30 நாடுகள்; 300 கோடி ரூபாய் டர்ன்ஓவர் - சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர் தயாரிப்பில் கோலோச்சும் நிறுவனம்!
1981-ம் ஆண்டு அயோத்தியில் தொடங்கப்பட்ட Yash Pakka Ltd சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர், கரும்பின் சக்கைகளில் இருந்து டேபிள்வேர் ஆகியவற்றைத் தயாரிக்கிறது.
விமானப்படையில் விமானியாக பணியாற்றவேண்டும் என்பதே வேத் கிருஷ்ணாவின் கனவாக இருந்தது. ஆனால், அவரது வாழ்க்கை வேறு வழியில் பயணித்தது.
தொழில் என்பது இவருக்குப் புதிதல்ல. இவரது அப்பா கேகே ஜுஜுன்வாலா உத்திர பிரதேசத்தின் அயோத்தி பகுதியில் பேப்பர் மில் வைத்திருந்தார்.
1981ம் ஆண்டு நிறுவப்பட்ட
கரும்பின் சக்கைகளைக் கொண்டு ரேப்பிங் பேப்பர்கள் தயாரிக்கத் தொடங்கியது.கேகே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார். பின்னர், அதிலிருந்து பிரிந்து தனியாக சென்றார். கடுமையான நாட்களை சந்தித்திருக்கிறார். தொழில் தொடங்க மனைவியின் நகைகளை விற்றுள்ளார்.
“என் பெற்றோர் ஒற்றுமையாக இணைந்து வேலை செய்வார்கள். அதை பார்த்து வளர்ந்திருக்கிறேன். என் அப்பாதான் என்னுடைய ரோல் மாடல்,” என்கிறார் வேத்.
வணிகத்தை விற்றுவிடும் நிலைக்கு சென்றுள்ளார் வேதின் அப்பா. அப்போதிருந்து நாற்பாதாண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று Yash Pakka Ltd 300 கோடி ரூபாய் டர்ன்ஓவர் கொண்ட நிறுவனமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
பேக்கேஜிங் பேப்பர், உணவு சேவை பிரிவிற்கான மோல்டட் தயாரிப்புகள், கரும்பின் சக்கைகள் கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என இந்நிறுவனம் விரிவடைந்துள்ளன.
அப்பா நிறுவிய இந்த வணிகம் கடந்து வந்த பாதையைப் பகிர்ந்துகொண்டுள்ளார் Yash Pakka நிறுவனர் மற்றும் துணைத் தலைவர் வேத்.
தொடக்கம்
1980-களில் பேக்கேஜிங் செய்வதற்கு பிளாஸ்டிக் அதிகம் விரும்பப்பட்ட காலகட்டத்திலேயே கேகே கரும்பு சக்கைகளைக் கொண்டு பேப்பர் தயாரிக்கும் முறையில் கவனம் செலுத்தினார். இவரது நோக்கம் சிறப்பாக இருப்பினும் பயணம் எளிதாக இருந்துவிடவில்லை.
இவருக்குத் தேவைப்படும் இயந்திரங்களுக்கான செலவு 40 லட்ச ரூபாய். ஆனால் கையிருப்போ 2 லட்ச ரூபாய் மட்டுமே.
”என் அப்பா நம்பிக்கை இழக்கவில்லை. தயாரிப்பாளர்களிடம் பேசினார். விரைவில் பணத்தை ஏற்பாடு செய்வதாகவும் வேலையை உடனே தொடங்கும்படியும் கேட்டுக்கொண்டார். என் அப்பாவின் மீது அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. ஒப்புக்கொண்டனர்,” என்கிறார் வேத்.
கேகே ஆரம்பத்தில் அப்புறப்படுத்தப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளைக் கொண்டு பேக்கேஜிங் பேப்பர் தயாரித்து வந்தார். 1985ம் ஆண்டு கரும்பு சக்கைகளைக் கொண்டு பேக்கேஜிங் பேப்பர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தார்.
“இதன் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை மீண்டும் வணிகத்திலேயே முதலீடு செய்தார்,” என்கிறார் வேத்.
தொழில்முனைவு
கேகே உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரிந்துகொண்டு அவற்றைப் பின்பற்றினார்.
1990-களில் உத்திர பிரதேசத்தில் மின்சாரம் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது. மின் விநியோகத்தில் தடையிருந்ததால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலை உணர்ந்து நிறுவனத்திற்குள்ளாகவே கோஜெனரேஷன் பாய்லர் அமைத்தார் கேகே.
“அப்பாவின் இந்த முயற்சியை பலர் கிண்டல் செய்தனர். ஆனால், அவர் தொலைநோக்கு பார்வையுடன் இதில் களமிறங்கினார். மின்சாரத்திற்காக நாங்கள் உத்திர பிரதேச அரசாங்கத்தை சார்ந்திருக்கவில்லை,” என்கிறார் வேத்.
