அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசியின் தங்கை கேரள காவல்துறையில் இணைந்தார்!
கேரள காவல் துறையில் இணைந்துள்ள 73 பழங்குடி மக்களில் ஒருவரான சந்திரிகா தனது நியமனத்தை தனது சகோதரருக்கு அர்ப்பணித்துள்ளார்.
கேரளாவில் பிப்ரவரி மாதம் பொதுமக்கள் அடித்து கொலை செய்யப்பட்ட ஆதிவாசி மதுவின் தங்கை தான் சந்திரிக்கா. அதனால், தனது அண்ணனின் நினைவாக இந்த நியமனத்தை ஏற்றுகொள்வதாக தெரிவித்துள்ளார். திங்கள் அன்று, முதல் அமைச்சர் பினராயி விஜயன் முன் இந்த 73 பழங்குடி மக்கள் பதவியேற்றனர்.
தி நியுஸ் மினிட்கு பேட்டி அளித்த 29 வயதான சந்திரிகா தனது அண்ணன் மதுவின் இழப்பில் இருந்து இன்னும் தங்கள் குடும்பம் மீளவில்லை என தெரிவித்தார். பரிட்சையில் தேர்வடைந்த சந்திரிக்கா பிப்ரவரி 23ஆம் தேதி நடக்க இருந்த நேர்காணலுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கு முந்தய தினம் தான் மளிகை பொருட்களை திருடிவிட்டார் என சந்திரிக்காவின் அண்ணன் மீது சந்தேகப் பட்டு மக்கள் அவரை அடித்து கொன்றனர்.
அண்ணனின் இழப்பை ஏற்க முடியாத சந்திரிக்கா நேர்காணலை எதிர்கொள்ள முடியாது என சோர்ந்துப்போனார். இருப்பினும் தனது குடும்பம் கட்டாயப்படுத்தியதால் நேர்காணலில் கலந்துக்கொண்டார் சந்திரிக்கா.
“நான் மதுவின் தங்கை என தெரிந்தவுடன் என்னை நேர்காணலுக்கு முதலில் அழைத்தனர். உள்ளே நுழைந்தவுடன் நான் அழ தொடங்கிவிட்டன்... இதை என் அண்ணனுக்கு சமர்பிக்கிறேன்.”
மதுவின் பிரேத பரிசோதனையின் ஆய்வு, அதிக உள்காயம் மற்றும் ரத்தபோக்கு ஏற்பட்டு உயிர் இழந்ததாக தெரிவித்தது. இதனையொட்டி வனத்துறை அதிகாரிகள் தங்களது வேலையை செய்ய தவறிவிட்டார்கள் என சந்திரிக்கா குற்றம் சாட்டியுள்ளார்.
டைம்ஸ் நொவ் உடன் பேசிய சந்திரிக்கா,
“மது குகையில் வாழ்ந்து வந்ததால் ஒரு சில குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே அவரால் செல்ல முடியும். காட்டின் உட்பகுதிக்கு மக்கள் வந்து தாக்கியது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது,” என்றார்.
சந்திரிகாவிற்கு காவல் அதிகாரியாக ஆக வேண்டும் எனபதே கனவாக இருந்துள்ளது. நான்கு சகோதரர்களில் மதுவே மூத்தவர், சிறு வயதிலே தந்தையை இழந்த சந்திரிக்காவிற்கு தாய் மற்றும் சகோதரர்கள் தான் உறுதுணையாக இருந்தனர்.
“என்னால் முடிந்தவரை எனது சமூகத்தை முன்னேற்ற முயலுவேன். எனது அறிவுக்கு எட்டியதை என் சமூகத்திற்கும் தெரிவிப்பேன்,” என்கிறார் சந்திரிக்கா.
74 பழங்குடியின மக்களை பல துறையில் இணைக்கும் கேரள அரசாங்கத்தின் முயற்சி பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தொடர்ந்து இயங்கும் என முதல்வர் விஜயன் தெரிவித்தார்.
தமிழ் கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்