4 ஆண்டுகள், 3 கருச்சிதைவு, 1616 ஊசிகள்: குழந்தைப் பெற ஓர் தாயின் வலிமிகு போராட்டம்!
இரண்டு வாரக் குழந்தையான ‘லண்டன்’ பிறக்க அவளின் தாய் பயன்படுத்திய 1616 ஊசிகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இதயத்துக்குள் குழந்தையை வைத்து எடுத்த போட்டோ கடந்தாண்டு வைரல் ஆனது.
நாம் இந்த உலகில் உருவாக்க முடியுமானதொரு ஒற்றை மிகச்சிறப்பான விஷயம் ‘புதிய வாழ்க்கை’. ஆனால், உங்களது உடல் உங்கள் சொந்த குழந்தையைப் பெற அனுமதிக்காதபோது என்ன நடக்கும்? சிலர் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், சிலர் தத்தெடுப்பைத் தேர்வு செய்கிறார்கள், மற்றவர்கள் செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) போன்ற பிற மாற்று வழிகளை அணுகிறார்கள். பட்ரீசியா மற்றும் கிம்பெர்லி ஓ நீல் செய்ததும் அதுதான். ஆயினும், அவர்கள் கடக்கவிருந்தது சவாலான சாலை என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் சாதனை அத்தனை எளிதல்ல என்பதை உலகத்தார் அனைவரும் அறிவர். பட்ரீசியா மற்றும் கிம்பெர்லி ஓ நீல்-ன் கதை அதற்கு புதிய அர்த்தத்தை சேர்க்கும். பட்ரீசியா மற்றும் கிம்பெர்லியின் பெண் குழந்தை, ‘லண்டன்’ ஆகஸ்ட் 3, 2018 அன்று பிறந்தாள். நீங்கள் அவளை நேரில் பார்த்தால், அவளொரு முழு நிலவு என்றே நினைப்பீர்கள்.
ஏனெனில், நான்கு வருடங்கள், மூன்று கருச்சிதைவுகள் மற்றும் 1,616 ஐவிஎஃப் ஊசிகள் தேவைப்பட்டன அச்சிறு அதிசயத்தை அவர்கள் கருத்தரித்து பெற்றெடுக்க...
ஆம், குழந்தை லண்டனை உலகிற்கு அறிமுகம் செய்து வைப்பதற்கு முன்பு கிம்பெர்லி மற்றும் பாட்ரிசியாவுக்கு நான்கு ஆண்டுகள் எடுத்து கொண்டதுடன், இதயத்தை உடைக்கும் மூன்று கருச்சிதைவுகளும் நடந்தன. அவ்வலிகளையும், கருவுறுதல் போராட்டங்களை வெளிப்படுத்தும் வகையில், ‘லண்டன்’ இரண்டு வாரக் குழந்தையாக இருந்த போது, தம்பதியினர் பயன்படுத்திய 1616 ஊசிகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இதயத்துக்குள் குழந்தையை வைத்து போட்டோ ஒன்றை எடுத்தனர்.
கடந்தாண்டு எடுக்கப்பட்ட இப்புகைப்படம், சோஷியல் மீடியாக்களிலும் வைரலாகி நெட்டிசன்களின் அன்பை பெற்றது. கிம்பெர்லி அவளது பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்பு அவளும் அவரது மனைவியும் சந்தித்த வலி, கண்ணீர் மற்றும் தடைகளை விவரிக்கத் தொடங்கினார்.
“எங்களது நீண்டகால கருவுறுதல் போராட்டம் எங்கள் இரண்டு வார மகளின் புகைப்படத்தில் பதிவு செய்யப்பட்டது. இது பலருக்கு நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும். நாங்கள் இழந்த குழந்தைகளையும், நாங்கள் போராடிய நம்பமுடியாத பயணத்தையும் நினைவில் கொள்ள ஒரு நினைவகத்தை உருவாக்க விரும்பியே இந்த புகைப்படத்தை எடுத்தோம்,” என்கிறார்.
“நான் ஊசிகளை போடத் தொடங்கியவுடன் கிம்பெர்லி சிரிஞ்சிகளை சேர்க்க தொடங்கினாள். எங்களது இப்பயணத்தின்முடிவில் இப்படியொரு புகைப்படத்தை எடுக்கலாம் என்றும் கிம்பெர்லி முன்பே முடிவு செய்திருந்தாள். ஆனாலும், இவ்வளவு ஊசிகள் இருக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை,” என்று பாட்ரிசியா BuzzFeed இடம் கூறினார்.
லண்டனின் முந்தைய பக்கங்கள்...
