செஸ் வேட்டி, புடவை, கோலம், மேக்கப்: Chess Olympiad போட்டியை விதவிதமாக கொண்டாடும் மக்கள்!
தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருவதையொட்டி, வேட்டி, சேலை, கோலம், மேக்கப் என செஸ் விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை விதவிதமாக வெளிப்படுத்தி வருகின்றனர் மக்கள்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடந்து வருவதால், தமிழகமே விழாக்கோலம் பூண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இப்போட்டியில் உலகம் முழுவதும் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் பங்கேற்றுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பான முறையில் செய்து வருகிறது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகில் உள்ள செஸ் விளையாட்டு பிரியர்கள் மற்றும் வீரர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். தமிழகத்திலும் செஸ் விளையாட்டு விழிப்புணர்வு மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டி கொண்டாட்டம் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியாக தங்களது மகிழ்ச்சியை, விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இது தொடர்பாக பல்வேறு வித்தியாசமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மராத்தான் போட்டிகள், பள்ளிகளில் செஸ் விளையாட்டுப் போட்டிகள் என ஒருபுறம் போட்டிகள் வைத்து செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில், தனிப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் சில வியாபார நிறுவனங்களும் வித்தியாசமாக அறிவிப்புகள் மற்றும் செய்கைகள் மூலம் செஸ் ஒலிம்பியாட் கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இதோ அப்படியான சில சுவாரஸ்யமான கொண்டாட்டங்களின் தொகுப்பு...
செஸ் போர்ட்டாக மாறிய நேப்பியர் பாலம்
தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்தது சென்னை நேப்பியர் பாலம்தான். கறுப்பு, வெள்ளை நிறத்தில் சதுரங்கப் பலகை போல் நிறம் மாறி, பார்ப்போரைக் கவர்ந்திழுத்தது இந்தப் பாலம். சென்னையின் புதிய செல்பி பாயிண்டாகவே மாறியது நேப்பியர் பாலம்.
வேட்டி கட்டிய தம்பி
தமிழக பாரம்பரியத்தில் அனைத்து மக்களும் சகோதரர்கள் என்ற வகையில், செஸ் கதாபாத்திரத்தில் உள்ள குதிரை உருவத்திற்கு, வேட்டி அணிவிக்கப்பட்டு அதற்கு ’தம்பி’ என்று பெயர் வைக்கப்பட்டது. சென்னையில் ஆங்காங்கே இந்த தம்பி சிலைகள் மக்களை ஆச்சர்யப்படுத்தியது.
செஸ் கோலங்கள்
தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்தது கோலங்கள். அறிவியல் ரீதியாக கோலம் போடுவதற்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், வாசல் என்பது பெண்களின் கலைப்படைப்புகளுக்கான களம். அங்கு தங்களுக்கு பிடித்ததை கைகளால் வரைந்து வண்ணமயமாக்குவார்கள் பெண்கள். அந்தவகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்தும் வித்தியாசமான அழகான கோலங்களைப் போட்டு அசத்தியுள்ளனர் சில பெண்கள்.
அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், கோலங்களை மீட்டுருவாக்கம் செய்யும் வரலாற்று ஆசிரியையான மீனாட்சி தேவராஜ். இவர் தனது கோலங்களில் செஸ் ராஜா, ராணி, சிப்பாய் என செஸ் கதாபாத்திரங்களை சிக்கு கோலங்களாக வரைந்து வருகிறார்.
இதேபோல், சென்னை சிஐடி காலனி, மைலாப்பூர் போன்ற பகுதிகளிலும், செஸ் ஒலிம்பியாட்டை மையமாக வைத்து, பெண்கள் தங்கள் வீட்டு வாசல்களில் விதவிதமாக கோலங்களை வரைந்து வருகின்றனர்.
இவை கோலங்களா? அல்லது ஓவியமா? என வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது ஒவ்வொரு கோலங்களும்.
‘நம்ம சென்னை.. நம்ம செஸ்..’ என்ற ஸ்லோகன்களுடன் அசர வைக்கும் வகையில் இருக்கின்றன இந்தக் கோலங்கள்.
