12 வருடங்களில் 9 பணியிட மாற்றம்: ஊழலை எதிர்த்து நேர்மையாக செயல்படும் ஐஏஎஸ் அதிகாரியின் துணிகரக் கதை!
ஒரு அதிகாரி நியாயமாக எடுக்கும் முடிவுகள் தவறாக பார்க்கப்பட்டால்? அவ்வாறான முடிவுகளை திரும்பத் திரும்ப எடுத்தால்? அப்படிப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியான துகாராம் முந்தே நேர்மையாக பணியாற்றியதால் தொடர் சவால்களை சந்தித்துள்ளார்.
2011-ம் ஆண்டு சாலையில் ட்ரக் ஒன்று அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். 5,000 பேர் அடங்கிய ஆவேசக் கும்பல் ஒன்று தெருவில் முற்றுகையிட்டு உடல்களை அப்புறப்படுத்த விடாமல் சுற்றிவளைத்தது. விபத்தை ஏற்படுத்திய ட்ரக் ஓட்டுநரை தங்களிடம் ஒப்படைக்க வற்புறுத்தினர்.
பொதுமக்களிடம் சிக்கிய அதிகாரிகளில் சோலாப்பூர் மாவட்ட ஆட்சியரான துக்காராமும் ஒருவர். நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர். கூட்டத்தைக் கலைக்க லத்தி சார்ஜ் நடத்தினர். வானை நோக்கி சுட்டனர். எதுவும் பலனளிக்கவில்லை. துக்காராம் தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் துப்பாக்கிச் சூடு நடத்தும்படியும் உத்தரவிட்டார். அதன் பிறகே கூட்டம் கலைந்தது. காயம்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த விரிவான அறிக்கையை சமர்பித்தார்.
2005 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர் தற்போது பூனே மஹாநகர் பரிவாஹன் மஹாமண்டல் லிமிடெட்டின் (PMPML) CMD-ஆக உள்ளார். மணல் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டதற்காக கொலை மிரட்டல் அரசியல் சார்ந்த முதலாளிகளுக்கு இணங்கி நடக்காததால் பதிவியிறக்கம், பணியிட மாற்றம் என 12 வருட பணி அனுபவத்தில் பலவற்றை எதிர்கொண்டு கடந்து வந்துள்ளார். பின்விளைவுகளை நினைத்து கலங்காமல் எங்கும் துணிச்சலாக முடிவெடுக்கிறார்.
குழந்தைப்பருவம்
2,000 பேர் வசித்த பகுதியான மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் டாட்சொன்னா என்கிற கிராமத்தில் விவசாய தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் துக்காராம். அவரது அண்ணனும் அவரும் கிராமப் பள்ளியில் படித்தனர். வீட்டில் வளர்கையில் உண்மை, நேர்மை, ஒற்றுமை ஆகிய முக்கிய படிப்பினைகளை கற்றார்.
அவரது அண்ணன் குடிமுறை அரசுப் பணியாளராக இருந்ததால் துக்காராமிற்கு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டது. மேற்படிப்பிற்காக அவரது அண்ணன் வேறு இடத்திற்குச் சென்றதால் அப்பாவின் 25 ஏக்கர் நிலத்தில் தந்தைக்கு உதவியாக இருந்தார் துக்காராம்.
அவர் நினைவுகூறுகையில்,
நான் மூன்றாம் வகுப்புத் தேர்வு எழுதிய சமயத்திலேயே விதை விதைப்பது நீர் பாய்ச்சுவது போன்ற பணிகளில் ஈடுபடத் துவங்கினேன். நிலத்தில் பயிரிடாததால் வீட்டில் போதுமான உணவு இல்லை. ஆகவே நான் பணியில் ஈடுபடத் துவங்கினேன்.
அதிகாலை நிலத்தில் பணிபுரியத் துவங்குவார். பின்னர் பள்ளிக்குச் சென்றுவிட்டு மறுபடி நிலத்திற்குச் செல்வார். பத்தாம் வகுப்பு வரை இவ்வாறு நடந்தது. மின்சாரம் தடைபடுவதால் செடிகளுக்கும் காய்கறிகளுக்கும் நீர்பாய்ச்ச அதிகாலை இரண்டு மணிக்கு கண்விழிப்ப்பார். வாரச் சந்தையில் காய்கறிகளை விற்பார். “வேலி போடுவது, கிணறு தோண்டுவது, விதை விதைப்பது, விற்பனை செய்வது என அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுள்ளேன்.”
