உயர் பதவி பணியை விட்டு மாட்டுப் பால் பிசினசில் வெற்றிக் கண்ட 6 தொழில் முனைவோர்கள்!
ஐடி வேலை, கை நிறைய சம்பளம் என நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட, ஆரோக்கியம், பாரம்பரியம் நோக்கி, சுத்தமான தரமான மாட்டுப் பால் மற்றும் பால் பொருட்கள் தொழிலைக் கையில் எடுத்து சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
பால்... நமது வாழ்வில் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்று. பிறந்த குழந்தைக்கு கூட தாய்ப்பாலுக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்படுவது மாட்டுப் பால் தான். அதனால் தான் பால் மற்றும் பால் பொருட்களின் தேவைக்கு சந்தையில் எப்போதுமே தனி இடம் உண்டு.
அதிலும் 2017 ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு பாக்கெட் பால் மீதான மக்களின் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றே கூறலாம். தங்கள் குழந்தைகளுக்கு தரமான, சத்தான பாலைத் தர வேண்டும் என்ற தேடல் அதிகமாகியுள்ளது. மக்களுக்கு எது தேவையோ அதனைத் தொழிலாக எடுத்துச் செய்தால் நிச்சயம் வெற்றி நிச்சயமே.
அதனால் தான் ஐடி வேலை, கை நிறைய சம்பளம் தரும் கார்ப்பரேட் வேலை என நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட, இப்போது அதனை ஒதுக்கி விட்டு அல்லது அதோடு மற்றொரு தொழிலாக பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை சார்ந்த தொழிலைக் கையில் எடுத்து சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். அப்படி சுத்தமான மாட்டுப்பால் சம்பந்தப்பட்ட தொழிலில் சிறந்து விளங்கும் தொழில்முனைவர்கள் சிலரை பட்டியலிட்டுள்ளோம்.
வெற்றிவேலின் வெற்றி
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரம்பரியத்தின் அவசியத்தை உணர்ந்த வெற்றிவேல், ஐடி பணியை உதறி விட்டு குழந்தைகளுக்காக தூய்மையான பாலை விநியோகம் செய்யும் ஸ்டார்ட் அப் தொடங்கி இன்று மாதத்திற்கு ரூ.30 லட்சம் வரை வருமானம் ஈட்டி பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறார்.
மெரினா புரட்சி மூலம் நமது பாரம்பரிய மாடுகள், அதன் பால் ஈர்க்கப்பட்டவர் தான் மதுராந்தகத்தைச் சேர்ந்த வெற்றிவேல். சாதாரண குடும்பப் பின்னணியைக் கொண்ட இவர், படித்ததெல்லாம் அரசுப் பள்ளியில் தான். டிப்ளமோ முடித்துவிட்டு பிபிஓ நிறுவனத்தில் பணியாற்றி, பின்னர் பட்டப்படிப்பு முடித்து, பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் நல்ல பொறுப்பில் கை நிறைய சம்பளம் வாங்கி வந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் இயற்கை ஆர்வலர்கள் நட்பு கிடைக்க, தானும் ஏதேனும் நல்ல விஷயம் செய்ய வேண்டும் என ‘விவசாய நாடு’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை தொடங்கி விவசாயிகளின் நலனுக்காக செயல்படத் தொடங்கினார்.
அதன் ஒரு பகுதியாக தனது நண்பர்களுடன் சேர்ந்து நாட்டு மாட்டுப் பால் விநியோகம் செய்ய ஆரம்பித்தார். மக்களிடையே அதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து 2018 மார்ச் மாதத்தில் ‘உழவர்பூமி பசும்பால்’ என்ற பிராண்டை அறிமுகப்படுத்தினார் வெற்றிவேல். இன்று நாளொன்றிக்கு 1500 லிட்டருக்கும் அதிகமாக பால் விநியோகம் செய்து வருகிறார்.
வெற்றிவேலின் வெற்றிக் கதையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள...
சுயநலமும் நல்லதுதான்
சமயங்களில் சுயநலமாக, பிடிவாதமாக இருப்பது கூட நல்லது தான். ஆனால் அது மற்றவர்களுக்குப் பிரச்சினையாக இல்லாமல், உபயோகமானதாக இருக்க வேண்டும். அதற்கு சிறந்த உதாரணம் தான் டெல்லியைச் சேர்ந்த கனிகா யாதவ்.
சிறுவயது முதலே தன் வீட்டில் வளர்க்கப்பட்ட பசுக்கள் மூலம் சுத்தமான மாட்டுப்பால் குடித்து வளர்ந்தவர் கனிகா. ஆனால் 2014ம் ஆண்டு அதற்கு இடையூறு ஏற்படவே, குடித்தால் சுத்தமான பால் தான் என்ற தேடலைத் தொடங்கியிருக்கிறார். அப்போது தான் சந்தையில் கிடைப்பவை தரமான மாட்டுப்பால் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் அவருக்குத் தெரியவந்தது.
இதனால், தானே மாடுகள் வளர்த்து சுத்தமான பாலை மீண்டும் பெறுவது என முடிவு செய்தார். கூடவே தன்னைப் போல் அவதிப்படுபவர்களுக்கும் அதனை விற்பனை செய்ய நினைத்தார். அப்படித்தான் 2017ம் ஆண்டு ‘வொயிட் ஃபார்ம்ஸ்’ என்கிற நிறுவனத்தை சஞ்சீவ் யாதவுடன் இணைந்து தொடங்கினார் கனிகா. இன்று இந்த ஸ்டார்ட் அப் கோடிகளில் வருவாய் ஈட்டி வருகிறது.
