49 நாட்கள்; 501 கோயில்கள்: காரைக்குடி சகோதரர்களின் ஆன்மிக சாதனைப் பயணம்!
இந்தியா, நேபாளம் என 2 நாடுகள், 20 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் மற்றும் அங்குள்ள 501 கோயில்களை காரைக்குடியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் 49 நாள்களில் சுற்றி வந்துள்ளனர். இவர்கள் பயணித்த மொத்த தூரம் 20, 822 கி.மீ. இந்தியாவில் இதுஓர் முதல் ஆன்மிக சாதனைப் பயணமாகும்.
இந்தியா ஓர் ஆன்மிக பூமி. பரந்து விரிந்த இந்நாட்டில் எண்ணற்ற கோயில்கள் நிறைந்துள்ளன. ஓவ்வொரு கோயிலும் நாட்டின் ஓவ்வொரு பகுதியில் உள்ளன. இவை அனைத்துக்கும் ஓர் வரலாறும், வித்தியாசமான கலாசாரமும் உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை கண்டுகளிக்க வேண்டும் என்பது ஓவ்வொரு சராசரி மனிதனின் விருப்பமாக இருக்கும். ஆனால் நாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் தரிசிப்பது என்பது சற்று கடினமாக காரியம்தான். ஆனால் இத்தகைய கடினமான காரியத்தையும் சிரமேற்கொண்டு செய்து முடித்துள்ளனர் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ளது கே. வேலங்குடி என்ற அழகிய கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் பாண்டித்துரை (30), கார்த்திகேயன் (27) என்ற இரு சகோதரர்கள். இவர்களில் பாண்டித்துரை பெங்களுரூவில் சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்துக்கு 3 கிளைகளும் உள்ளன. கார்த்திகேயன் சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக உள்ளார்.
தங்களது ஆன்மிக சாதனைப் பயணம் குறித்து கார்த்திகேயன் நம்மிடம் கூறியதாவது, எங்களது சொந்த ஊரான கே. வேலங்குடியில் ஆண்டின் 12 மாதங்களும் ஏதாவதொரு திருவிழா நிகழ்ந்தவண்ணம் இருக்கும். இத்தகைய ஆன்மிகச் சூழலில் வளர்ந்த எங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் இருப்பது இயற்கைதானே. இந்த ஆன்மிக நாட்டம்தான் எங்கள் இருவரையும் ஆன்மிகச் சுற்றுப்பயணத்தில் ஈடுபடத் தூண்டியது, என்றார்.
நாங்கள் எங்களின் ஆன்மிகச் சுற்றுப் பயணத்தை 2019ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி எங்கள் ஊரில் உள்ள சொல்கேட்ட விநாயகர் கோயிலில் தரிசனம் செய்து தொடங்கினோம். தொடர்ந்து மதுரை பாண்டி கோயில், கன்னியாகுமரி என ஓவ்வொரு ஊராகச் செல்லத் தொடங்கினோம் என்கிறார்.
ஆன்மிக முயற்சியாக மட்டுமன்றி, இதனை சாதனை முயற்சியாகவும் செய்யத் திட்டமிட்டிருந்தனர் இந்த சகோதரர்கள். ஓவ்வொரு கோயிலிலும் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து, அந்த கோயிலின் வரலாறு, கலாச்சாரம், அந்த கோயிலை கட்டிய மன்னர் என அனைத்து விவரங்களையும் சேகரித்து, முகநூலில் பதிவு செய்து வந்தனர். மேலும், இந்த ஆன்மிக சுற்றுப்பயணத்துக்காக தங்களின் கார் முழுவதும் இந்தியாவின் பாரம்பரியமிக்க கோயில்களை ஸ்டிக்கர்களாக மாற்றி ஒட்டியுள்ளனர்.
கன்னியாகுமரியில் இருந்து கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, ஜம்மு காஷ்மீர் என இந்தியாவின் வடக்கு எல்லை வரையுள்ள அனைத்து பிரசித்தி பெற்ற கோயில்களையும் தரிசித்தோம்.
பின்பு அங்கிருந்து மீண்டும் ஹிமாச்சலபிரதேசம், சண்டிகர், தில்லி, உத்ரகாண்ட், உத்திரபிரதேசம், பீகார், சிக்கிம், மேற்குவங்கம், ஓடிசா, ஜார்கண்ட், சட்டிஸ்கர், மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா வழியாக மீண்டும் தமிழகத்துக்கு வந்து எங்கள் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மாள் கோயிலில் எங்களின் ஆன்மிக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தோம் என்கிறார் கார்த்திகேயன்.
