உடலுக்கும் மனதுக்கும் அமைதியை தரும் யோகா: பயிற்சி மையங்களின் பட்டியல்!
ஜூன் 21, 2016 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு தொகுப்பாகும்.
யோகா செய்வதனால் கிடைக்கும் உடல் நலன்களைப் பற்றி பெரியளவில் விழிப்புணர்வு உருவாகியுள்ளது. தகவல்களைச் செயல்முறைப்படுத்த, படைப்பாற்றலையும் செயல் திறனையும் அதிகரிக்க, மனஅழுத்தத்தை எதிர்க்கொள்ள, ஆன்மாவின் கவலைகளிலிருந்து மீண்டு வர சக்தி கொடுக்கிறது. யோகா கொடுக்கும் அறிவாற்றல், நரம்பியல் மற்றும் மனநிலை சம்பந்தப்பட்ட பயன்கள் எண்ணற்றவை. நீங்கள் ஒரு நிபுணராகவோ அல்லது கற்றுக்குட்டியாகவோ இருந்தாலும் சரி, இந்த பழங்கால கலையை சில நிமிடங்கள் செய்வதால், நமது மனமும் உடலும் வளங்கொண்ட ஆக்கமுள்ள இடமாக மாறும்.
இன்று பல இடங்களில் யோகா கற்பிக்கப்படுகிறது. பாரம்பரிய யோகா நிலையங்கள் முதல் புதுயுக பயிற்சி நிலையங்கள் வரை சிலவற்றை கீழே பட்டியலிட்டுள்ளோம். நீங்களும் உங்கள் அன்றாட வாழ்க்கை பரப்பரப்பில் இருந்து சற்று நேரத்தை ஒதுக்கி யோகா கற்று பயனடையுங்கள்:
1. க்ரிஷ்ணமாச்சார்யா யோகா மந்திரம் : ஆயுர்வேத நிபுணரான டி.க்ரிஷ்ணமாச்சார்யா, யோகாவில் கைதேர்ந்த வல்லுனர் மற்றும் சிறந்த பயிற்சியாளர். 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த யோகா பயிற்றுனராகத் திகழ்ந்த க்ரிஷ்ணமாச்சார்யா, பலரது வாழ்வில் யோகாவை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தியவர். அவரது மகனும் சீடருமான டி.கே.வி.தேசிகாச்சார் 1976 ஆம் ஆண்டு தனது தந்தையின் நினைவாக சென்னையில் 'க்ருஷ்ணமாச்சார்ய யோகா மந்திரம்' எனும் நிலையத்தை நிறுவினார். உலகளவில் பிரபலமாக உள்ள இந்த நிலையத்தில், யோகாவில் அடிப்படை முதல் ஆரோக்கியத்துக்கு வழிசெய்யும் வழிகள், மற்றும் சிகிச்சைமுறை யோகா பயிற்சிகளும் கற்பிக்கப்படுகிறது. சென்னையில் இந்த மையம் உள்ளது.
வலைதளம்: Krishnamacharya yoga mandiram
2. தி சென்னை ஐயங்கார் ஸ்கூல் ஆஃப் யோகா சென்ட்டர்: யோகா மேதை என்றழைக்கப்படும் பி.கே.எஸ்.ஐயங்கார் யோகா முறையில் பயிற்சி அளிக்கும் நிலையம் இது. 1918 இல் பிறந்த ஐயங்கார் உலகளவு பிரபலமான சிறந்த யோகா குரு. உலகெங்கும் உள்ள இவரது சீடர்கள் அவரிடம் கற்ற யோகா மற்றும் ஆசனங்களில் பயிற்சி அளித்து வருகின்றனர். உடல் மற்றும் மனக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அஷ்டாங்க யோகா வல்லுனரான ஐயங்காரிடம் பயின்றவர்கள் பலர், 'ஐயங்கார் யோகா' என்ற முறையை உலகம் முழுதும் இன்று பலருக்கு கற்றுத்தந்து வருகின்றனர்.