கலிபோர்னியாவைச் சேர்ந்த பட்ரீசியாவும் கிம்பெர்லியும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஒரு டேகேர் சென்டரில் பணிபுரிந்தபோது சந்தித்தனர். அங்கு தொடங்கிய அவர்களது காதல் பயணத்தில், அவர்கள் ஒன்றாக ஒரு குழந்தையைப் பெற விரும்பியுள்ளனர். அவர்களது காதல் அத்தியாயம் தொடங்கிய ஒரு வருடம் கழித்து, பிப்ரவரி 2014ம் ஆண்டில் இருந்து கருத்தரிக்க முயற்சித்துள்ளனர்.
ஓரினச்சேர்க்கையாளர்களான அவர்கள் 2017 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர்.
“நாங்கள் ஒரு கொடையாளரைத் தேர்ந்தெடுப்போம், ஒரு மருத்துவரிடம் செல்வோம், ஒன்பது மாதங்களில் எங்கள் குழந்தையைப் பெறுவோம்! இது மிகவும் எளிதானது என்று நாங்கள் கருதினோம். ஆனால், நாங்கள் முற்றிலும் தவறாக எண்ணியிருந்தோம்,” என்று அவர்கள் டெய்லிமெயில்.காமிடம் தெரிவித்தனர்.
செயற்கை கருத்தரிப்பு முறையின் முதல் கட்டமான ஐ.யூ.ஐ (அதாவது ஆணின் உயிரணுவை எடுத்து நேரடியாக பெண்களின் கர்ப்பப்பையில் செலுத்தும் தொழில்நுட்பம்) முறையில் முதல் முயற்சியை எடுத்துள்ளனர். ஆனால், ஐ.யூ.ஐ-ன் முதல் இரண்டு சுழற்சிகள் தோல்வியடைந்து. முதல் சுழற்சியில் கருமுட்டை உருவாகாததால், மற்றொரு ஒரு மாதம் காலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது சுழற்சியில் கருமுட்டைகள் உருவாகியதில் அவர்களுக்கு அதிக நம்பிக்கையை அளித்தது. கருத்தரித்தல் செயல்முறை மற்றும் மரபணு சோதனைக்குப் பிறகு, மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என ஐந்து நல்ல தரமான கருக்கள் இருந்தன.
“நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம். பட்ரீசியா கர்ப்பமாக இருப்பதை விரைவாக கண்டுபிடித்தோம்,” எனக்கூறி நினைவு கூர்ந்தார் கிம்பெர்லி.
ஆனால், ஆறு வாரங்களில் பட்ரீசியாவின் கருச்சிதைந்தது. முழு வெற்றியைக் காண்பதற்கு முன்பு ஒரு கருவை இழப்பது பொதுவானதே என்று மருத்துவர்கள் கூறியதால், அவர்கள் மீண்டும் முயன்றனர். இம்முறையும் பட்ரீசியா விரைவில் கர்ப்பமாகினார். இம்முறை எட்டு வாரங்களில் அது நிகழ்ந்தது.
இரு முயற்சிகளுக்கு பிறகு ஒரு புதிய மருத்துவருடன் ஐவிஎஃப் பயணத்தைத் தொடங்கினர். பட்ரீசியாவிற்கு சில பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதில், அவருக்கு Factor V Leiden என்ற பாதிப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். அதாவது நஞ்சுக்கொடியில் இரத்த உறைவு உருவாகி கருச்சிதைவை ஏற்படுத்தும் பாதிப்பு அது.
“இப்போது எங்களுக்கு பிரச்னை என்னவென்று தெரியும். நாங்கள் மூன்றாவது முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் கர்ப்பமாகவில்லை.
நான்காவது முறை எங்களுக்கு ஒரு நேர்மறையான கர்ப்பப் பரிசோதனை கிடைத்தபோது, அது எங்களுக்குத்தான் என்று எங்களுக்குத் தெரியும்! எட்டு வாரங்கள் நாங்கள் எங்கள் பிள்ளையை வளர்த்தோம். அவருடைய சிறிய இதயத் துடிப்பு மற்றும் அவரது சிறிய கைகள் அசைவதைக் கண்டோம்,”என்று கிம்பெர்லி குரல் தழும்ப கூறினார்.
ஏனெனில், அந்த மகிழ்ச்சியும் நிலைத்திருக்கவில்லை. 11 வாரங்களில் அவர்களது சிறு பையனின் இதயம் நின்று அவர்கள் மீண்டும் பேரழிவிற்கு ஆளானார்கள்.
“அதோடு நாங்கள் முடித்து கொள்ள எண்ணினோம்! மனமுடைந்து இதயம் சில்லுசில்லாகிய வலியை உணர்ந்தோம். நாங்கள் எல்லாவற்றிலிருந்தும் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ள எண்ணினோம்.”