இந்தியா மட்டுமன்றி நேபாளம் உள்பட இரு நாடுகளையும், 20 மாநிலங்களையும், 3 யூனியன் பிரதேசங்களையும், அங்குள்ள கோயில்களையும் இவர்கள் இருவரும் இணைந்து சுமார் 49 நாள்களில் சுற்றி வந்துள்ளனர். இவர்கள் பயணித்த மொத்த தூரம் 20 ஆயிரத்து 822 கிலோமீட்டர்கள். இதுவரை இந்தியாவில் யாரும் இதுபோல ஓரே முயற்சியில் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு கோயில்களில் தரிசனம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஓர் சாதனையாகும். இதற்காக இவர்களுக்கு Asia book of records, India book of records, World records India, Assist world records, Vajra world records, Kalam's world records, Universal Achievers Book of records, Future Kalam book of records என 8 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இளைஞர்கள் குழுவாக இணைந்து தொலைதூரப் பகுதிகளுக்கு இன்பச் சுற்றுலா செல்வது வழக்கம். இளைஞர்களிடம் ஆன்மிக நாட்டத்தை ஏற்படுத்த, இன்பச் சுற்றுலாவுக்கு பதிலாக ஓர் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டால் என்ன எனத் தோன்றியது, அதைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம்.
“ஜாதி, மத வேறுபாடின்றி இந்தியராக பிறந்த அனைவரும் வாழ்க்கையில் ஓர் முறை இந்தியாவில் உள்ள முக்கிய கோயில்களை அனைத்தையும் சென்று பார்க்கவேண்டும். அக்கோயிலின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் நமது செறிவான கலாச்சாரமும், பண்பாடும் தெரியவரும். குறைந்தபட்சம் நமக்கு அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களையாவது சென்று பார்த்து அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டும்,” என்கிறார் கார்த்திகேயன்.
தினசரி காலை 4 மணிக்கு எழுத்து கிளம்பும் இவர்கள் இருவரும், பகல் முழுவதும் பல்வேறு கோயில்களுக்குச் சென்றுவிட்டு, இரவு 11 மணிக்கு அருகில் உள்ள ஏதாவது ஓர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி விடுவார்களாம்.
தினசரி ஓர் ஊர், பல்வேறு விதமாக பகுதிகளில் வித்தியாசமான உணவு, தினம் ஓர் ஊர் தண்ணி என அலைந்தாலும் இந்த ஆன்மிக சுற்றுலாவின்போது ஓர் தலைவலி கூட வந்ததில்லை. அவ்வளவு உடல், மன வலிமையுடன், உற்சாகமாகவே கோயில்கோயிலாக சுற்றினோம். மேலும், இச்சுற்றுலாவை தொடங்குவதற்கு 15 நாள்களுக்கு முன்பே அசைவ உணவைத் தவிர்த்து விரதம் மேற்கொண்டோம் என்கின்றனர் இந்த சகோதரர்கள்.
இளைஞர்களிடம் ஆன்மிக எழுச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நல்எண்ணமும் அது அளித்த உத்வேகமுமே எங்களது இந்த ஆன்மிக சாதனைப் பயணம் ஓர் சிறு இடையூறுகூட இன்றி முழு வெற்றியடைய காரணமாக அமைந்துள்ளது.
இந்தியாவை புரிந்து கொள்ளவேண்டுமானால் புத்தகங்கள் மட்டும்போதாது. சாலை வழியாக, மாநிலங்கள்தோறும் சென்று பல்வேறு தரப்பட்ட மக்கள் மற்றும் கலாச்சாரங்களை பார்த்தால்தான் இந்தியாவை புரிந்துகொள்ளமுடியும் என்கின்றனர் கார்த்திகேயனும், பாண்டித்துரையும்.
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்டது போன்ற ஆன்மிக சிந்தனை இந்தியாவில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் ஏற்பட்டால், இந்தியா கட்டுக்கோப்பான, சுயகட்டுப்பாடு மிகுந்த, சிந்தனை வளமிக்க இளைஞர் சக்தியை கொண்ட உலகின் முன்னணி நாடாக மாறிவிடும். இந்திய இளைஞர்கள் ஓவ்வொருவரும் ஓர் விவேகானந்தராக மாறி விடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
இவர்களை Facebook and Insta Page இல் தொடர IndianBoyzTravelDiariez என்ற பெயரில் இவர்களின் ஆன்மிக பயணம் குறித்த கூடுதல் தகவல்களைப் பெறலாம்.