42 நாட்கள்: 10 ஆயிரம் கிமீ பைக் பயணம்: பல மனிதர்கள், பல அனுபவங்களுடன் திரும்பிய கோவை நண்பர்கள்!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை என பல சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்கிய ஆர்வலர்களை பயணத்தில் சந்தித்து அனுபவம் பெற்ற பிரசாந்த் மற்றும் கோவிந்த்.
நாம் ஏகப்பட்ட பயணக்கதைகளை கடந்து வந்திருப்போம். சைக்கிளில் பயணித்தவர், கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் பயணித்தவர், இந்தியா முழுவதுமே நடந்து பயணித்தவர் என ஆச்சரியமூட்டும் பல கதைகளை கேட்டிருப்போம். ஆனால், எல்லா கதைகளிலும் மாறாமல் இடம் பெறும் வாசகமாக இருப்பது ‘நாங்கள் சந்தித்த மனிதர்கள் தான் எங்கள் பயணக் கதையை விட ஆர்வமூட்டுபவர்களாக இருப்பார்கள்’ என்பது. பயணிப்பவர்களுக்கு மட்டுமே புரிந்திருக்கிறது பிற வழிப்போக்கரின் நட்பும், கருணையும் எவ்வளவு தூரம் நம்மை பயணிக்கச் செய்யும் என்று.
கோவிந்த்; கோவையில் பிறந்து, வளர்ந்து கணிதம் படித்து, கணிதத்தில் ஆய்வு செய்து கொண்டே, ட்யூசன் இன்ஸ்டிட்டுயூட் நடத்திக் கொண்டிருக்கிறார். சின்ன வயதில் இருந்தே கணிதம் தான் இலக்காக இருந்ததா என்றுக் கேட்டால்,
“அப்படி எல்லாம் சொல்ல முடியாது. எனக்கு ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு ஆசை இருக்கும். ட்ரெயின் ஓட்டணும், டென்னிஸ் ப்ளேயர் ஆகணும்,பைலட் ஆகணும், மாமா துபாய்ல இருந்தத பார்த்துட்டு துபாய்ல செட்டில் ஆகணும்னு எல்லாம் நெறைய ஆசை எல்லாம் இருந்துச்சு...” என்கிறார்.
பிரசாந்த் - கோவையிலேயே பிறந்து வளர்ந்து, எஞ்சினியரிங் படித்து, தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் வேலை செய்து, அதில் ஆர்வமில்லாமல் போய், விவசாயம் தொடர்பாக இயங்கும் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இடையிடையே பிஸினஸ் செய்கிறேன், இயற்கை விவசாயம் செய்கிறேன் என பலமுறை சொதப்பி, பல விஷயங்களை கற்றுக் கொண்டதாக வெளிப்படையாக சொல்கிறார்.
பிரசாந்தும், கோவிந்தும் கல்லூரி படிக்கும் போதில் இருந்தே பார்ட் டைம் வேலைகள் செய்யத் தொடங்கியவர்கள். இருவரும் சந்தித்துக் கொண்டதும் அப்படித்தான். கோவை ஜி.ஆர்.டி கல்லூரி பக்கத்தில் இருக்கும் ஏ-1 சிப்ஸில் இருக்கும் சூப் கடையில் கோவிந்துக்கு வேலை, பிரசாந்துக்கு ஸ்வீட் கார்ன் கடையில் வேலை. அப்படியே நட்பாகினார்கள்.
“அப்பவே கோவிந்தும் அவரோட ஃப்ரெண்ட்ஸும் சோசியல் ஆக்டிவிட்டீஸ் எல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க. நானும் கூட போவேன்,” என்கிறார் பிரசாந்த்.
சோசியல் ஆக்டிவிட்டீஸ்-னா? என்று கேட்டால், “ஓண்ணா சேர்ந்து ஊருக்கு உதவி பண்ணப் போறோம்னு சும்மா சுத்துற கேங்க் அவங்க. நானும் அப்படியே சுத்துவேன்” என விளையாட்டாய் சொல்கிறார் பிரசாந்த். விலங்குகள் மீட்பில் இயங்கும் மணி, சூழல் ஆர்வலராக இருக்கும் ராஜ்மோகன், தேங்காய் சிரட்டை மீது வரைவது போன்ற கைவினை பொருட்கள் எல்லாம் செய்யும் விஷ்ணு என பலரோடு இணைந்து ’மகிழ் புவி’ என்றொரு அமைப்பு வடிவில் சமூக நலனுக்காக செயல்படத் தொடங்கினார்கள். இவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் போது தான் ஒரு பயணம் போக வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் வந்திருக்கிறது.
