ரூ.5 லட்சம் முதலீட்டை ரூ.5 கோடி வருவாய் வர்த்தகமாக மாற்றிய சூரத் நிறுவனம்!
பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களால் தொடர்ந்து நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என சொல்லப்பட்டதை மீறி ஆல்பினோ நிறுவனர்கள், வெற்றிகரமான பீனெட் பட்டர் பிராண்டை உருவாக்கியுள்ளனர். இன்று இ-காமர்ஸ் தளங்களில் இந்த பிராண்ட் அமோக விற்பனை ஆகிறது.
சூரத்தைச் சேர்ந்த ஆறு சிறு வயது நண்பர்கள் தங்களது எளிய வணிக பின்னணியை மீறி, பெரிய அளவில் வர்த்தகத்தை துவக்கும் கனவு பற்றி உற்சாகமாக பேசினர். 2012ல் அவர்கள் பள்ளிப் படிப்பை முடிந்த போது இது நிகழ்ந்தது. பிரியங் வோரா, மில்னா கோபானி, ஹிரேன் ஷேதா, மகாத்வா ஷேதா, உமேஷ் கஜேரா, சேதன் கனானி ஆகிய நண்பர்கள் அதன் பிறகு வேறு வேறு வழிகளில் சென்றுவிட்டாலும் தங்களுக்குள் தொடர்பில் இருந்தனர்.
“நாங்கள் தொடர்ச்சியாக, படித்துக்கொண்டே, ஐடியாக்களை பகிர்ந்து கொண்டு, கண்காண்ட்சிகளுக்கு சென்று வந்து கொண்டிருந்தோம்,” என்கிறார் ஆல்பினோ இணை நிறுவனரான சேத்தன் கனானி.
2015 ல் கல்லூரியை முடித்த நிலையில், ஆரோக்கிய வாழ்க்கைக்கான பொருட்கள் பிரிவில் கவனம் செலுத்தத் துவங்கினர். பீனெட் பட்டர் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் இந்தியாவில்; அத்தனை பிரபலமாக இல்லை என அறிந்தனர்.
“இந்தியாவின் 90 சதவீத பீனெட் பட்டர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வேர்கடலை இங்கேயே உற்பத்தி செய்யப்படும் போது அதைக்கொண்டு தயாரிக்கப்படும் பீனெட் பட்டரை இங்கேயே ஏன் தயாரித்து விற்பனை செய்யக்கூடாது என யோசித்தோம். இந்த பிரிவை சந்தைப்படுத்தவே கடினமாக முயற்சிக்க வேண்டும் என எங்கள் ஆய்வில் தெரிய வந்தது,” என்கிறார் சேத்தன்.
சந்தை ஆய்வு ஒரு புறம் இருக்க, தங்கள் பிராண்டில் விற்க தயாரிப்பாளர்களிடம் பீனெட் பட்டர் கேட்டபோது சவாலை சந்தித்தனர். குறைந்தது 500 கேஸ்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
“பெரும்பாலானவர்கள் முயற்சியை கைவிட்டு விடுவார்கள். ஆனால் நாங்கள் உறுதியாக இருந்து, தொடர்ந்து முயற்சித்தோம். மறுப்பை ஒரு பதிலாக எடுத்துக் கொள்ளாத எங்கள் விடாமுயற்சிக்கு பலன் கிடைத்தது. தயாரிப்பாளர் 100 கேஸ் விற்க ஒப்புக்கொண்டார்,” என்கிறார் சேத்தன்.
கடினமான துவக்கம்
ஆல்பினோ (Alpino) எனும் பெயரை தேர்வு செய்து பதிவு செய்திருந்தனர். இந்த பெயரில் பீனெட் பட்டரை அமேசான் மற்றும் ஸ்னேப்டீல் தளங்களில் விற்பனை செய்தனர். ஆனால், 100 கேஸ்களை விற்க மூன்று மாதங்கள் ஆனது. அடுத்த முறை சென்ற போது தயாரிப்பாளரிடம் ஏற்றுமதி ரகம் பற்றி கேட்டனர். அந்த ரகம் மொறுமொறுப்பாக இருக்கவே அதை ஆர்டர் செய்தனர். 2016-17 ம் ஆண்டில் ரூ.25 லட்சம் வருவாயை எட்டினர்.
தங்கள் வாடிக்கையாளர்கள் பரப்பை ஆர்டர் செய்த போது, பெரும்பாலானவர்கள் ஹரியானா, பஞ்சாப் அல்லது தில்லியைச் சேர்ந்தவர்களாக இருப்பதை கவனித்தனர். முதலில் விநியோக அமைப்பை உருவாக்க வேண்டும் என புரிந்து கொண்டவர்கள், பிரத்யேக ஒப்பந்தம் மூலம் பீனெட் பட்டரை விற்கக் கூடிய 15 விநியோகிஸ்தர்களை நியமித்தனர். 2017 ல் மொறுமொறு ரகத்தில் மாதம் 50 கேஸ்களை விற்பனை செய்தனர்.
“பாடிபில்டர்களிடம் பீனெட் பட்டரின் அருமையை எடுத்துறைத்தோம். சர்வதேச ஆரோக்கிய மற்றும் உடல்நல மாநாட்டிலும் பங்கேற்றோம்,” என்கிறார் சேத்தன்.
மூன்று ஆண்டுகளில் வருவாய் ரூ.5 கோடியாக உயர்ந்துள்ளது. அமேசானில் அதிகம் விற்கும் பிராண்ட்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. இப்போது நிறுவனம் மேலும் பொருட்களை விற்பனை செய்யத்துவங்கியுள்ளது. பீனெட் பட்டரை அனைத்து இ-காமர்ஸ் தளங்களிலும் விற்பனை செய்து வருகின்றனர். தேசிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். பிரெட்டுடன் ஜாமுக்கு பதியில் பீனெட் பட்டரை பயன்படுத்த வைக்க விரும்புகின்றனர்.
சந்தையின் மதிப்பு
இந்தியாவில் பீனெட் பட்டரின் சந்தை மதிப்பு 100 மில்லியன் டாலராக கருதப்படுகிறது. IMARC குழும தகவல் படி சர்வதேச சந்தை 3.3 பில்லியன் டாலராக இருக்கிறது. ஆண்டுக்கு 6 சதவீத வளர்ச்சியில் தேவை உள்ளது. பல வகையான சுவைகள், புதிய கலைவகள், அதிகரிக்கும் உபரி வருமானம் மற்றும் ஆரோக்கிய தேர்வு ஆகியவை இதன் வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது.
ஆல்பினோ சில ஆண்டுகளில் ரூ.50 கோடி வர்த்தகமாக வளர திட்டமிட்டுள்ளது. விநியோகிஸ்தர்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இந்தியா உடல் தகுதி விஷயத்தில் ஆர்வம் செலுத்தி வருவதால், நிறுவனம் அதை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது.
ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்