5 லட்சம் முதலீடு; 1 கோடி இழப்பு; இன்று ஆண்டு வருவாய் 50 கோடி: மதுரை ‘சக்சஸ்’ கடையின் சக்சஸ் ஸ்டோரி!
ஐந்து லட்ச ரூபாய் கடனை மூலதனமாக்கி, பிரத்யேகமாய் ஆடவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆடைதயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தை, ஆறு கிளைகளாக பெருகும் அளவிற்கு விரிவுப்படுத்தியதுடன், 2030க்குள் 420கிளைகள் என்ற முனைப்பில் முயன்று வருகிறார் மதுரையின் Suxus ஜவுளிக்கடையின் நிறுவனர் ஃபைசல் அகமது.
ஒரு சட்டை வாங்கினால் மற்றொன்று இலவசம், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்று ஆடிமாதம் மட்டும் ஆடை உலகத்தார் ஆஃபராய் அள்ளிக்கொடுத்து கொண்டிருந்த வேளையில், ஆஃபர் எதற்கு? வருடத்தின் 365 நாளும் தள்ளுபடி விலையே அசல் விலை என்ற யுக்தியில் பயணித்து கொண்டிருக்கிறது ஆடவர்களுக்கான ஆடை களஞ்சியம் ‘சக்சஸ்’ ஆடை தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனம்.
‘7 சட்டைகள் - 1000ரூபாய்’, ‘5 பேண்ட்கள் -1000ரூபாய்’ என்று தங்களின் சக்சஸ் பார்மூலமாவை கண்டறிந்து ’Suxus' நிறுவனத்தை சக்சஸ்புல்லாய் நிர்வகித்து வருகிறார் நிறுவனர் ஃபைசல் அகமது.
2006ம் ஆண்டு ரூ.5 லட்சம் ஆரம்ப முதலீட்டுடன் தொடங்கப்பட்ட நிறுவனம், 2011ம் ஆண்டுவாக்கில் தீர்க்க முடியா கடனாகி, ஒரு கோடி ரூபாயை இழந்து திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
உண்மையில், இப்பெரும் இழப்பிலிருந்து மீண்டுஎழுந்ததுடன், இந்தாண்டு ரூ.50 கோடி டெர்ன்ஓவர் செய்யும் வணிகமாகவும் மாற்றியுள்ள அவர், வெற்றியை எப்படி அடைய முடியும்? என்பதை பற்றி நிறைய பகிரத் தொடங்கினார்.
தோல்வியிலிருந்து ஒரு வெற்றி!
31 வயதான மூன்றாம் தலைமுறை தொழிலதிபரான ஃபைசல், பி.காம் படித்துக் கொண்டிருந்த சமயம். அவருடைய அப்பா அவரது பிசினசுக்காக வாங்கிய கடன் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வணிகக்கடனில் இருந்து அப்பாவை மீட்க, ஃபைசல் தொழில்முனைவு உலகத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்.
“2006ம் ஆண்டு ஏழு தையல் மிஷன்களை கொண்டு தினமும் 100 சட்டைகளை உற்பத்தி செய்யும் சிறிய கார்மென்ட்சை தொடங்கினேன்.”
அடிப்படையில் பிசினஸ் டூ பிசினஸ் சேவையை வழங்கும் வணிகத்தை தொடங்கியுள்ளார். போத்தீஸ் போன்ற பெருவாரிய இடங்களில் கிளைகளை கொண்டிருக்கு பிரபலமான ஆடை நிறுவனங்கள் இரண்டிற்கு, ஃபைசல் ஆடவர்களுக்கான துணிகளை சப்ளை செய்து வந்தார்.
பிறகு, சிறிது சிறிதாய் அவருடைய விற்பனையாளர்களையும் அதிகரித்தார்.
“20 - 30 சதவீதம் என குறைந்த விகிதத்தில் மிக மெதுவான வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்தோம்,” என்கிறார் அவர்.
அக்காலத்தில், அவருடைய உற்பத்திகளை நேரடியாய் மக்களிடம் கொண்டு சேர்க்க, மதுரை, ஈரோடு, சேலம், திண்டுக்கல் மற்றும் திருச்சி என 5 இடங்களில் அவரே ஷோரூம்களை திறந்துள்ளார்.
“மற்ற ஜவுளிக் கடைகளில் எங்களுடைய சட்டைகளை 150ரூபாய்க்கு விற்க முடியுமாயின், அதே சட்டையை நாங்கள் ரூ 100க்கே விற்க முடியும்,” என்ற நம்பிக்கையில் ஷோரூம்களை தொடங்கிஉள்ளார் ஃபைசல்.