அவரது குடும்பச் சூழலை நன்குணர்ந்ததால் யாரையும் காரணம் காட்டாமல் தாமாகவே முன்வந்து பணிபுரிந்தார். படிப்பு வேலை என அனைத்திலும் முழு மனதுடன் ஈடுபட்டார். அவரது அண்ணன் மராட்டி வழிக் கல்வி பயின்றதால் ஆங்கிலம் பேசும் பயிற்சிக்கான வகுப்பிற்கு ஔரங்காபாத் சென்றார். மஹாராஷ்டிர பொது சேவை ஆணையத் தேர்வில் தேர்ச்சிபெற்றதும் குடும்பச் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டது.
துக்காராம் இச்சம்பவம் பற்றி கூறுகையில்,
”நான் அனுபவத்தில் எடுத்த இரண்டாவது முக்கிய முடிவு அதுவாகும். அதிக கஷ்டங்களை சந்தித்ததால் எனக்கு சிறப்பான புரிதல் இருந்தது. அநீதியைக் கண்டால் வருத்தப்படுவேன். நான் அதிக உணர்ச்சிவசப்படுவதாக சிலர் தெரிவிப்பார்கள். சிலர் என்னை கர்வம் கொண்டவன் என்பார்கள். திடமாக இருப்பதற்கும் கர்வமாக இருப்பதற்கும் மெல்லிய இழையே வித்தியாசம். நான் வளர்ந்த சூழல் மற்றும் அனுபவமே பல விஷயங்களில் திடமான நிலைப்பாட்டை எடுக்க உதவுகிறது.”
முயற்சிகள்
பத்தாம் வகுப்பிற்குப் பிறகு ஔரங்காபாத் சென்றார். கிராமத்திலிருந்து சென்றதால் சினிமா, செய்தித்தாள், தொலைக்காட்சி என அனைத்துமே புதிதாக இருந்தது. அண்ணனின் அறிவுரைப்படி அறிவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தார். குடிமுறை அரசுப் பணி தேர்வெழுத உதவுமென்பதால் மனிதநேயப் (ஹியூமானிடிஸ்) படிப்பை தேர்ந்தெடுத்தார்.
1996-ம் ஆண்டு ஔரங்காபாத் அரசு கலைக் கல்லூரியில் வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் சமூகவியல் பிரிவில் பட்டம் பெற்றார். குடிமுறை அரசுப் பணிக்கான பயிற்சி வகுப்பிற்குச் சென்றுகொண்டே முதுகலைப் படிப்பிற்கும் விண்ணப்பித்தார். 1997-ல் முதலில் குடிமுறை அரசுப் பணி தேர்வை எழுதி முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் முக்கியத் தேர்வில் முதலில் 870 மதிப்பெண்களும் அடுத்தாண்டு 970 எடுத்தார். 1999-ல் முக்கிய தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் கட் ஆப் குறைவாக இருந்தது. நேர்காணலில் 300 க்கு 150 மதிப்பெண்களும் முக்கிய தேர்வில் 1,035 மதிப்பெண்களும் எடுத்தார்.
முதுகலைப் பட்டம் பெற்றார். JRF-NET தேர்ச்சிபெற்றார். பூனே பல்கலைக்கழகத்தில் ந்யூக்ளியர் பாலிசியில் ஆராய்ச்சிக்காக பதிவு செய்தார். மூன்று முயற்சிகளுக்குப் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று நிதித் துறையில் க்ளாஸ்-II பதவி கிடைத்தது.
தேர்வுசெய்யும் முறை காலதாமதமாகும் என்பதால் ஜல்கானில் இருந்த ஒரு தனியார் கல்லூரியிலும் பின்னர் மும்பையின் ஒரு கல்லூரியிலும் பேராசிரியராக பணியாற்றினார். டிசம்பர் 2004-ல் பணியில் சேருமாறு கடிதம் கிடைத்தது. ஆசிரியப் பணியை விட்டுவிட்டு முழுநேரமும் UPSC தயாராக தீர்மானித்தார்.
இறுதி முயற்சி
ஆசிரியப் பணி, ஆராய்ச்சி உள்ளிட்ட அனுபவங்களுடன் UPSC ப்ரிலிமினரி மற்றும் முக்கியத் தேர்வை அதிக நம்பிக்கையுடன் எதிர்கொண்டு நேர்காணலுக்கு தேர்வானார். அப்போது MPSC பயிற்சியில் இருந்ததால் ஒரு மாத விடுமுறை கோரினார். முதலில் மறுத்து பின்னர் ஒப்புக்கொண்டனர். இறுதி நேர்காணலுக்காக டெல்லியின் மஹாராஷ்டிர சதன் சென்றார்.