ஆனால் எங்களுக்கு ஒரு கரு எஞ்சியிருந்தது. நாங்கள் அதை முயற்சி செய்யாவிட்டால், அதை நிராகரிக்க வேண்டும், அதைச் செய்ய எங்களுக்கு வழி இல்லை, என்று கூறிய தம்பதியினர் Factor V Leiden-ல் நிபுணத்துவம் பெற்ற ஒரு மருத்துவரைக் கண்டறிந்தனர். உடனடியாக பட்ரீசியாவுக்கு ‘டயட்’ வழங்கப்பட்டதுடன், இதுவரை அவர்கள் கேள்விப்படாத மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
“டாக்டர் தலைகீழாய் நிற்கச் சொன்னாலும், நாங்கள் அதை முயற்சிப்போம் என்று நாங்கள் அடிக்கடி கேலி செய்துகொள்வோம். எங்கள் நம்பிக்கையையும் எங்கள் தைரியத்தையும் ஆழமாகத் தோண்டி, கடைசியாக முயற்சிக்க முடிவு செய்தோம். எங்கள் நம்பிக்கையை உயர்த்துவதற்கு நாங்கள் கடுமையாக முயற்சித்தோம், ஆனால் நாங்கள் பயந்தோம். இது தான்! இனி வாய்ப்புகள் இல்லை என்று ஒருவருக்கொருவர் தைரியப்படுத்தி கொண்டோம்,” என்று கிம்பெர்லி கூறினார்.
நான்காவது முறையாக பட்ரீசியா கர்ப்பம் தரித்தார். அச்சமயத்தில், டிஸ்னி வேர்ல்டுக்கு விடுமுறைக்குச் சென்றபோது அங்கு ஒரு சிறிய பிரார்த்தனையை மேற்கொண்டனர். அவர்கள் திரும்பி வந்த நாள், அவர்களது தேவதையின் இதயத் துடிப்பைக் கேட்டுள்ளனர்.
“அவள் ஒரு உண்மையான டிஸ்னி குழந்தை என்று நாங்கள் கூற விரும்புகிறோம், ஏனென்றால் அவளுடைய இதயம் அங்கிருந்து தான் துடிக்கத் தொடங்கியது,” என்று கூறினார் கிம்பெர்லி.
கர்ப்பம் எளிதானது அல்ல. இக்கருவுறுதல் பயணத்தில் பட்ரீசியா முழு நேரமும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவ்வளவு இழப்பு மற்றும் இதயத் துடிப்புக்குப் பிறகு, அவளும் கிம்பெர்லியும் ஒவ்வொரு நாளையும் அச்சத்துடனே கடந்துள்ளனர்.
“ஒவ்வொரு அல்ட்ராசவுண்டும் கடைசியாக இருந்ததைப் போலவே இருக்கிறதே என்று பயமாகவே இருக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் ‘அவள் நன்றாக இருக்கிறாள்’ என்று கூறிக்கொள்வோம். இறுதியாக, ஆகஸ்ட் 3, 2018 அன்று, குட்டி லண்டன் உலகிற்கு தனது பிரம்மாண்டமான என்ட்ரியை கொடுத்தாள். அவளுடைய சிறிய முகத்தைப் பார்த்ததும், அவளுடைய அழுகையைக் கேட்டதே உலகின் மிகச் சிறந்த உணர்வு,” என்றார் ஆனந்தகண்ணீருடன் கிம்பெர்லி.
லண்டன் பிறப்பதற்கு முன்பு அவர்கள் பயன்படுத்திய அனைத்து சிரிஞ்சிகளுடன் ஒரு புகைப்படம் எடுக்க விரும்பிய தம்பதியினர், புகைப்படக் கலைஞர் பாக்கரைத் தொடர்பு கொண்டனர். பாக்கர் அனைத்து ஊசிகளையும் கொண்டு இதய வடிவை கொண்டுவர முடிவு செய்தார்.
புகைப்படத்தில், ஒரு ரெயின்போ வண்ணத் துணி அணிந்த, 2 வாரக் குழந்தை அவளது பெற்றோரின் ஐவிஎஃப் போராட்டங்களைக் காட்டும் நூற்றுக்கணக்கான சிரிஞ்ச்களால் சூழப்பட்டுள்ளது. அவளைச் சுற்றியுள்ள இதயம் ஒரு நாளைக்கு இரண்டு முறை அவருடைய அம்மா பயன்படுத்திய இரத்த உறைவை தடுக்கும் ஊசியாலானது. அடுத்த சுற்று அவரது அம்மா எடுத்துக்கொண்ட பல ஐவிஎஃப் ஊசி மருந்துகளைக் காட்டுகிறது. கடந்தாண்டு சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமித்த கலர்ஃபுல் புகைப்படம் வலிமிகுந்த போராட்டத்தின் பிரதிபலிப்பு!
தகவல் உதவி : www.dailymail.com & theheartysoul.com , பட உதவி: Packer Family Photography