ஊபர் அறிமுகப்படுத்தும் ’ஊபர் ஏர்’ சேவை விரைவில் இந்தியாவில்...
ஊபர் நிறுவனம் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்சு ஆகிய நாடுகளில் அடுத்த ஐந்தாண்டுகளில் ’ஊபர் ஏர்’ சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. டோக்கியோவில் முதல் முறையாக நடைபெற்ற ஊபர் எலிவேட் பசபிக் எக்ஸ்போவில் ஊபர் நிறுவனம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
அதன் டெலிவரி தளம் ’ஊபர் ஈட்ஸ்’ சேவைக்கு ஆளில்லா விமானத்தை சோதனை செய்யும் திட்டத்தையும் அறிவித்தது.
இந்த நிகழ்வில் ஆசிய பசபிக் நகரங்களுக்கான வழித்தடங்களில் ’ஊபர் ஏர்’ செயல்படுவது எவ்வாறு உள்ளூர் போக்குவரத்து அமைப்பிற்கு உதவும் என்றும் அதன் பலன்களும் விளக்கப்பட்டது. ஊபர் ஏவியேஷன் ப்ரோக்ராம்ஸ் தலைவர் எரிக் ஆலிசன் ’ஊபர் எலிவேட் ஏசியா பசபிக் எக்ஸ்போ’ முதல் முறையாக அறிமுகமாவதாக குறிப்பிட்டார். அந்த நிகழ்வில் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள ’ஊபர் ஏர் சேவை’ குறித்து விவரித்தார்.
”நகர்புற விமான போக்குவரத்து, அதன் பயண பகிர்வு வணிகத்திற்கு உதவுவது போன்றே உணவு டெலிவரி வணிகத்திற்கும் உதவ வாய்ப்புள்ளது என்பதை ஊபர் உணர்ந்தது. விமானப் போக்குவரத்து ஏற்பாட்டின் மூலம் ஊபர் ஈட்ஸ் விரைவாக செயல்படும்; தொலைதூரங்களை அணுக முடியும்; உலகம் முழுவதும் உள்ள அதிகப்படியான வாடிக்கையாளர்களுக்கும் உணவகங்களுக்கும் நம்பகமான டெலிவரியை வழங்க முடியும்,” என்றார் ஊபர் செய்தித்தொடர்பாளர்.
ஊபர் எலிவேட் திட்டத்தின் ஒரு அங்கமாக உலகெங்கும் நகர்புற வான்வழி பயண பகிர்வு சாத்தியமாகும். ஐந்தாண்டுகளில் இந்த சேவை அறிமுகமாக உள்ள நகரங்களில் இருக்கும் ஊபர் வாடிக்கையாளர்கள் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் விமான சேவையைப் பெறமுடியும்.
இந்த ஐந்து நகரங்கள் ஏன் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
இதை சாத்தியப்படுத்த ஊபர் நிறுவனம் வாகன உற்பத்தியாளர்கள், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், தொழில்நுட்ப டெவலப்பர்கள் போன்றோருடன் இணைந்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவின் தல்லாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது. மே மாதம் நடைபெற்ற இரண்டாவது வருடாந்திர ஊபர் எலிவேட் சம்மிட்டில் சர்வதேச அளவில் பார்ட்னராக இணைய மூன்றாவது நகரத்தை தேடி வருவதாக தெரிவித்தது.
ஐந்து நகரங்களை தேர்வு செய்ததற்கான காரணங்கள்:
1. ஜப்பான் – உலகின் மிகச்சிறந்த பொது போக்குவரத்து அமைப்புகள், தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமோடிவ் தொழில்களைக் கொண்டுள்ள பகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
2. இந்தியா –உலகின் மிகவும் நெருக்கடி நிறைந்த நகரங்களில் பெங்களூரு, டெல்லி, மும்பை ஆகியவை அடங்கும். பெங்களூருவில் ஏற்கெனவே எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு ஹெலி டாக்சி சேவை அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
3. ஆஸ்திரேலியா – சிட்னி மற்றும் மெல்பர்னில் உள்ள ஆஸ்திரேலிய சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்துடன் இக்குழுவினர் இணைந்து செயல்படுகின்றனர்.
4. பிரான்சு – ஊபர் முதலில் துவங்கப்பட்ட பாரீஸ் பகுதியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மையத்தை திறக்கிறது.
