அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி தொழில்முனைவில் சாதித்த 4 பொறியாளர்கள்!
இந்திய பொறியாளர்கள் சென்று பணியாற்ற விரும்பும் நாடாக அமெரிக்கா இருந்தாலும், அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி வெற்றிகரமாக தொழில் துவங்கிய நான்கு பொறியாளர்களின் பயணத்தை பார்க்கலாம்.
பல ஆண்டுகளாக இந்திய பொறியாளர்கள் சென்று பணியாற்ற விரும்பும் நாடாக அமெரிக்க விளங்குகிறது. இவர்களில் பலர் பெரிய வர்த்தக பணிகளை பெற்றாலும், சிலர் அமெரிக்காவிலேயே தங்கள் சொந்த நிறுவனங்களை துவக்குகின்றனர்.
இருப்பினும், வர்த்தகத்தைத் துவக்கி ஆரம்ப தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது மற்றும் வர்த்தக வெற்றிக்கான வழிகளைக் கண்டறிவது இந்தியாவில் செலவு குறைந்ததாக இருக்கிறது. மேலும், பல இந்தியர்களுக்கு அமெரிக்கா தொடர்பான ஈர்ப்பு உலந்து, இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் வலுப்பெறுகிறது.
இப்படி, அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி தொழில் துவங்கி வெற்றி பெற்ற நான்கு பொறியாளர்கள் கதையை பார்க்கலாம்.
ராஜ் தார்ஜி - ஆரவ் சொல்யூஷன்ஸ் (Aarav Solutions)
விவசாயியின் மகனான ராஜ் தார்ஜியால் அமெரிக்காவில் படிப்பதற்காக செலவு செய்ய முடியவில்லை. பிராட்பேண்ட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தபடி, பின்னர் ஆரக்கில் நிறுவனத்தில் பில்லிங் தொழில்நுட்பத்தில் பணியாற்றி அதன் மூலம் அமெரிக்க செல்வதற்கான நிதியை சேர்த்தார்.
“2006ல் எச்.-1பி விசா பெற்று அமெரிக்கா சென்றேன். 2011 ல், விசாவை புதுப்பிக்க இந்தியா திரும்பினேன்.ஆனால் எதிர்பாராத தாமதம் உண்டானது” என்கிறா ராஜ்.
"இந்த காலகட்டத்தில் அமெரிக்க நிறுவனத்திற்காக இங்கிருந்தே பணியாற்றினேன். இந்தியாவில் இருக்க வேண்டியிருந்ததால் மீண்டும் அமெரிக்க செல்ல முடியுமா என்று தெரியவில்லை. அப்போது தான, என் ஐடி அனுபவம் மற்றும் ஆலோசனைத் திறனைக் கொண்டு சொந்த நிறுவனம் துவக்க தீர்மானித்தேன்,” என்கிறார்.
தந்தை நிலத்தில் பணியாற்றுவதில் இருந்து கற்றுக்கொண்ட தொழில்முனைவுப் பாடங்களை பயன்படுத்தி ராஜ் தனது நிறுவனத்தை வெளிப்புற நிதி இல்லாமலே 130 பேர் பணியாற்றும் நிறுவனமாக வளரச்செய்திருக்கிறார்.
கிஷோர் இந்துகுரி (Kishore Indukuri – Sid’s Farm)
கிஷோர் இந்துகுரியும் மற்ற பலரைப்போல அமெரிக்காவில் படித்து அங்கேயே வாழ வேண்டும் என நினைத்தார். ஆனால், அமெரிக்காவில் இண்டெல் நிறுவனத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அவர் விவசாயத்தில் தான் உண்மையான ஈடுபாடு என உணர்த்ந்தார்.
இந்தியாவில், கர்நாடகாவில் அவரது குடும்பத்திற்கு சொந்தமாக நிலம் இருந்தது. இந்த நிலத்திற்கு சென்று விவசாயிகளுடன் நேரம் செலவிட்டத்து அவருக்கு பசுமையாக நினைவில் இருந்தது.
“வேலையை விட்டு விலகி, எனது வேரான விவசாயத்திற்கு திரும்ப தீர்மானித்தேன். ஐதராபாத் திரும்பிய நிலையில், கலப்படம் இல்லாத பாலை வாங்க அதிக வாய்ப்பில்லாமல் இருப்பதை உணர்ந்தேன். என் குடும்பத்திற்கு மட்டும் அல்லாமல், ஐதராபாத் மக்களுக்கும் மாற்றம் கொண்டு வர விரும்பினேன்,” என்கிறார் கிஷோர்.
2012ல் இவர் கோவையில் இருந்து 20 பசு மாடுகள் வாங்கி சொந்தமாக பண்ணை அமைத்தார். அதன் பிறகு வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக பால் விநியோகம் செய்தார். இவரது வர்த்தகம் வளர்ந்தது.
2016 ல் நிறுவனம் Sid’s Farm என பதிவு செய்யப்பட்டது. தற்போது 120 ஊழியர்களுடன் ரூ.44 கோடி விற்றுமுதலை எட்டியிருப்பதாக கிஷோர் சொல்கிறார்.
ராம் சுகுமார் – இந்தியம் சாப்ட்வேர் (Indium Software)
26 வயதான ராம் சுகுமார் ஒரு கனவுடன் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். தொழில்நுட்பத்தை நேசித்தவர், இந்தியாவில் சொந்த சாப்ட்வேர் நிறுவனத்தைத் துவக்க விரும்பினார்.
1999ல் Indium Software நிறுவனத்தை வர்த்தகப் பயிற்சி மற்றும் சாப்ட்வேர் சோதனை நிறுவனமாக சென்னையில் துவக்கினார். இந்திய வாழ்வியலை விரும்பியதோடு, அமெரிக்காவில் தொழில் துவங்குவதற்கான செலவு அதிகம் என உணர்ந்தார்.
“தோல்வி அச்சம் இல்லாமல் முன்னேற விரும்பினோம். ஆனால், பெரிய அளவில் முதலீடு இல்லை. 8 முதல் 10 பேரை பணிக்கு அமர்த்தி, வர்த்தகப் பயிற்சி செயலிகளில் கவனம் செலுத்தினோம்,” என்கிறார் ராம்.
ஒரு நிறுவனத்தைத் துவக்கி நடத்திய அனுபவம் இல்லாவிட்டாலும், தனது நிறுவனத்தை அவர் சிறப்பாக நடத்தினார். இன்று இண்டியம் சாப்ட்வேர் நிறுவனம், டிஜிட்டல், பிக்டேட்டா, தர உறுதி, குறைந்த கோடு ஆகிய பிரிவில் அனுபவம் கொண்டுள்ளது. 30 மில்லியன் டாலர் வருவாயை இந்த ஆண்டு இலக்காக கொண்டுள்ளது.
அருண் நதானி – சைபேஜ் சாப்ட்வேர் (Cybage Software)
சிக்காகோ நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பு பொறியாளராக ஐந்தாண்டு பணியாற்றிய அருண் நதானி, இந்தியா திரும்ப தீர்மானித்தார். 1987ல் அமெரிக்கா சென்றார். அங்கேயே படித்து வேலை பார்க்க தீர்மானித்தார். சிகாகோவில் வேலை கிடைத்தாலும் அவர் மகிழ்ச்சியாக இல்லை.
“வெளிநாட்டில் கூடுதல் காலம் தங்கியிருக்கும் இந்தியாராகவே இருந்தேன். வார இறுதி நாட்களில் இந்தியா திரும்புவது பற்றி ஆர்வமாக பேசுவேன்,” என்கிறார்.
வர்த்தக நிறுவனத்தை துவக்க வேண்டும் எனும் நினைப்பில் ஈடுபட்டிருந்தவர் இல்லை என்றாலும், அருண் இன்று சைபேஜ் சாப்ட்வேர் நிறுவனத்தை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பொறியியல் சேவைகள் தொடர்பான ஆலோசனைகளை நிறுவனம் வழங்கி வருகிறது.
6,300 ஊழியர்களைக் கொண்ட நிறுவனம், 2019- 20 ம் ஆண்டுல் ரூ.1,106 கோடி வருவாய் ஈட்டியது.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்