நீச்சல் குளத்தில் செஸ்
காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் வீரர்கள் நீந்தியவாரு செஸ் விளையாடினர். காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆழ்கடலுக்குள் ஆட்டம்
சென்னை நீலாங்கரையில் உள்ள கடல் பகுதியில் 60 அடி ஆழத்தில், ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர்கள் தம்பி போல் உடையணிந்து செஸ் விளையாடினர். சமூகவலைதளங்களில் பதிவிடப்பட்ட இந்தப் புகைப்படங்கள், விளையாட்டு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலானது.
பிரமாண்ட கோலம்
திருவண்ணாமலையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சதுரங்க வடிவில் பிரம்மாண்டமான கோலம் வரையப்பட்டது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டுச் சென்றனர்.
வீரர்களுக்கு மரக்கன்றுகள்
செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இதனை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தொடக்கி வைத்து பார்வையிட்டார். இதில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து 378 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டு செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை நேரில் பார்வையிட, சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதே போல் அங்கு நடைபெற்ற மற்றுமொரு நிகழ்ச்சியில், சேலம் மாவட்டத்தின் சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்களுக்கும் மரக்கன்றுகள் அனுப்பி வைக்கப்பட்டது.
செஸ் போர்ட் சேலை
பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல தனியார் பட்டுச்சேலை நிறுவனம் ஒன்று, செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வை பட்டுச்சேலை உற்பத்தி மூலமே ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து, தயாரித்தது தான் செஸ் போர்ட் சேலை.
சுமார் 35 நாட்கள் உழைத்து, நெசவாளர் மூலம் செஸ் போர்ட்டில் இருப்பது போலவே கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டங்கள் கொண்டும், இரு புறமும் பார்டர் அமைத்து இந்த பிரத்யேக படடுச்சேலை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டுச் சேலையை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அறிமுகப்படுத்தினார்.
தம்பி வேட்டிகள்
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கென பிரத்யேகமாக, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக புதிய வடிவில் தம்பி வேட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தம்பி குதிரை உருவம் அணிந்துள்ள வேட்டி போலவே ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பாக வேஷ்டிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தம்பி வேட்டிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ‘தம்பி வேட்டிய கட்டிக்கோ செஸ் போட்டியில ஜெயிச்சுக்கோ’ என்ற வாசகமும் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.
உயிர் பெற்ற சதுரங்க காய்கள்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இரு அரசர்களிடையேயான போர்க்களக் காட்சியை உருவகப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள இந்த வீடியோவுக்கு ‘சதுரங்க நடன சித்தரிப்பு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
செஸ் பலகையில் செவ்வியல் மற்றும் கிராமிய நடன அம்சங்களுடன் மல்யுத்தக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இறுதியில் மீசை முறுக்கிய மன்னரை, தனது வாள் வீச்சுத் திறனால் ‘செக்’ வைத்து நிறுத்துகிறார் எதிரணியின் ராணி. உரையாடல் எதுவுமின்றி பின்னணி இசையுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3.38 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு தயாரித்துள்ளார். சதுரங்க காய்கள் உயிர் பெற்று, போர் புரியும் இந்த வீடியோவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவும் இந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முயற்சியைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகத்தில் செஸ் போர்ட்
மேக்கப் துறையைச் சேர்ந்தவர்களும் செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வை தங்களது ஸ்டைலில் வெளிப்படுத்தத் தவறவில்லை.
அழகுக்கலை நிபுணரான ‘பி3 பிரைடல் ஸ்டூடியோ’ கார்த்திகா ஷ்யாம், தனது முகத்தில் ஒரு பாதி செஸ் போர்டு மாதிரியும், மறுபாதியில் தம்பி உருவத்தையும் மேக்கப்பில் கொண்டு வந்து அசத்தியுள்ளார்.
இதேபோல், மற்றுமொரு அழகுக்கலை நிபுணரான ‘பியர்ல்ஸ் பியூட்டி அகாடமி’ ஆர்த்தி பாலாஜியும், ‘நம்ம செஸ் நம்ம பிரைட்’ என்ற கான்செப்ட்டில், முகத்தில் ஒரு பாதியில் செஸ் போர்ட்டை வரைந்து, செஸ் போர்டு மாடலில் உடையும் அணிந்து புதுமையாக மேக்கப் செய்து, செஸ் ஒலிம்பியாட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.