“ஆனால், அந்த ஐடியா பெரும் தோல்வியாக மாறியது. அந்த 5 கடைகளில், 3 கடைகள் எங்களிடம் உரிமம் பெற்றும் நடத்தப்பட்டது. மதுரை மற்றும் ஈரோட்டில் உள்ள இரு கிளைகளும் எங்களது சொந்த கடைகளாகும்,” என்றார்.
ஈரோட்டில் இருந்த கடை, பிரதானமான இடத்தில் அமைந்திருந்தது. அந்த கடையின் வாடகையாக மட்டுமே மாதம் ரூ 1 லட்சம் செலுத்தி வந்துள்ளார். ஆனால், கடையில் தினசரி போனியோ ரூ3,000-யைத் தாண்டவில்லை.
“அதனால், ஈரோட்டில் இருந்த கடையை மூடிவிட்டு, மதுரை கிளையை மட்டும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம். ஆனால், ஈரோடு கடையில் இருந்த மொத்த ஸ்டாக்கையும் மதுரை கிளைக்கு மாற்றுவதற்கு மாறாக, அங்கு ஒரு விற்பனை தளம் இருக்கட்டும் என்று நினைத்தோம்,” என்றார்.
கடையில் 5,000 முதல் 6,000 ஆடைகள் ஸ்டாக்கில் இருந்துள்ளது. நிலைமையை சரி செய்ய யோசித்து கொண்டிருந்த ஃபைசலுக்கு 7 சட்டைகளை 1000 ரூபாயுக்கு விற்றால் என்ன ...? என்ற எண்ணம் எழுந்துள்ளது. மறுநாளே, கடையின் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்ற 3,000 தொலைபேசி எண்களுக்கு ’7 சட்டை - 1000ரூபாய்’ ஆஃபரை அறியப்படுத்த குறுஞ்செய்தி அனுப்புமாறு கடையின் மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீங்கள் நம்புவீர்களா..! அடுத்த நாள் அவர்களது மொத்த விற்பனை ரூ.3.5லட்சம்.
இது ஒரு ஸ்டாக் கிளியரன்ஸ் விற்பனை என்பதால், கண்டிப்பாய் இந்த விற்பனை எதிர்பார்க்கப்பட்டதே. அதனால், அடுத்த நாள் விற்பனை பற்றி எந்தவெரு எதிர்ப்பார்ப்பும் இல்லை.” என்றுக்கூறி, அவருடைய விதிகளை மாற்றிக் கொள்ள வைக்க காரணமாயிருந்த அதிமுக்கியமான நாட்களை நினைவு கூர்ந்தார்.
கடையை பற்றிய தகவல் காட்டுத்தீயாய் பரவி, மறுநாள் ரூ.3 லட்சமும், அதற்கு மறுதினம் ரூ.2 லட்சமும் விற்பனை செய்துள்ளனர்.
“கையிருப்பில் இருந்த மொத்த ஆடைகளும் விற்பனையாயின. தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, மேற்கொண்டு ஆடைகள் அனுப்புமாறு கடையின் மேலாளர் கேட்டுக் கொண்டார். அப்போது தான் நான் நினைத்தேன். ஏன்... இதையே ஆண்டு முழுவதும் செய்யக்கூடாது? அப்படித்தான், எங்களது காம்போ விற்பனை மாடல் அறிமுகமாகியது,” என்றார்.
குறைந்த லாபம்... பெத்த விற்பனை...
அவர்களது ஈரோடு கிளை ‘ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி’ சென்டராகி, மேலும் இதுபோன்ற விற்பனைகளின் வெற்றி தோல்விகளை கண்டறியும் பரிசோதனை இடமாகவும் மாறியது.
“ஏழு சட்டை பார்மூலாவுக்கு அடுத்தப்படியாய், ‘5 பேண்ட்கள் 1000ரூபாய்’, ‘4 ஜீன்ஸ் பேண்ட்கள் 1000ரூபாய்’ விற்பனைத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தினோம்” என்கிறார்.
தொடர்ச்சியாய் புதுமுயற்சிகள் அதன் பிழைகள் என ஆறுமாத படிப்பினைக்குப் பிறகு, மதுரையிலும் அதே விற்பனையை தொடங்கியுள்ளனர். நிச்சயமாய், அது அத்தனை எளிதல்ல. ஏனெனில், அந்தநாட்களில் ஈரோட்டில் நடந்த விற்பனை, நட்டத்திலே இருந்தது. பின்னே, 250ரூபாய் உற்பத்தி அடக்கவிலை கொண்ட சட்டையை ரூ146க்கு விற்றால்...? எனவே, நட்டமில்லால் 1000ரூபாய் காம்போ சட்டை, பேண்ட்களை விற்க வேண்டுமாயின், அவர்கள் ஒரு திட்டத்தினை வகுத்தல் வேண்டும்.