கேகே சில ஆண்டுகள் வரை வணிகத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பின்னர் தனது மகன்களிடம் வணிகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
விமானப் படை விமானி ஆகவேண்டும் என்று விரும்பிய வேத் விளையாட்டு மேலாண்மை பிரிவில் பட்டப்படிப்பு முடித்தார். விளையாட்டுப் பிரிவில் வாய்ப்புகளை ஆராய விரும்பினார். இவரது சகோதருக்கும் வேறு பிரிவில் ஆர்வம் இருந்தது.
“நாங்கள் இருவருமே மறுத்துவிட்டோம். வணிக பொறுப்புகளை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வாக உலகை பைக்கில் சுற்றி வர அப்பா விரும்பியிருந்தார். நாங்கள் மறுப்பு தெரிவித்ததால் வணிகத்தை விற்றுவிடும் முடிவிற்கு வந்தார்,” என்று வேத் நினைவுகூர்ந்தார்.
கேகே வணிகத்தை விற்றுவிட முன்வந்தபோதும் அவரை சுற்றியிருந்தவர்கள் அவர் மீதுகொண்ட அன்பினாலும் மரியாதையாலும் வணிகத்தைத் தொடரவே ஊக்குவித்துள்ளனர். இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட வேத் வணிக செயல்பாடுகளைப் பற்ற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்தார். இப்படித்தான் தொழில்முனைவில் களமிறங்கியுள்ளார் வேத்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
1999ம் ஆண்டு வேத் தன்னுடைய 20-களில் வணிகத்தில் காலடி எடுத்து வைத்தார். வேதிடம் வணிக பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு மேற்பார்வையிடத் தீர்மானித்தார் அவரது அப்பா.
“அந்த சமயத்தில் நிறுவனத்தின் டர்ன்ஓவர் 25-30 கோடி ரூபாய்,” என வேத் நினைவுகூர்ந்தார்.
அடுத்த சில ஆண்டுகளில் டர்ன்ஓவர் தொடர்ந்து சரியத் தொடங்கியது. அப்போது வேத் தனது ஆலோசகரை சந்தித்தார். இந்த சந்திப்பே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்த ஊக்கமளித்துள்ளது.
2007ம் ஆண்டு பேக்கேஜிங் துறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்த பல்வேறு பிராஜெக்டுகளை கையிலெடுத்தார்.
ஒரு கட்டத்தில் இந்நிறுவனம் McDonals, KFC, Pizaa Hut போன்ற பெரிய பிராண்டுகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த கேரிபேக் விநியோகிக்கத் தொடங்கியது.
2012-ம் ஆண்டு Yash Pakka டேபிள்வேர் தயாரிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியபோது நிறுவனத்தின் செயல்பாடுகள் சிக்கலின்றி நகர்ந்தன. இந்த சமயத்தில் CHUK அறிமுகப்படுத்தினார்கள். இது நூறு சதவீதம் மக்கும்தன்மை கொண்ட டேபிள்வேர் பிராண்ட்.
CHUK தயாரிப்புகள் கரும்பு சக்கைகள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இவை மக்கும் தன்மை கொண்டவை. ஸ்டைரோஃபோம் டேபிள்வேர்களுக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தயாரிப்புகளுக்கும் இது சிறந்த மாற்று.
தற்சமயம் Rebel Foodsd, Haldiram’s, Café Coffee Day, Chai Point போன்ற பிராண்டுகள் CHUK தயாரிப்புகளை பயன்படுத்தி வருகின்றன.
Yash Pakka Limited பேப்பர் யூனிட்டின் உற்பத்தித் திறன் ஆண்டிற்கு 40,000 டன். CHUK உற்பத்தித் திறன் ஒரு நாளைக்கு 18MT. 2021 நிதியாண்டில் 202.95 கோடி ரூபாயாக உள்ள நிலையில், 2022 நிதியாண்டில் 300 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேத் தெரிவிக்கிறார்.
சந்தை
Yash Pakka Ltd ஈரான், அரபு நாடுகள் என 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பேக்கேஜிங் பொருட்களின் சந்தை மிகப்பெரியது என்றும் ஏராளமான நிறுவனங்கள் இந்தப் பிரிவில் செயல்படுவதாகவும் வேத் சுட்டிக்காட்டினார்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் சந்தை கடந்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் 73 சதவீதம் வரை வளர்ச்சியடைந்திருப்பதாக TerraChoice ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஏராளமான புதிய நிறுவனங்களும் புதிய தயாரிப்புகளும் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன.
“மக்களின் அன்றாட வாழ்க்கையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு அதிகம். எனவே இந்த சந்தை மேலும் சிறப்பாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது,” என்கிறார்.
வருங்காலத் திட்டங்கள்
உணவு டெலிவரி துறையில் பேக்கேஜிங் பகுதியில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு சேர்க்க ஜோமாட்டோ உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வேத் தெரிவிக்கிறார். மேலும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டில் உலகளவில் முன்னணி வகிக்கும் நிறுவனமாக உருவெடுக்கவேண்டும் என்பதையும் 1,400 கோடி ரூபாய் ஆண்டு டர்ன்ஓவரை எட்டவேண்டும் என்பதையும் இந்நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா