400-க்கும் மேல் இலவச ஆன்லைன் கோர்சுகளை அறிமுகப்படுத்தியுள்ள ஐஐடி மெட்ராஸ்!
NPTEL-ஐஐடி சார்பில் நடத்தப்படும் ஆன்லைன் படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள், 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பொறியியல் பிரிவு குறித்து ஆலோசனை வழங்கவுள்ளனர்.
நேஷனல் புரோக்ராம் ஆன் டெக்னாலஜி என்ஹான்ஸ்ட் லேர்னிங் (NPTEL)-ஐஐடி சார்பில் நடத்தப்படும் 400-க்கும் மேற்பட்ட ஆன்லைன் படிப்புகளுக்கான சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. இந்த படிப்புகளுக்கு கட்டணம் இன்றி இலவசமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள அனைவரும் இதில் இணைந்துகொள்ளலாம். தேர்வுகள் எழுதி சான்றிதழ் பெற விரும்புபவர்களுக்கு மட்டும் மிகக்குறைவான கட்டணம் வசூலிக்கப்படும்.
2020-ம் ஆண்டு ஜூலை-டிசம்பர் செமஸ்டருக்கான மாணவர் சேர்க்கை மே 20-ம் தேதி தொடங்கியது. இந்த வகுப்புகளில் சேர onlinecourses.nptel.ac.in என்கிற இணைப்பு மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.
அத்துடன் புதிய முயற்சி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் பொறியியல் பிரிவு குறித்து ஆன்லைனில் விரிவுரை வழங்குவார்கள். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விரைவில் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாணவர்கள் தங்களுக்கு ஆர்வர்முள்ள பிரிவைக் கண்டறிய இந்த அமர்வுகள் உதவும். இந்த அமர்வுகள் கட்டணமின்றி முற்றிலும் இலவசமாகக் கிடைப்பது இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக படிப்புடன் சேர்த்து NPTEL பாடங்களைப் படிக்கலாம். கோவிட்-19 பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களது வழக்கமான படிப்புகளுடன் NPTEL பாடங்களையும் இணைத்துக்கொண்டு கற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே படிக்கும் வாய்ப்பை இது வழங்குகிறது. தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் விரிவுரைகளுடன் சிறந்த வகுப்பறை சூழல் உருவாக்கப்படுகிறது.
இந்த பாடங்கள் குறித்து NPTEL-IIT மெட்ராஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் கூறும்போது,
“NPTEL தற்போது 3,800-க்கும் அதிகமான கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுகிறது. பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரி, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரிகள் ஆகியவை இதில் அடங்கும். பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி கல்லூரிகளும் தேர்வெழுதுவதன் மூலம் பெறும் தரப்புள்ளிகளை மாற்றிக்கொள்ள (credit transfer) விரும்பினால் தங்களது கல்வி நிறுவனங்களில் அதற்கான கொள்கைகளை வகுத்துக்கொள்ளவேண்டும். சில பல்கலைக்கழகங்களும் தன்னாட்சி கல்லூரிகளும் ஏற்கெனவே இதை நடைமுறைப் படுத்தியுள்ளன,” என்றார்.
மத்திய அரசின் ஸ்வயம் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு செமஸ்டரிலும் 20 சதவீதம் வரையில் தரப்புளிகளை மாற்றிக்கொள்வதற்கான அனுமதியளிக்குமாறு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE) அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. NPTEL இத்திட்டத்தில் இணைந்துள்ளது.
ஆன்லைன் கல்விக்கான 2016 யூஜிசி கட்டுப்பாடுகளின் முதல் திருத்தத்தின்படி 20 சதவீத தரப்புள்ளிகள் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
IIT மற்றும் IISc-ன் கூட்டு முயற்சிதான் NPTEL. NPTEL சான்றிதழ் படிப்புகள் MOOC வடிவில் வழங்கப்படுகின்றன. வீடியோக்களை ஆன்லைனில் பார்த்து பாடங்கள் தொடர்பாக ஒதுக்கப்படும் பணிகளை வாராந்திர அடிப்படையிலோ அல்லது மாதாந்திர அடிப்படையிலோ சமர்ப்பிக்கவேண்டும்.
இறுதித் தேர்விற்கு பதிவு செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வு முறையான கண்காணிப்புகளுடன் மேற்கொள்ளப்படும். சான்றிதழ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு தரப்புள்ளிகள் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். NPTEL-ல் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
கட்டுரை: ஸ்ரீவித்யா