வலைதளம்: The Iyengar School of Yoga Center
3. ஈஷா யோகா: 'சத்குரு' என்று அழைக்கப்படும் யோகி ஜக்கி வாசுதேவ் நிறுவிய ஈஷா பவுண்டேஷனின் ஒரு அங்கமாக யோகா பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் பிரபலமான இந்த மையங்களில், ஆழ்மனதிற்கு அமைதியை தரக்கூடிய யோகா முறை பயிற்சிகளும் தியான வழிகளும் கற்றுத்தரப்படுகிறது. மன அழுத்தமற்ற வாழ்வு, மேம்பட்ட ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக வழிகளில் செல்ல விரும்புவோருக்கு ஏற்றவகையில் யோகா வகுப்புகள் இங்கு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள இவர்களது மையங்கள் தமிழகத்திலும் சென்னை உட்பட பல இடங்களில் உள்ளது. வலைதளம்: Isha Yoga center
4. ஆசன ஆண்டியப்பன் யோகா மையம்: திருமூலரின் யோக புத்தகமான திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ள அஷ்டாங்க யோகா வழிமுறையை பின்பற்றி வருபவர் குருஜி.டாக்டர்.ஆசன ஆண்டியப்பன். பண்டையகால யோகாவைப் பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்து யோகாவின் பெருமைகளை மக்களுக்கு எடுத்துச்சொல்லி பயிற்சியளித்தும் வருகிறார் இவர். தனக்கென ஒரு தனி யோகா முறையையும் ஏற்படுத்தியுள்ள ஆசன ஆண்டியப்பன், பல்வேறு சிகிச்சை முறைக்கு பலனளிக்கும் வகையில் யோகாவை பயன்படுத்தி உதவியுமுள்ளார். யோகா வகுப்புகளும், யோகா பற்றிய பயிற்சிகளையும் இம்மையம் அளிக்கிறது. வலைதளம்: Asana Andiappan college of Yoga & Research Center
5. சிவானந்தா யோக வேதாந்தா சென்ட்டர்: 1989 இல் நிறுவப்பட்ட சிவானந்தா யோகா வேதாந்தா மையம், சர்வதேச சிவானந்தா யோகா வேதாந்தா மையத்தின் ஒரு அங்கமாகும். ஸ்ரீ சுவாமி விஷ்னுதேவானந்தா இம்மையத்தை தொடங்கினார். இவர், இமயமலையில் யோகா மற்றும் வேதாந்தத்தில் வல்லுனரான சுவாமி சிவானந்தாவிடம் பயிற்சி பெற்றவர். ஆசனம், ப்ராணாயாமம், சவாசனம், வேதாந்தம் மற்றும் தியான பயிற்சிகள் சென்னையில் உள்ள மையத்தில் கற்றுத்தரப்படுகிறது. வலைதளம்: Sivananda Yoga Vedanta Center
6. ஆர்ட் ஆஃப் லிவிங் யோகா: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வடிவமைத்துள்ள யோகா முறைகள் இந்த மையத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மூச்சுப்பயிற்சி, யோகாசனம், தியானம், மன அமைதி என பலவகை பயிற்சிகளை ஆர்ட் ஆஃப் லிவிங் அளிக்கிறது. தற்போதுள்ள வாழ்க்கைமுறைக்கு ஏற்றவகையில் ஆரோக்கியத்துடன் வாழ வழிசெய்யும் யோகா பயிற்சி வகுப்புகளை இம்மையம் வழங்கி வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இவர்களது மையம் செயல்பட்டுவருகிறது. வலைதளம்: Art of Living Yoga
7. ஜோர்பா – எ ரினைஸான்ஸ் ஸ்டுடியோ’: “யோகாவும் த்யானமும் தினமும் ஒரு மணி நேரம் பழகும் கலை அல்ல. யோகா என்பது ஒரு வாழ்க்கைமுறை. மகிழ்ச்சியைத் தரும் எந்த செயலும் யோகா தான். நடனம், நடை, சமையல், சிரிப்பு, எழுத்து என மனதிற்கு பிடித்ததை செய்யும் எல்லாமே ஒரு விதமான யோகா தான்,” என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட புதுயுக யோகா ஸ்டுடியோ ஜோர்பா – எ ரினைஸான்ஸ் ஸ்டுடியோ. விதவிதமான யோகா பயிற்சிகளை கற்றுக்கொள்ள நினைக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற இடம் இது. சென்னை இளைஞர் சர்வேஷ் சசியால் தொடங்கப்பட்ட இந்த நிலையத்தில் பிரானிக் ஹீலிங், அக்யுபிரச்சர், தண்ணீரில் யோகா என பல புதுவகைகள் கொண்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகிறது. சென்னை உட்பட பல இடங்களில் இதன் கிளைகள் தொடங்கப்பட்டுள்ளது. வலைதளம்: Zorba- A Renaissance Studio.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்