இந்தியாவில் 5G - முதலில் எந்த நகரங்களில்? நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன?
இன்று பிரதமர் மோடி இந்தியாவிற்கான 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ள நிலையில், எந்தெந்த நகரங்களுக்கு இன்று முதல் சேவை கிடைக்கும், 5ஜி சேவையின் சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்...
இன்று பிரதமர் மோடி இந்தியாவிற்கான 5ஜி சேவையை தொடங்கி வைத்துள்ள நிலையில், எந்தெந்த நகரங்களுக்கு இன்று முதல் சேவை கிடைக்கும், 5ஜி சேவையின் சிறப்பம்சங்கள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து விரிவாக பார்க்கலாம்...
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய 4 நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன.
72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்திற்கு ஒதுக்கப்பட்டதில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கான ஏலம் 7 நாட்கள் நடைபெற்றது. இதன் மூலமாக மத்திய அரசுக்கு ரூ. 1.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
இந்திய தொலைதொடர்பு துறையில் முன்னணியில் விளக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றைகளை 88,078 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதற்கு அடுத்ததாக 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரத்தை 43,084 கோடி ரூபாய்க்கு ஏர்டெல் நிறுவனம் ஏலம் எடுத்தது. வோடஃபோன் ஐடியா நிறுவனம் 18,799 கோடிக்கும், அதானி நிறுவனம் 212 கோடி ரூபாய்க்கும் அலைக்கற்றை உரிமங்களை வாங்கின.
5ஜி சேவை தொடக்கம்:
இந்திய மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தியுள்ளார். டெல்லி பிரகதி மைதானத்தில் அக்டோபர் 1 முதல் 4ம் தேதி வரை நடக்க உள்ள, ’இந்திய மொபைல் காங்கிரஸ் 2022’ மாநாட்டில் பங்கேற்ற மோடி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர் டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை 13 நகரங்களில் முதற்கட்டமாக தொடங்கிவைத்துள்ளார்.
கண்காட்சியைத் தொடங்கிவைத்த பிறகு, பிரதமர் மோடி பல்வேறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களால் அமைக்கப்பட்ட அரங்குகளைச் சுற்றிச் சென்று 5G என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி அறிந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ரிலையன்ஸின் பில்லியனர்கள் முகேஷ் அம்பானி, பார்தி ஏர்டெல்லின் சுனில் பார்தி மிட்டல் மற்றும் வோடபோன் ஐடியாவின் குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் பங்கேற்றனர்.
ஜியோவை முந்திய ஏர்டெல்:
பார்தி ஏர்டெல்லின் 5ஜி சேவை இன்று முதல் எட்டு நகரங்களில் கிடைக்கும் என்று அதன் தலைவர் சுனில் பார்தி மிட்டல் அறிவித்துள்ளார். இதன் மூலம், நாட்டில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனமாக எர்டெல் மாறியுள்ளது. மாநாட்டில் பேசிய பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டல் கூறுகையில்,
"பிரதமர் இன்று 5ஜியை அறிமுகப்படுத்தியதை அடுத்து, தற்போது ஏர்டெல்லின் 5ஜி 8 நகரங்களில் - டெல்லி, மும்பை, வாரனாசி, பெங்களூர் மற்றும் பிற நகரங்களில் கிடைக்கும். ஏர்டெல் மார்ச் 2023 க்குள் நாடு முழுவதும் பல நகரங்களிலும், மார்ச் 2024 க்குள் இந்தியா முழுவதும் 5G சேவைகளை வெளியிடும்,” என அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு அதை தேசத்தின் முன்னேற்றத்துடன் இணைப்பதாக பார்தி மிட்டலை பாராட்டினார்.
“தொழில்நுட்பத்தை உன்னிப்பாகப் புரிந்துகொள்ளும் ஒரு தலைவர் நம்மிடையே இருப்பதால் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. பல தலைவர்கள் தொழில்நுட்பத்தைப் பாராட்டுகிறார்கள், ஆனால் அதன் நுணுக்கமான புரிந்துணர்வையும் அதை நாட்டின் முன்னேற்றத்திற்காக இணைப்பதையும், என்னைப் பொறுத்தவரை, மோடி அவர்களைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. அவரால் மட்டுமே செய்ய முடியும்,” என்றார்.
2023 டிசம்பரில் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் 5ஜி சேவை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் இன்று முதல் 8 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், வோடபோன் ஐடியாவும் விரைவில் 5ஜி சேவையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி,
"உலகில் வேறு எவருக்கும் இல்லாத மிக உயர்ந்த தரம் மற்றும் மிகவும் மலிவு விலையில் வழங்குவதை ஜியோ உறுதி செய்யும்,” என அறிவித்துள்ளார்.
5ஜி சேவையின் சிறப்பம்சங்கள்:
- முதற்கட்டமாக சென்னை, மும்பை போன்ற் மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமே தொடங்கியுள்ள 5ஜி சேவை 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4ஜியில் 1ஜிபிபிஎஸ் வரை டேட்டா வேகம் இருக்கும் நிலையில், வினாடிக்கு 20ஜிபிபிஎஸ் அல்லது வினாடிக்கு 100எம்பிபிஎஸ்க்கு அளவுக்கு தரவுகளை பரிமாற்றம் செய்ய முடியும் எனக்கூறப்படுகிறது.
- அதிகவேகமான சேவை என்பதால் 5ஜி கட்டணம் அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சப்பட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது மத்திய அரசு, 5ஜி சேவை மலிவான விலையில் கிடைக்கும் என உறுதியளித்துள்ளது.
- ட்ரோன் தொழில்நுட்ப அடிப்படையிலான விவசாயம், உயர்-பாதுகாப்பு ரவுட்டர்கள் மற்றும் AI அடிப்படையிலான இணைய அச்சுறுத்தல் கண்டறியும் தளங்கள், தானியங்கி வாகனங்கள், ஆம் பேட் மற்றும் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் சேவை, ஆக்மென்ட் ரியாலிட்டி/விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களிலும், ல்வி மற்றும் திறன் மேம்பாடு, கழிவுநீர் கண்காணிப்பு அமைப்பு, ஸ்மார்ட்-அக்ரி திட்டம், சுகாதார நோய் கண்டறிதல் போன்ற துறைகளிலும் 5ஜி சேவை பல்வேறு முன்னேற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நீளமான வீடியோ அல்லது முழு நீள படத்தையோ கூட இனி ஸ்மார்ட் போனில் சில நொடிகளில் பதிவிறக்கம் செய்ய முடியும். அதிவேக ஆக்மென்டட் ரியாலிட்டி , மெட்டாவர்ஸ் அனுபவங்கள், உயிர் காக்கும் சேவைகள், மேம்பட்ட மொபைல் கிளவுட் கேமிங் போன்றவற்றில் புரட்சியை உருவாக்கக்கூடும்.
- நாட்டின் ஸ்டார்ட்அப்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலன்களை மேம்படுத்தவும் 5ஜி தொழில்நுட்பம் உதவும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகளாவிய தொழில்துறை அமைப்பின் சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் விளைவாக 2023 மற்றும் 2040 க்கு இடையில் இந்தியப் பொருளாதாரம் ₹ 36.4 டிரில்லியன் ($455 பில்லியன்) அளவுக்கு உயரக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
- உலகின் பல்வேறு நாடுகளில் 40 முதல் 40 சதவீத 5ஜி சேவை கவரேஜைப் பெறுவதற்கே பல ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியாவில் 80 சதவீத கவரேஜ் சில மாதங்களிலேயே ஆரம்பமாகியுள்ளது, இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும்பங்காக அமைய உள்ளது.