நேர்காணலுக்குப் பிறகு MPSC பயிற்சிக்குத் திரும்பினார். 2005-ம் ஆண்டு மே 11-ம் தேதி முடிவுகள் வெளியானபோது பூனாவில் விபாசனா வகுப்பில் இருந்தார். அவரது ஆல் இந்தியா ரேங்க் 20. எழுத்துத் தேர்வின் மதிப்பெண் 1,130. நேர்காணலில் 180. விபாசனா வகுப்பில் இருந்த நண்பர்கள் இவரது வெற்றியை கொண்டாடினர்.
மஹாராஷ்டிராவின் வெவ்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்வதன் மூலமும் உள்ளூர் செய்தித்தாளில் கட்டுரை எழுதுவதன் மூலமும் குடிமுறை அரசுப் பணி தேர்விற்கு தயாராவது குறித்து வழிகாட்டி பலருக்கு உந்துதலளித்தார்.
”2000-ல் என் அப்பாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டது. அடுத்த நான்காண்டுகள் கடினமாகவே கழிந்தது. இப்படிப்பட்ட தருணங்களில்தான் நம்முடைய முடிவெடுக்கும் திறன் வெளிப்படும். MPSC பயிற்சியில் அரசாங்க செயல்பாடுகள் குறித்து அறிந்தேன்.”
நோக்கத்துடன் செயல்படுபவர்
துவக்கத்தில் சோலாப்பூரில் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்றவுடன் ஆட்சியரின் உத்தரவைப் பெற்று அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதியால் நடத்தப்பட்ட சட்டவிரோத பாரை சோதனை செய்தார். பயிற்சியின் ஒரு பிரிவாக சோலாப்பூரின் பார்ஷி ப்ளாக்கில் நகராட்சியின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளைத் தாண்டி கட்டப்பட்ட பகுதிகளை ஒரு மாத அவகாசமளித்த பிறகு இடித்தார்.
அங்கீகரிக்கப்படாத மதுக்கடையை இடிக்கும்பணி நடக்கும்போது ஒருவர் தீக்குளிக்கப் போவதாக மிரட்டினார். ஒரு அதிகாரியை அந்தக் காட்சியை வீடியோவாக பதிவு செய்யச் செய்து தற்கொலை முயற்சிக்காக கைது செய்ய வைத்தார் துக்காராம்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் துக்காராமை ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். ஆனால் ஆட்சியர் அவருக்கு உதவினார்.
இடிக்கும் பணியைத் துவங்கிய மூன்றாம் நாள் அங்கீகரிக்கப்படாத மருந்துக் கடை ஒன்றை இடிக்க முற்படும்போது அதன் உரிமையாளர் விஷம் அருந்திவிடுவதாக மாரடைப்பு ஏற்பட்டது போல் நடித்தும் அச்சுறுத்தினார். அதே நாளில் 90 வயது பாட்டி ஒருவரது வீட்டையும் இடிக்க நேர்ந்தது. மனம் வருந்தினாலும் அதே போல 50 வீடுகள் அங்கீகரிக்கப்படாமல் இருந்தால் இடிக்கும் பணியைத் தொடர்ந்தார். இவ்வாறு பல்வேறு சூழல்களை எதிர்கொள்ள நேர்ந்தது.
அப்போதுதான் அவரது நடவடிக்கை சரியா தவறா என்பதை தீர்மானிக்க உதவும் மூன்று விஷயங்கள் அடங்கிய பட்டியலை உருவாக்கினார். அதாவது அவரது செயல் சட்டபூர்வமாக இருக்கவேண்டும், ஒழுக்க ரீதியாக சரியாக இருக்கவேண்டும், பொது நலம் சார்ந்ததாக இருக்கவேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக இந்த பட்டியலைக் கொண்டே பல முடிவுகள் எடுத்துள்ளார்.
இடிக்கும் பணியை மேற்கொண்டதன் காரணமாக சாலைகள் 2-6 மீட்டர் விரிவாக்கப்பட்டது. அவரது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த ஒரு கும்பல் அவர் மீது போலி எஃப்ஐஆர் பதிவுசெய்தனர். இதுபோன்ற செயல்களினால்தான் அதிகாரிகள் தங்களிடம் அதிகாரம் இருந்தும் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. அதிகாரிகள் ஏதேனும் செய்யவேண்டும் என்று சமூகம் நினைக்குமேயானால் அதே சமூகம்தான் இத்தகைய சூழலை உருவாக்குகிறது.
அடுத்து மாதாவில் சிறிது காலம் பணி நியமனமானது. இங்கு மணல் கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்.