கனிகாவின் வொயிட் ஃபார்ம்ஸ் கடந்து வந்த பாதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள...
தேடலில் கிடைத்த வெற்றி
கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் செல்வகுமார். மேலாண்மையில் எம்.பில் முடித்தவர் 2 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்த போது, கோவையில் தனக்குக் கிடைத்தது போன்ற தரமான பால் தன் மகளுக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் அவர் தொடங்கியது தான் VilFresh பிராண்ட்.
2016ம் ஆண்டு Laymen Agro Ventures என்ற நிறுவனத்தைத் தொடங்கிய செல்வா, கோவையில் உள்ளவர்களுக்கு கலப்படமில்லாத விவசாய உற்பத்திப் பொருட்களையும் பால் பொருட்களையும் அவர்களது வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.
அதோடு கோவை கிராமப்புற இளைஞர்கள் மீண்டும் தங்களது கிராமங்களுக்குப் புலம்பெயர்ந்து மாதம் 40,000 ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் வகையில் வேலைவாய்ப்பினையும் தந்து வருகிறார் செல்வா.
செல்வாவின் VilFresh பற்றி மேலும் தெரிந்து கொள்ள...
துணிந்தால் வெற்றி நிச்சயம்
ஹரியானாவைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி பிரதீப் ஷியோரன். படித்த படிப்பிற்கு ஏற்ப பன்னாட்டு நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் பார்த்து வந்தார். ஆனால் இயந்திரத்தனமான வேலை சலிப்பைத் தரவே, வேலையை ராஜினாமா செய்து விட்டு தன் சொந்த கிராமம் திரும்பினார்.
அங்கு ‘பாக்தி பாலகம்' என்ற பெயரில் ஐந்து இடங்களில் சுவையான பால் விற்பனை நிலையத்தை தொடங்கினார். விருப்பப்பட்டு செய்யும் தொழிலில் நிச்சயம் சாதிக்க முடியும் என நிரூபித்தார் பிரதீப். பால் வியாபாரத்தை தொடங்கியது முதலே மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கத் தொடங்கினார்.
இப்போது அவரது பால் வியாபாரம் பல இடங்களுக்கும் விரிவுப் படுத்தப்பட்டு வருகிறது. தனது தொழிலை ஒரு வணிகமாக மட்டும் பார்க்காமல் சவாலாக பார்ப்பதாலேயே அதில் வெற்றிகளைக் குவிக்க முடிகிறது என்கிறார் பிரதீப்.
இதோ அவரது முழுக் கதையையும் படித்து தெரிந்து கொள்ள...
மாத்தி யோசி
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பரம்பரைத் தொழிலை எடுத்துச் செய்ய இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இருக்காது. ஆனால் 18 ஆண்டுகளுக்கு முன் தன் தாத்தாவால் தொடங்கப்பட்டு, பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் பாதியிலேயே நின்று போன பால் விற்பனையை புதிய பொலிவுடன் மீண்டும் துவக்கி இன்று கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் வெற்றியாளராக திகழ்கிறார் டெல்லியைச் சேர்ந்த துஷார் சிங்.
குடும்ப மரபை தக்க வைக்க இந்திய உள்நாட்டு மாடுகளிடமிருந்து மட்டுமே கிடைக்கும் ஏ2 பாலை வர்த்தகம் செய்கிறார் துஷார். 7 கோடி ரூபாய் சுயநிதியுடன், சுவையிலும் தரத்திலும் மற்ற பால்களைவிட உயர்ந்த இந்திய உள்நாட்டு மாடுகளிடமிருந்து மட்டுமே கிடைக்கும் ஏ2 பாலை மே 2019 முதல் விற்கத் தொடங்கினார்.
இந்தியாவின் பூர்வீக ரக மாடுகள் எனக் குறிப்பிடப்படும் சாஹி இன மாடுகளை நூற்றுக்கணக்கில் கொண்டுள்ளது இவரது பண்ணைகள். 60க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் செயல்படும் இவரது மிஸ்டர் டைரி குழு ஒவ்வொரு மாதமும் முழு கொழுப்பு பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் மூலமாக அரை கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டு வருகிறது.
மனமிருந்தால் மார்க்கமுண்டு
மேற்கூறியவர்களில் இருந்து சற்று வேறுபட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த ப்ரீதா - மணிகண்டன் தம்பதி. ஐடி வேலை, கை நிறைய சம்பளம், வார இறுதி பொழுதுபோக்குகள் எனச் சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தங்களது மகளுக்கு தரமான நாட்டுப்பால் கிடைக்க வேண்டும் என இவர்கள் எடுத்து வைத்த முதல் அடி, இன்று மாதம் ரூ. 1.5 லட்சம் வருமானம் தரும் ஆலமரமாக வளர்ந்துள்ளது.
சரி, மேலே கூறியவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தானே கேட்கிறீர்கள். அவர்கள் எல்லாம் பால் தொழிலில் இறங்கியதும் தாங்கள் பார்த்து வந்த பெரிய வேலைகளை ராஜினாமா செய்து விட்டனர். ஆனால் ப்ரீதாவும், மணிகண்டனும் இப்போதும் ஐடி வேலையைத் தொடர்ந்தபடியே பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் அசத்தி வருகின்றனர்.
சிறிய கார் கேராஜில் ஒரு மாட்டுடன் தொடங்கிய தொழில் இன்று 50 மாடுகள், பால் விநியோகம், கூடவே கழிவு மேலாண்மையாக மாட்டு சாணத்திலிருந்தும் பல வகையான பொருட்களைத் தயாரித்து, அதையும் விற்பனை செய்து வருகின்றனர்.