எகிப்தில் இருந்து வந்த 30டன் வெங்காயம்: ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது விலை!
தொடர்ந்து உயர்ந்து மக்களை கவலையடையச் செய்திருந்த வெங்காயத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாகக் குறைந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் பார்ப்பதற்கு கருப்பாக இருப்பதால் மக்கள் அவற்றை வாங்க தயக்கம் காட்டுகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது வெங்காயம் தான். அடித்தட்டு மக்கள் வீட்டு அடுப்படியில் இருந்து, நாடாளுமன்றம் வரை வெங்காய விலை உயர்வு அதிகமாகப் பேசப்பட்டது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டே சென்ற விலையால், வெங்காயத்தையே மறந்து விடுவோமோ என்ற அச்சமே மக்களுக்கு வந்து விட்டது.
பெரிய வெங்காயம் விலை 20 ரூபாயில் இருந்து படிப்படியாக 150 வரை உயர்ந்தது. சில்லறை விலையில் 40 ரூபாயில் இருந்து 220 ரூபாய வரை உயர்ந்தது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மட்டுமின்றி, உணவகத் தொழிலும் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இந்த நிலை சரியாக எப்படியும் இன்னமும் சில வாரங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அரசியலிலும் இந்த வெங்காய விலை உயர்வு எதிரொலித்ததால், விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் வெங்காயத்தை வைத்து நூதன போராட்டங்கள் நடத்துவதால், உடனடியாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் வேலைகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்தியாவில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் தான் வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. இந்த ஆண்டு அங்கு கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழையால் வெங்காய பயிர்கள் அழிந்தன. இதனால் நாடு முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மானிய விலையில் வெங்காயத்தைத் தர மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் போதிலும், வெங்காயத் திருடர்கள் அதிகரித்து வருகின்றனர். ஆங்காங்கே லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெங்காயங்கள் திருடு போகும் சம்பவங்களும் மக்களைக் கவலையடைய வைத்துள்ளன. சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளுக்கும் காரணமாகி வருகிறது வெங்காயம்.
இதனாலேயே உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட மத்திய அரசு எகிப்து, துபாய் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் முதற்கட்டமாக எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 டன் பெரிய வெங்காயம், மும்பை கடல் வழியாக கொண்டு வரப்பட்டு பின்னர் சாலை மார்க்கமாக திருச்சி வந்தடைந்தது. 30 டன் வெங்காயம் இறக்குமதியாகியுள்ளதால், வெங்காய விலை அதிரடியாக ஒரே நாளில் குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.150 முதல் 200 வரை விற்கப்பட்டு வந்த வெங்காயம், தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையிலும் வெங்காயத்தின் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.40 முதல் 60 ரூபாய் வரையில் விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில் 170 ரூபாய் வரை விற்கப்பட்ட முதல் தர வெங்காயம் தற்போது 120 ரூபாய்க்கும், வெங்காயத்தின் அளவு மற்றும் தரத்தை கொண்டு 100 ரூபாய்க்கு குறைவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே நாளில் கிலோவுக்கு 40 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே மொத்த ஊரிலும் எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்தால் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரித்திருப்பதும், பொதுமக்கள் பயன்பாட்டை குறைத்திருப்பதும் வெங்காய விலை குறைந்ததற்கு மற்றொரு காரணமாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர். வரும் நாள்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கருப்பு வெங்காயம்
விலை குறைந்துள்ள போதிலும் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. காரணம் எகிப்து வெங்காயங்கள் அளவில் மிகப் பெரியதாகவும், கருமை நிறத்திலும் காணப்படுகின்றன. ஒரே ஒரு வெங்காயமே சுமார் 200 கிராமிற்கு மேல் உள்ளது.
வெங்காய விலை உச்சத்தில் உள்ள நிலையில் ஒரு வெங்காயத்தை 20 ரூபாய்க்கும் அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்ல மக்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. அதோடு கருமை நிறத்தில் இருக்கும் வெங்காயத்தை சாப்பிட்டால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்படுமோ என அவர்கள் தயங்குவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.
மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் வியாபாரிகள், ‘எகிப்து வெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவே தான் இதுவும் சுவையில், குணத்தில் இருக்கும்’ என விளக்கி வருகின்றனர்.
எது எப்படியோ வெங்காயத்தில் விலை ஒரே நாளில் இவ்வளவு குறைந்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்துள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் இந்த விலை குறையும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.