“லாபச் சதவீதத்தை குறைத்து உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு உழைக்கிறோம். ஆடைஉற்பத்திக்கான மொத்தத் துணிகளை வாங்க முன்கூட்டியே செலுத்திவிடுவதன் மூலம், செலவினங்களைக் குறைத்து கொள்கிறோம்.” என்றார்.
ஜவுளித்துறையின் சராசரி லாபச் சதவீதம் 40 -50%க்குள் இருக்கும். ஆனால், சக்சசின் சராசரி லாப விகிதம் 5 - 10%. “பெரிய இடைவெளி என்றாலும், வாடிக்கையாளர்களுக்கு விலையின் அடிப்படையில் அதிக நன்மையை பெறமுடியும் என்பதை உணர வைக்க முடிந்தது,” என்றார்.
அவர்கள் ஒரு புதிய விற்பனையகத்தை திறந்த போதெல்லாம் சராசரியாக ஒரு சதுர அடிக்கான அவர்களது விற்பனை, தொழில்துறையில் அதிகபட்ச சராசரியை விட அதிகமாக இருந்தது. சில்லறை ஆடை தயாரிப்பு தொழிற்சாலைகளின், ஒரு சதுர அடிக்கான சராசரி ஆண்டு வருவாய் ரூ7,000 உள்ள நிலையில், டி மார்ட் நிறுவனம் ரூ13,000 வருவாய் ஈட்டி சதுரஅடிக்கு அதிகப்பட்ச வருவாய் ஈட்டும் நிறுவனமாக உள்ளது.
“நாம் சதுர அடி ஒன்றுக்கு ரூ 25,000 சராசரியாக விற்பனை செய்கிறோம். எங்களுடைய அனைத்து கிளைகளும் தொடங்கிய 30 நாட்களில் முதலீட்டு மீதான வருவாய் ஈட்டத் தொடங்கிவிட்டன,” என்றார்.
பெரும் கனவுகள்...!
இன்று சக்சஸ் மதுரை, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் மற்றும் காஞ்சிபுரம் என 6 இடங்களில் சக்சஸ்புல்லாய் செயல்படுகிறது.
மற்ற ஜவுளிக்கடைகளுக்கு அவர்களது பிராண்ட் ஆடைகளை விநியோகிப்பதுடன், 50 முதல் 500 ரூபாய் வரையிலான ஆடவர்களுக்கான சகல ஆடைகளையும் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாய் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளைகளைத் தொடங்கி விற்பனை செய்து வருகிறது.
ஒவ்வொரு சக்சஸ் கடைகளிலிலும் மிகக் குறைவான சேல்ஸ்மேன்களையே காணமுடிகிறது. காரணம், விரும்பியதையே பார்த்து தேர்ந்து எடுத்துக் கொள்ளும் பல் பொருள் அங்காடியின் அமைப்பிலே சக்சஸ் ஷோரூமும் அமைக்கப்பட்டுள்ளது.
“எளிதாய் ஷாப்பிங் செய்வதற்கான காரணிகளை மேம்படுத்தி வருகிறோம். இது தான் எதிர்காலம்,” என்கிறார்.
“சக்சஸ் எவ்வித வெளிப்புற நிதியுமின்றி, எதிர்மறையான மூலதனமற்ற நிறுவனமாகும்” என்றார்.
“2013ம் ஆண்டு சக்சஸ், காம்போ ஆஃபர் எனும் அதன் சக்சஸ் பார்மூலாவை கண்டறிந்த பின் ஆண்டு வருவாய் ரூ 1.35 கோடியாக உயர்ந்தது. இப்போது, 50கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,” என்றார்.
தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலும் சக்சஸ் கிளையினை விரிவுப்படுத்த வேண்டும் என்பதே ஃபைசலின் அடுத்த ஓராண்டு திட்டம்.
“2030ம் ஆண்டுக்குள் 420கிளைகளை திறக்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். தென்னிந்தியாவில் எங்களை திடமாக நிலைநிறுத்திய பின், வட இந்தியாவிலும், பிறகு சர்வதேச அளவிலும் செல்வோம்,” என்றுக்கூறி ஃபைசல் அவருடைய கனவுத்திட்டத்தை பட்டியலிட்டார்.
