தொழில் முனைவோர்களுக்கு முதலீட்டாளர்கள் எதிர் துருவங்களா? தூண்களா?
கடந்த வாரம் சென்னையில் Tie நிறுவனம், "இன்வெஸ்டார்ஸ் ஆர் ஃப்ரம் மார்ஸ் அண்ட் ஆன்ட்ரப்ரூனர்ஸ் ஆர் ஃப்ரம் வீனஸ்" (Investors are from mars and Entrepreneurs are from venus) என்ற கலந்தாய்வு நிகழ்வு ஒன்றை நடத்தியது.
இதில், யூனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ் COO-வான "ரவி சரோகி", இந்தியாவின் முதல் ஏன்ஜெல் முதலீடு நிதி நிறுவனம் இம்பாக்ட் ஃப்ண் இன் பங்குதாரான "ரேமா சுப்ரமணியன்" மற்றும் முதலீட்டாளர்களுக்கும் தொழில் முனைவோர்க்கும் ஆலோசனை வழங்குபவரான "சந்து நாயர்", கலந்தாய்வின் சிறப்புப் பேச்சாளர்களாக கலந்துகொண்டு விவாதித்தனர். 50-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் இந்நிகழ்வில் பங்குகொண்டனர்.
நிகழ்ச்சியில் தொழில் முனைவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் இருக்கும் உறவை குறித்து விவாதிக்கப்பட்ட சில கூறுகளைக் கீழே காணலாம்!
முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்களை நிராகரிக்கக் காரணம் என்ன?
* வணிக குடும்பத்தில் வளர்ந்த பிள்ளைகளுக்கு, தங்கள் பொருட்களை சாதுரியமாக விற்கும் திறன் இருக்கும். நம் இந்தியாவிலுள்ள பெரும்பாலான குடும்பங்களில், சிறு வயது முதல் இளைஞன் ஆகும் வரை, பண செலவுகளை பெற்றோர்களே பார்த்துக் கொள்கின்றனர். அதன்பின், அவர்கள் புதியதாக தொழில் முனையும் போது, வணிகத்தில் புத்திசாலித்தனத்தோடு போட்டி போட முடியாமல் சில நேரம் தோற்று போகின்றனர்.
* நல்ல ஐடியா இருக்கலாம், ஆனால், அந்த ஐடியாவை முதலீட்டாளர்களிடம் சரியாக எடுத்துரைத்து, அவர்களை தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய வைக்கும் திறன் அவசியமாகும். தொழில் முனைவோர்கள், அவர்கள் திட்டங்களை நன்றாக விளக்கி, முதலீடு செய்ய நம்பிக்கையூட்டினால் தான், முதலீட்டாளர்கள் அவர்களை தேர்வு செய்வர். இந்தியாவில் எராளமான சிறந்த உபாய திட்டங்கள் (Projects) கொண்ட தொழில் முனைவோர்கள் இருந்தாலும், முதலீட்டாளர்களை நம்பவைக்கும் திறனின்றி பலரும் நிராகரிக்கப்படுக்கின்றனர். ஆகையால், தொழில் முனைவோர்களுக்கு தங்கள் திட்டங்களை விற்பனை செய்யும் திறன் மிக அவசியம் ஆகும்.
முதலீட்டாளர்களின் பயனும்! எதிர்பார்ப்பும்!
* பணம் முதலீடு செய்வது மட்டும் அல்லாது, தொழில் முனைவோர்கள் மேற்கொள்ளும் பணிகளையும், தயாரிக்கும் பொருட்களையும், சேவைகளையும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து சரி பார்த்து அவர்களின் முன்னேற்றதிற்கு உதவுவர்.
* தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் மீது முழு நம்பிக்கையுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்ய வேண்டும். அவர்களுக்கென லட்சியம் உண்டு. அதை நோக்கியே பயணிக்க வேண்டும். முதலீட்டாளர்களிடம் தேவையற்ற சந்தேகத்திற்குரிய கேள்விகள் எழுப்புவது, அவர்களுக்கு இடையே இருக்கும் நல்லுறவை பாதித்து விடும்.
முதலீட்டாளர்களின் கேள்விகளை ஏற்று கொள்ள வேண்டும்
தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய இத்தனை கேள்விகளா? என்று தொழில் முனைவோர் பலர் நினைப்பதும், கோபப்படுவதும் உண்டு.
முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகள், நமக்கு வணிக யுக்திகளை கற்று கொடுக்கும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் இல்லையெனில், அதற்கான வழிகளும் நம் ப்ரோஜெக்ட்டில் இல்லை என்பதே உண்மையாகும். அதனை புரிந்து கொண்டு, தொழில் முனைவோர், அவர்களின் எண்ணத்தை மேலும் மெருகேற்றி முன்னேற்றத்திற்கான வழிகளை காண வேண்டும்.
முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் காரணிகள்!
தொழில் முனைவோர்களின் லாபம் தரக்கூடிய ஐடியா மட்டுமின்றி, முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு வேறு சில காரணிகளையும் நோக்குவர், என்று ரவி சரோகி விளக்கமளித்தார்.
"சில முதலீட்டாளர்கள் சமூக நலன் பயக்கும் எண்ணங்களில் முதலீடு செய்ய விரும்புவர். சிலர் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் நாட்டம் கொள்வர். சிலர் நல்ல வருமானம் காணும் தொழிலில் விருப்பம் கொள்வர். ஆகையால், முதலீட்டாளர்களின் கொள்கை என்னவென்று, தொழில் முனைவோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்."
குழு அமைப்பில் இருவரும் சந்திக்கும் பிரச்சனை
பொதுவாகவே தொழில் தொடங்கும்போது, தொழில் முனைவோர்கள் பணம் முதலீடு செய்த பின், குழு ஆட்களை நிர்வகிக்க ஆசைப்படுவர். ஆனால் முதலீட்டாளர்கள், குழு அமைத்த பின்னேரே, பணம் முதலீடு செய்வர். இவர்கள் சந்திக்கும் பெரிய சிக்கல்களில் இதுவும் ஒன்று. இது குறித்து ரேமா சுப்பிரமணியன் கூறுகையில்,
தொழில் முனைவோர் தங்கள் குழுவிற்கு ஆட்கள் அமைக்க, முதலீட்டாளர்களும் உதவுவர். குழு அமைந்த பின், முதலீடு செயத் தொடங்குவர். தொழில் முனைவோர் முதலில் நல்ல ஒரு சிறு குழுவை அமைத்த பின்னரே, முதலீட்டாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். அப்பொழுதான், குழு வலிமையுடன் என்றும் அவர்களுடன் துணை நிற்கும்.
முதலீட்டாளர்களையும் தொழில் முனைவோர்களையும் பணம் தான் இணைக்கிறதா?
வருவாய் காண பல வழிகள் இருக்கிறது. ஆனால், தொழில் முனைவோர்க்கு, தன் எண்ணத்தைக் கொண்டு சமூக பிரச்சனைக்கு தீர்வு காண்பது அல்லது சாதனை புரிவதுதான் முதன் நோக்கமாக இருக்கும். முதலீட்டாளர்களின் துணைகொண்டு, அவர்கள் சர்வதேச அளவில் தொழில் செய்ய ஈடுபட முடியும். தொழில் முன்னேற்றத்திற்கு வழி காட்டுவர். இவர்களுக்கு இடையே வணிக லாபம் மட்டுமின்றி, இருவரின் நோக்கங்களுக்கு ஏற்றவாறு உறுதுணையும் அமைந்து இருக்கும்.
தொழில் முனைவோர்களும் சரி, முதலீட்டாளர்களும் சரி, தொழிலில் ஈடுபடுவதற்கு முன், முதலில் ஒரு சிறந்த வழிகாட்டியிடம் (Mentor) ஆலோசனை பெற்றுக் கொள்வது ஒரு நல்ல கண்ணோட்டத்தை அளிக்கும் .
தொழில் முனைவோர்களை தேர்ந்தெடுப்பதில் பாகுபாடு இருக்கிறதா?
முதலீடு செய்வதற்கு தொழில் முனைவோர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, இனம், கல்வி, சமூக அந்தஸ்து, நிறுவனம், தொழில் செய்வதில் அனுபவம் போன்ற வேறுபாடுகளைவிட, ஒருவரின் சிந்தித்தல் மற்றும் செயல்படுத்துதல் திறன் தான் முதலில் பேசும். பாகுபாடு பார்ப்பது என்பது மனிதனின் இரண்டாம் குணமே, என்கிறார் ரவி சரோகி.
கலந்தாய்வின் இறுதி கட்டமாக ஆலோசைனையாளர் சந்து நாயர்,
"முதலீட்டாளர்கள் மார்ஸ் கிரகத்தில் இருந்து வந்திருந்தாலும் சரி, தொழில் முனைவோர்கள் வீனஸ் கிரகத்தில் இருந்து வந்திருந்தாலும் சரி, இருவரும் பூமியில்தான் வாழ வேண்டும்..."
என்று கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
.