பணியில் சேருவதற்கு ஆணை கிடைத்தும் அனுமதிக்கப்படவில்லை
பயிற்சி காலம் முடிந்ததும் மிரஜ், சங்லி-யில் இணையவேண்டும். ஆனால் அமைச்சர் ஒருவர் வேறு ஒருவரை நியமிக்க விரும்பியதால் அவருக்கு ப்ராஜெக்ட் அதிகாரியாக பணி நியமிக்கப்பட்டது. பின்னர் டெக்ளூர், நாண்டெட் பகுதிக்கு உதவி ஆட்சியராக மாற்றப்பட்டு செப்டம்பர் 2007-ல் பதிவியேற்றார். அங்கு தண்ணீர் அசுத்தமாக இருப்பதாக புகாரளித்தார். அவர் கூறுகையில்,
தண்ணீரின் தரத்தை மேம்படுத்த ஏழு நாட்கள் நேரம் ஒதுக்கினேன். இல்லையேல் CrPC 136/137 பிரிவின் கீழ் ஆறு மாதம் சிறைதண்டனை என்று அறிவித்தேன். 48 மணி நேரத்தில் தண்ணீர் சுத்தமாக வந்தது.
டெக்ளூரில் தங்கியிருந்தபோது நிலம் மற்றும் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார் முந்தே. அப்போதுதான் முதல் முறையாக கொலை மிரட்டல் வந்ததால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவரிடம் வந்த 500 அப்பீல்களையும் நான்கு மாதத்திற்குள் முடித்துவைத்தார்.
இதனால் வழக்கறிஞர்களின் வருமானம் குறைந்து வருத்தமடைந்தனர். மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோதாவரி நதிக்கரையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு அபராதமாக 20,000-25,000 ரூபாய் விதித்தார். சட்டென்று அதிகாலை 2 மணிக்குச் சென்று பார்வையிடுவார்.
நியாய விலைக் கடைகளில் நடைபெறும் கொள்முதல் மற்றும் விநியோகம் சார்ந்த முறைகேடுகளைக் களைந்தார். இறுதியாக நாக்பூருக்கு மாற்றலானார்.
நாக்பூர் அனுபவங்கள்
நாக்பூர் பகுதியில் நீர்பாசனத் துறையில் அதிகளவு ஊழல் நடைபெற்று வந்தது. ஊடகங்கள் முந்தேவைச் சந்திக்க வந்தபோது அப்போது தெரிவிக்க ஒன்றும் இல்லை என்பதால் பின்னர் வருமாறு சொல்லி அனுப்பிவிட்டார். இதனால் அந்தப் பகுதியில் அவர் மேற்கொண்ட பல்வேறு நல்ல செயல்களை ஊடகங்கள் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியது. ஊடகங்களைக் கையாளும் விதம் குறித்து கடினமான முறையில் கண்டறிந்தார்.
பள்ளிகளில் தக்க அறிவிப்பின்றி வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்களை இடைநீக்கம் செய்தார். இடமாற்றம் கோரி வந்த விண்ணப்பங்கள் முறையாக இல்லையெனில் அவற்றை நிராகரித்தார்.
அனைத்து துறைத் தலைவர்களுடனும் தினசரி மீட்டிங் நடத்தினார். இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் 50-60 கோடி ரூபாய் முறையாக பயன்படுத்தப்படாமல் இருந்ததை கண்டறிந்தார். முறையாக பணியில் ஈடுபடாத மருத்துவர்களை இடைநீக்கம் செய்தார். ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வந்தனர்.
சிலா பரிஷத்தில் முந்தேவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு அப்போதைய முதல்வரால் நிராகரிக்கப்பட்டது.
நாக்பூரில் பணியிலிருந்தபோது அவருக்கு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு அவரது செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை பணிக்கு தடங்கலாக இல்லாமல் பார்த்துக்கொண்டார்.
பதவி உருவாக்கப்பட்டது
சிலா பரிஷத்தில் போஸ்டிங்கை எதிர்பார்த்திருந்த முந்தேவிற்கு நாசிக்கில் கூடுதல் ட்ரைபல் கமிஷர் பதவியளிக்கப்பட்டது. இது அவருக்காகவே புதிதாக உருவாக்கப்பட்ட பதவியாகும். நாசிக்கில் மற்ற கூடுதல் ஆட்சியர்கள் தங்கள் பணியைத் தொடர்கையில் இவருக்கு முறையான பணி விவரங்களோ அல்லது வாகனமோ வழங்கப்படவில்லை. அப்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். மூன்று மாதங்களுக்கு மேலாகியும் வேறு ஆணை வராத காரணத்தால் அலுவலகத்திற்கு இது குறித்து கடிதம் எழுதினார். அதன் பிறகே மஹாராஷ்டிராவின் வாசிம் பகுதிக்கு சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.
