்லாமல் செய்கிறது. ஆங்கிலம் தவிர ஏழு உள்ளூர் மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம்.
இந்த செயலியை விரிவாக பார்க்கலாம்:
மற்ற செயலிகள் போல ’வேர் ஈஸ் மை டிரைன்’ சேவையை அணுக நீங்கள் உறுப்பினராக பதிவு செய்து லாகின் விவரங்களை உருவாக்கி கொள்ள வேண்டாம். எனவே இதை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. முதலில் இதில் உள்ள மொழிகளில் இருந்து ஆங்கிலம் அல்லது, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து விரும்பிய மொழியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
மொழியை தேர்வு செய்த பிறகு, செயலியின் முகப்புப் பக்கம் தோன்றும். இது, ஸ்பாட், பிஎன்.ஆர். மற்றும் இருக்கைகள் என மூன்று பிரிவுகளை கொண்டிருக்கிறது.
ஸ்பாட் என்பது தானாக தோன்றும் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பெரும்பாலான பயணிகள் இந்த செயலியை ரயிலின் இருப்பிடத்தை அறிய பயன்படுத்துகின்றனர். ரயில் பெயர் அல்லது ரயில் நிலையத்தின் பெயரை டைப் செய்து தகவல் பெறலாம்.
பைண்ட் டிரைன் வசதியை பயன்படுத்தியும் நீங்கள் ரயில்கள், அவற்றின் நேரம், டிக்கெட் விலை உள்ளிட்ட தகவல்களை பெறலாம். புறப்படும் இடம் மற்றும் செல்லும் இடத்தை உள்ளீடு செய்தால் போதுமானது.
“இந்திய ரயில்வே பயண அட்டவனையை இந்த செயலி இணைய இணைப்பு இல்லாமல் தருகிறது. ரயில் பெயர் அல்லது ரயில் எண் தெரியாமலேயே எங்கள் ஸ்மார்ட் தேடல் வசதி மூலம் புறப்படும் இடம் மற்றும் செல்லும் இடம் அல்லது பகுதி அளவு பெயரை குறிப்பிட்டு தேடலாம்,”
என இந்த செயலியின் பிளேஸ்டோர் குறிப்பு தெரிவிக்கிறது. பைண்ட் டிரைன் வசதி தேதிவாரியாக ரயில்களை அணுக மற்றும் வகைகள் வாயிலாக (முன்பதிவு இல்லாதது, ஸ்லீப்பர், ஏசி, முதல் வகுப்பு) அணுக வழி செய்கிறது.
பட்டியலில் தனிப்பட்ட பதிவை கிளிக் செய்தால், ரயிலின் மார்கம் முழுவதும் நிலையங்கள், அவற்றுக்கு இடையிலான தொலைவு, நிலைய எண்கள் உள்ளிட்ட தகவல்கள் வரைபடமாக தோன்றுகிறது. ஒரு நிலையத்தை விட்டு ரயில் புறப்படுவதும் உணர்த்தப்படுகிறது.
இருப்பிட அலாரம் சேவை முதன்மையான அம்சங்களில் ஒன்று. ஒரு ரயில் நிலையத்தை அடைவதற்கு முன் 10 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் முன்னதாக அலாரம் வைத்துக் கொள்ளலாம். இந்த அம்சம் தான் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.
ரயில் நிலைய மேடைகளில் ரயில் பெட்டிகளின் இருப்பிடம் மற்றும் இருக்கைகள் அமைப்பையும் அறிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது.
இருக்கைகள் மற்றும் பி.என்.ஆர் வசதிகளில் இருக்கை நிலை மற்றும் பிஎன்.ஆர் நிலையை அறிந்து கொள்ளலாம். இந்திய ரயில்வே இணையதளம் மூலம் இவை அளிக்கப்படுகின்றன.
பி.என்.ஆர் தகவல்களை வரி வடிவில் அல்லது குரல் வழியில் தெரிவிக்கலாம். உங்கள் குறுஞ்செய்திகளில் ஐ.ஆர்.சி.டி.சி செய்திகளில் இருந்து தானாக பி.என்.ஆர் தகவல்களை இந்த செயலி ஸ்கேன் செய்கிறது. பிஎன்.ஆர். நிலையை இந்த செயலி வாயிலாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
’வேர் ஈஸ் மை டிரைன்’ செயலி, தேவையான அம்சத்தை பரிந்துரைக்கும் வசதியையும் அளிக்கிறது. டிக்கெட் முன்பதிவு, தத்கல் நினைவூட்டல், வை-ஃபை தகவல்கள் ஆகிய அம்சங்களுக்கு வாய்ப்பு உள்ளன.
மேலும், செட்டிங் பகுதியில் மொழி, நேரம் மற்றும் நோட்டிபிகேஷன் அம்சங்களை அமைத்துக்கொள்ளலாம்.
என்ன சிறப்பு?
’வேர் ஈஸ் மை டிரைன்’ செயலி, உண்மையில் ஐ.ஆர்.சி.டி.யின் மொத்த ரயில் அட்டவனையையும் இணைய இணைப்பு இல்லாமல் கொண்டு வந்திருக்கிறது. (ரயிலுக்கு வெளியே அல்லது வேறிடத்தில் இருக்கும் போது தான் இணைய வசதி தேவை).
கொன்கன் ரெயில்வே, மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே, மேற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே மற்றும் தெற்கு ரயில்வே மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து மண்டலங்கள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. எனினும் இந்த செயலி தனியாருடையது, எவிதத்திலும் இந்திய ரயில்வேயுடன் தொடர்புடையது அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
இணைய இணைப்பு தேவைப்படாத பயன்பாடே இதை சிறந்ததாக ஆக்குகிறது. எந்த இடத்தில் இருந்தும் ரயில்வே தகவலை தெரிந்து கொள்ள வழி செய்கிறது. மேலும் புதிய அம்சங்களை இதில் எதிர்பார்க்கலாம்.
செயலி பதிவிறக்கம் செய்ய : Where is my train
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: சைபர்சிம்மன்