ஆள் கடத்தல் குறித்த விழிப்புணர்வுக்காக தொடர்ந்து இயங்கிக் கொண்டும் பயணித்துக் கொண்டும் இருக்கும் ராட்னி என்பவரை சந்தித்துப் பேசி, அவர் கொடுத்த யோசனைகளை, அறிவுரைகளை எல்லாம் வைத்துக் கொண்டு 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு தண்டர்பேர்டு பைக்கில் ‘ஆள் கடத்தல் குறித்த விழிப்புணர்வு’ எனும் நோக்கோடு மும்பை சென்று வந்தார்கள். அந்த பயணத்திற்குப் பிறகு தான் மேலும் ஒரு பிரச்சாரத்தோடு ஒரு நீண்ட பயணம் போக வேண்டும் எனும் லட்சியம் வந்தது.
“விலங்கு மீட்பு, இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்புனு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆர்வம் இருந்தப்போ எல்லாருக்கும் பொதுவா இருந்தது கழிவு மேலாண்மையும், பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வும்,”
என்பவர்கள், அதே பிரச்சாரத்தோடு தான் பயணிக்கத் தொடங்கினார்கள். பெரிய அளவில் ஸ்பான்சர்கள் இல்லாத நிலையில், சின்ன சின்ன ஸ்பான்ஸர்ஸ் நிறைய பேர் கிடைத்தனர். அவர்கள் எல்லாருக்கும் நன்றி என்றும் சொல்கிறார்கள்.
கோவையிலிருந்து புறப்பட்டு லே வரை செல்வது தான் திட்டமாய் இருந்திருக்கிறது. 2018, செப்டம்பர் மாதம் பயணம் தொடங்கியது, அக்டோபரில் கோவை திரும்பியிருக்கிறார்கள். கர்நாடகா, கோவா, மஹாராஷ்டிரா, குஜராத், டையு & டாமன், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், புது தில்லி, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியே, 42 நாட்களில் பத்தாயிரம் கிமீ பயணித்திருக்கிறார்கள். பிற மாநிலங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றது போல மாறிக் கொள்வது பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை என்றாலும் உணவு கொஞ்சம் சிக்கல் தானாம்.
“நிறைய இடத்துல ரொட்டி மட்டும் தான் இருக்கும். இல்ல ரைஸ் தான் சாப்டணும்னா ஒரு ஆளுக்கு இருநூறு ரூபா ஆகும். எங்களுக்கு ஒரு பட்ஜெட் இருந்துச்சு, அதனால நாங்க அதுக்கேத்த மாதிரி தான் ஃபுட் எடுத்துக்கிட்டோம்” என்கிறார்கள்.
பருவநிலை மாற்றமும் சவால் அளிப்பதாக இருந்திருக்கிறது. ”ராஜஸ்தான்னாலே பாலைவனம்னு தான் சொல்லிருக்காங்க.. ஆனா அங்க அவ்ளோ குளிரா இருந்துச்சு...” என்கிறார் பிரசாந்த்.
சந்தித்த மனிதர்கள் :
க்ளிண்டன் வாஸ், கோவா:
“கோவா பார்க்க பெரிய சிட்டி மாதிரி தெரியும், ஆனா, குப்பை எல்லாத்தையும் கொண்டு போய் கடல்ல போடுவாங்க. திரும்ப ஒரு மழை வந்தா ப்ளாக்கேஜ் ஆகி ப்ராப்ளம் ஆகும். அவர் ரொம்ப சிம்பிளா, ‘நம்ம குப்பைய நாம எங்க போடுறோம்’னு யோசிச்சார். அப்போ அந்த ஏரியால இருக்க குப்பை எல்லாத்தையும் கலெக்ட் பண்ணலாம்னு முடிவெடுத்தார்” என க்ளிண்டன் வாஸ் குறித்து சொல்கிறார் பிரசாந்த்.
க்ளிண்டன் வாஸ் தெற்கு கோவாவின் ஒரு பகுதியில் இருக்கும் வீடுகளில் இருந்து குப்பைகளை சேகரித்து அவற்றை மறு சுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார். வாஸ் கொடுத்த தொடர்புகள் வழியே கழிவு மேலாண்மை தொடர்பாக இயங்கும் ஜில் ஃபெர்னாண்டஸ், ப்ளாஸ்டிக் பாட்டில்கள் வீடுகள் அமைக்கும் ரொமானி சான் ஃபிரான்சிஸ்கோ ஆகியோரை சந்தித்திருக்கிறார்கள் கோவிந்தும், பிரசாந்தும்.
தமன்கர், தானே :
மஹாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த கௌஸ்துப் தமன்கர், கடந்த பனிரண்டு வருடங்களாக வீட்டில் இருந்து ஒரு பொருளை கூட குப்பை என தூக்கிப் போட்டதில்லை. இவரைப் பற்றிய கதைகள் பல்வேறு பத்திரிக்கைகளால் வெளியிடப்பட்டிருக்கின்றன.
