‘இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த 5ஜி சேவை விரைவில்’ - முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் துறையில் செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (15.7.2020) நடைபெற்றது. இதில் பேசிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் துறையில் செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
“ஜியோ ஒரு முழுமையான 5ஜி தீர்வை வடிவமைத்துள்ளது என்பதை தெரிவிப்பதில் பெருமை கொள்கிறேன். இதனால் இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த 5ஜி சேவையை 100 சதவீதம் உள்நாட்டு தொழில் நுட்பங்களையும் தீர்வுகளையும் கொண்டு வழங்கமுடியும்,” என்று பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஆகியோரிடையே உரையாற்றுகையில் அம்பானி குறிப்பிட்டார்.
இந்தியாவில் 5ஜி ஸ்பெக்ட்ரம் கிடைக்கும்போது 'மேட் இன் இந்தியா’ 5ஜி தீர்வு தயாராக இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு சேவை தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு மாறுவது எளிதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு அர்ப்பணித்த முகேஷ் அம்பானி, இந்தியாவில் இந்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் ஜியோ நிறுவனத்தின் 7.7% பங்குகளை கூகுள் நிறுவனம் 33.737 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து வாங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது ஜியோவில் செய்யப்படும் மிகப்பெரிய முதலீடாகும். கடந்த சில மாதங்களில் Facebook, Qualcomm, Intel போன்ற நிறுவனங்களும் ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரிலையன்ஸ் நிறுவனத்தில் 1.52 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.