வாசிம் பகுதியில் பத்து மாதங்கள் பணியாற்றினார். க்ராம் சேவாக் யூனியன் ப்ரெசிடெண்டை ஊழல் குற்றச்சாட்டிற்காக சஸ்பெண்ட் செய்தார். அவர் ஆத்திரமடைந்து முந்தேவை தாக்க முயன்றார். அவருக்கு எதிராக முந்தே எஃப்ஐஆர் பதிவு செய்தவுடன் அவருக்கு சாதகமாக மக்கள் திரண்டனர். இறுதியாக அவர் ஆஜராகாதக் காரணத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
2010-ம் ஆண்டு மே மாதம் மும்பையின் KVIC சிஇஓ-வாக மாற்றப்பட்டார். தங்குமிடத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் அவருக்கு இடம் ஒதுக்கப்பட ஆறு மாதங்களானது. முந்தே பணியில் சேர்கையில் நஷ்டத்தில் இருந்த KVIC அவர் வெளியேறுகையில் மூன்று யூனிட்கள் லாபகரமாக செயல்பட்டது. PMEGP ப்ராஜெக்டுகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. KVIC-க்கு முந்தே அளித்த பல்வேறு பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2011-ல் ஜல்னாவின் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இங்கும் காவல் நிலையங்கள், பிடிஓ அலுவலகம், பவர் செக்டார், PWD, நீர்பாசனம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை பங்கேற்கச் செய்து கண்காணித்து வந்தார். இங்கு தண்ணீர் பிரச்சனை நிலவியது. இதை முறையாக ஆராய்ந்து தீர்வு கண்டார். அதன் பிறகு அடுத்த இடமான சோலாப்பூருக்கு மாற்றலான ஆணை முந்தேவிற்கு கிடைத்தது.
முந்தே ஒரு அதிகாரியாக 12 ஆண்டுகளில் 9 மாற்றல்களை சந்தித்தவர்
துக்காராமிற்கு உள்ளிருந்து தலைமைப்பண்பும், மாற்றத்திற்கான உந்துதலும் வருவதாக கூறினார்.
“நான் என்னையே கேட்டுக்கொள்வேன். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக என்னால் முடியவில்லை என்றால் வேறு எவரால் முடியும். இந்த சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்து, என்னால் பிறரை ஊக்கப்படுத்த முடியவில்லை என்றால் வேறு யாரால் முடியும்?” என்கிறார்.
மகாத்மா காந்தியின் பொன்மொழிகளான, ‘மாற்றத்தை காண விரும்பினால், அந்த மாற்றமாக நீ இரு,’ என்பதை தீவிரமாக பின்பற்றுகிறார் துக்காராம். தன்னுடைய அதிவேகமே தன்னுடைய பலவீனம், ஆனால் தன் அற்பணிப்பே தன் வலிமை என்கிறார்.
முந்தே இதுவரை 12 ஆண்டுகள் பணி அனுபவத்தில் 9 பணியிட மாற்றத்தை கண்டுள்ளார். இந்த மாற்றங்கள் குறித்து வருந்தும் அவர்,
“ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் இருந்தால் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தமுடியும். ஆனால் அதற்குள் என்னை மாற்றிவிடுகிறார்கள். இதை நினைத்து நான் சற்று சோர்வடைகிறேன். இருப்பினும் நான் செய்வதில் தவறு ஏதுமில்லை என்பதை திடமாக நம்புகிறேன், என்கிறார்.
தன் அனுபத்தில் சில தவறுகளை செய்திருப்பதாக ஒப்புக்கொள்ளும் துக்காராம், தான் அதை நல்ல விஷயங்களுக்காக செய்வதாகவே நம்புகிறார். என் பணியால் பலருக்கு இடஞ்சல்கள் வராலம், சில சக்திவாய்ந்த மனிதர்களின் தொழில்கள் பாதிக்கப்படலாம், ஆனால் நான் மக்களுக்கு நியாயம் கிடைக்கவே எல்லாம் செய்கிறேன் என்கிறார். இத்தனைக்கு பின்பும் தன் கொள்கையில் தீவிரமாக நின்று தொடர்ந்து தன் பயணத்தை மக்களுக்காக மேற்கொள்ள உற்சாகத்துடன் கிளம்புகிறார் இந்த ஹானஸ்ட் அதிகாரி.
ஆங்கில கட்டுரையாளர் : அலோக் சோனி