”பெரிய அளவுல குப்பைகள் இருக்கப்போ ரீ-சைக்கிள் பண்ண நிறுவனங்களுக்கு அனுப்பலாம், சின்னச் சின்ன பொருட்களை என்ன பண்றது அப்படிங்குற பிரச்சினைக்கு தீர்வு தான் தமன்கரோட செயல்பாடு. குப்பைய நான் கொழந்தையா நெனைக்குறேன்னு சொல்வார். வேஸ்ட்னு தூக்கி போடுற பொருள் எல்லாம் வெச்சு எதாவது செஞ்சுடுவார் - பான் பராக் கவர் வெச்சு மேட் ஒண்ணு செய்திருக்கிறார். இந்த மாதிரி நெறைய. இதை பத்தி ஒரு புக்கும் எழுதிருக்காரு. அத எங்களுக்கு கிஃப்ட் பண்ணார்,” என்கிறார்கள்.
மஹேஷ் தேசாய், குஜராத் :
“மஹேஷ் தேசாய், அஹமதாப்பாத்ல இருக்க பெரிய சேரிப்பகுதில இருக்க கொழந்தைங்களுக்காக ஸ்கூல் நடத்தறார். வழக்கமான ஸ்கூல் பாடத்தைத் தாண்டி, வாழ்க்கை முறை மாற்றத்துக்கு தேவையான விஷயங்கள அங்க சொல்லிக் கொடுக்குறாங்க- அதுல ஒண்ணு தான் ரீ-சைக்கிளிங்” என மஹேஷ் தேசாய் குறித்து சொல்கிறார் கோவிந்த்.
மஹேஷ் தேசாய், தொடர்ந்து ஏழு ஆண்டுகள், ஒவ்வொரு நாளும், அஹமதாபாத்தின் அந்த சேரிக்கு வந்து அங்கிருக்கும் சூழலை புரிந்துக் கொள்ள ஆய்வு செய்திருக்கிறார். அதன் விளைவாகவே ஒரு பள்ளிக்கூடத்தை துவங்கியிருக்கிறார். பள்ளிக்கூடம் துவங்கிய உடனேயே மாணவர்கள் வருவதற்கு தயாராக இருந்திருக்கவில்லை. அங்கிருக்கும் பெற்றோரிடம் பேசி, அவர்கள் மனதில் கொஞ்சம் நம்பிக்கை வர வைத்த பிறகு தான் மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆனால் தேசாய் நிறைய சட்ட சிக்கல்களை பார்த்திருக்காரு. தனக்கு அப்புறம் இதை நடத்த யார் இருக்கா அப்படிங்குறது அவருக்கு பெரிய கேள்வியாவே இருக்கு” எனும் பிரசாந்த், மஹேஷ் தேசாயை சந்தித்தது தான் மிக உருக்கமான சந்திப்பாக இருந்தது என்கிறார்.
சேவா கஃபே, குஜராத் :
“இங்க நம்ம போய் என்ன வேணா சாப்டலாம், காசு கொடுக்கத் தேவையில்ல ஆனா வேற யாராவது ஒருத்தர் சாப்டறதுக்கு நம்ம காசு கொடுக்கணும். அன்ப மட்டுமே பகிர்ந்துக்கணும் அப்படிங்குற ஐடியா,” என சேவா கஃபேயை அறிமுகம் செய்கிறார்கள்.
ஏறத்தாழ பதின்மூன்று வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது இந்த உணவகம். தன்னார்வலர்கள் தான் உணவை பரிமாறுகிறார்கள். இதுவும் ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கிறது.
இதைத் தவிர, இலவசமாக நீட் கோச்சிங் கொடுக்கும் ஒரு ஆளுமை, ஒரு கிராமத்தையே மாற்றியிருக்கும் ‘பேர்ஃபூட் காலேஜ்’ எனும் அரசு சாரா அமைப்பு என பற்பல ஆட்களை சந்தித்ததன் தொகுப்பு தான் இவர்களுடைய பயணமாக இருந்திருக்கிறது.
ஒரு நோக்கோடு, பிரச்சாரத்தோடு பயணம் போகிறோம் என புறப்படுபவர்களில் எத்தனை பேர் இப்படி புது இணைப்புகள் உண்டாக்கிக் கொண்டு, அதன் வழியே கற்றுக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. இப்படிக் கேட்ட கதைகள் வழியே கழிவு மேலாண்மையையும், இயற்கை விவசாயத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உண்டாக்குதலையும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள் கோவிந்தும், பிரசாந்தும்.
போதுமான நிதியுதவிகள் கிடைக்கும் போது, ஒரு நிறுவனமாகவே (‘ஹேஷ்டேக்’ என்று பெயரும் வைத்துவிட்டார்கள்) கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இயங்க வேண்டும் என்பதுவே தற்போதைய இலக்காக கொண்டிருக்கிறார்கள். இந்த கதை உரக்க ஒலிக்கும் எனும் நம்பிக்கை எனக்கு பெரிய அளவில் இருக்கிறது!