5. பிரேசில் – ரியோடிஜெனரியோ மற்றும் சாவோ பாவுலோ மாநிலம் ஊபர் பார்ட்னரான Embraer நிறுவனத்தின் சொந்த பகுதியாகும். உலகளவில் பயண பகிர்வு சந்தையில் முக்கிய நிறுவனமாக செயல்படுகிறது. ஹெலிகாப்டர் சந்தையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது நகர்புற வான்வழி போக்குவரத்தில் பயண பகிர்விற்கான தேவை இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஊபர் எலிவேட் குழு நகரில் உள்ள பங்குதாரர்களிடம் கலந்துரையாடி வருகிறது. ஊபர் ஏர் இண்டர்நேஷனல் சிட்டி குறித்து அடுத்த ஆறு மாதங்களில் தெரிவிக்கும்.
மூன்றாவது நகரத்தை தேர்வு செய்வதில் மூன்று முக்கியக் காரணிகளை உருவாக்கியுள்ளது. சந்தையின் அளவு கணிசமாக இருக்கவேண்டும்; புதுமையான போக்குவரத்து தீர்வுகளுக்கான தேவை இருக்கவேண்டும்; உள்ளூர் பயன்பாடு சிறப்பாக இருக்கவேண்டும். அவ்வாறு பூர்த்தி செய்யப்படும் நிலையில் ஊபர் குறிப்பிட்ட அரசாங்கத்துடன் இணக்கமாக செயல்பட்டு தேவையான ஏற்பாடுகளை செய்யும்.
பட்டனை அழுத்தி வான்வழி போக்குவரத்து சேவையைப் பெறுதல்
“ஒரு பட்டனை அழுத்துவன் மூலம் வான்வழிப் போக்குவரத்து சேவையைப் பெறக்கூடிய வசதியை முதல் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்திய பிறகு ஊபர் ஏர் சேவையை அறிமுகப்படுத்த உள்ள அடுத்த ஐந்து நாடுகளைக் குறித்து தற்போது அறிவிக்கிறோம். இந்த நாடுகளில் ஊபர் ஏர் போக்குவரத்தை உடனடியாக அறிமுகப்படுத்தி எங்களது தொழில்நுட்பத்தை புதிய உயரத்திற்கு இட்டுச் செல்லமுடியும்.
எக்ஸ்போவில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இவர்கள் ஊபர் ஈட்ஸ் வாயிலாக உணவு டெலிவரி சேவையைப் பெற்றவர்கள். ஆசிய பசபிக் பகுதிகளில் ஊபர் ஏர் சேவைக்கு அதிக சாத்தியக்ககூறுகள் உள்ள போக்குவரத்து வழித்தடங்களை ஆராய்ந்து வருகிறது. அது மட்டுமின்றி போக்குவரத்து தொடர்பான வெவ்வேறு வகைகள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது.
பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பாராளுமன்ற துணை அமைச்சரான தைசகு ஹிராகி இந்நிகழ்வில் பேசுகையில்,
“பறக்கும் வாகனங்களுக்கான தேவை அதிகம் இருப்பதை நாம் பார்க்கிறோம். இது நகர்புறங்களில் உள்ள போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வாக அமைவதுடன் நகரின் மையப்பகுதிகள், தொலைதூர தீவுகள், மலைப்பகுதிள் ஆகியவற்றிற்கிடையேயான போக்குவரத்திற்கும் உதவுகிறது. மேலும் ஜப்பானில் சுற்றுலாவையும் ஊக்குவிக்கும். அதுமட்டுமல்லாது பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் மேம்படவும் உதவும்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “வருங்கால உத்திகளுக்கான முதலீடு 2018 (Investments for the Future Strategy 2018) மாநாட்டில் வான்வழி போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்திய போதும் மற்றும் தனியார் கூட்டுறவை ஏற்படுத்தவேண்டும் என பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் மற்றும் நிலம், கட்டமைப்பு, போக்குவரத்து அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி தெரிவித்தது. இந்த புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். வான்வழித் துறையில் புதுமைகளைப் புகுத்துவதில் ஜப்பான் முன்னணியில் திகழும் திறன் கொண்டுள்ளது என நம்புகிறேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர் : சிந்து காஷ்யப் | தமிழில் : ஸ்ரீவித்யா