சக்சசின் ஒவ்வொரு புதிய கிளை திறப்பின் போதும், எதிர்பாராத விருந்தாளிகளாக கடையை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். எந்த அளவுக்கு எனில், சாலைகள் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகும் நிலையை சமப்படுத்தவும், கட்டுக்கடங்கா கூட்டத்தாரை கட்டுக்குள் கொண்டுவரவும் போலீசாரை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர்.
திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமே பெருந்திராள மக்களை கவரக்கூடியவர்கள் என்ற எண்ணத்தை கொண்ட மாநிலத்தாரை தன்பக்கம் இழுத்து, தனக்கென ஒரு கூட்டத்தைச் சேர்த்து வைத்திருக்கிறது சக்சஸ்.
தொடக்கத்தின் ‘வாய் வழி வார்த்தையாகவும்’, வாட்சப் குறுஞ்செய்திகள் வழியாகவும் விளம்பரப்படுத்தி வந்த சக்சஸ் நிறுவனம், தற்போது மார்க்கெட்டிங்கிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால், அவர்கள் வழக்கமான விளம்பர பலகைகள் அல்லது டிவி விளம்பரங்களை நாடவில்லை.
“உண்மையில் ஒரு துணியின் துல்லியமான மதிப்பு என்ன என்பதை மக்கள் தெரிந்து விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கில் யூ டியுப்பில் வீடியோக்களை பதிவேற்றினோம். துணியின் மதிப்பை தவிர்த்து எஞ்சிய விலை பெரும்பாலும், கடையின் உட்கமைப்பிற்கும், பிராண்டிங்குமானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த முயன்றோம்,” என்று அவருடைய மார்க்கெட்டிங் உத்திகள் பற்றி பகிர்ந்தார் ஃபைசல்.
இவர்களின் மார்க்கெட் உத்திகளில் மற்றொரு தனித்துவமானது, கஸ்டமர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஷார்ட் அண்ட் ஷார்ப்பாய் பதிலளித்து வீடியோ அப்லோடுவது.
“எங்களிடம் 2 லட்சத்துக்கு அதிகமான வாடிக்கையாளர்கள் தரவுகள் இருக்கின்றனர். அவர்களுக்கு வீடியோவை அனுப்பி பரவவிடுவதுடன், சோஷியல் மீடியாக்களிலும் விளம்பரம் செய்கிறோம். அப்படியே, எங்களது வீடியோக்கள் வைரலாகி விடுகின்றன,” என்றார்.
உங்களுக்கென்று ஒரு கனவு! அது உங்களுடைய கனவாக இருக்கட்டும்...
தொடர் முயற்சிகள் மூலம் வெற்றிக்கான பாதையை வகுத்துக்கொண்டு வரும் ஃபைசல், அதற்காக அவரை ஆயுத்தப் படுத்தவும் மறக்கவில்லை. பல்வேறு வர்த்தக அமைப்புகளின் ஒரு அங்கமாயிருப்பதுடன், துறைசார்ந்த தொழில் நிபுணர்களை சந்தித்தும் கற்றுக்கொள்கிறார். “எப்போது வெளியில் சென்றாலும், விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற ஒரே யோசனை மட்டுமே இருக்கும்,” என்றவர், தோல்விகளில் இருந்து பாடம் கற்றதே அவருடைய மிகப்பெரிய படிப்பினை என்கிறார்.
“மற்றவர்களின் தொழில் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உங்கள் வணிகத்தை நீங்கள் செய்ய முடியாது. உங்களுக்கான சொந்தமான மாடலை நீங்கள் உருவாக்க வேண்டும்,” என்கிறார்.
2011ம் ஆண்டு ஈரோட்டு கிளையில் கடும் விற்பனை சரிவிலிருந்து மீண்ட பொழுதும், இன்று அடைந்திருக்கும் வெற்றியை அவர்கள் அடையமுடியும் என்று அவர் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்.
தைரோகேர் டெக்னாலஜீசின் நிறுவனரும் தலைவருமான டாக்டர்.வேலுமணி மொழிந்ததை மேற்கோள்காட்டி, "A copied model cannot be perfected and a perfected model cannot be copied''” என்றார்.
இத்தகைய சூழ்நிலையில், வெற்றி தவிர்க்க முடியாதது தான். இறுதியாய் எதற்காக நிறுவனத்திற்கு ‘சக்சஸ்’ என்ற பெயர் வைத்தீர்கள் என்றதற்கு, சற்றும் யோசிக்காமல் உடனே இடமிருந்து வலம், வலமிருந்து இடம் என எப்படி படிப்பினும் ஒரு பொருள் தரக்கூடியது என்று சிரித்துக் கொண்டே முடித்தார்.
ஆங்கில கட்டுரையாளர்: தீப்தி நாயர் | தமிழில்: ஜெயஸ்ரீ