கால்களை இழந்த 300 பேர்களை சொந்தக் காலில் நிற்க உதவிய சிறுவன்!
மும்பையைச் சேர்ந்த வீர் அகர்வால் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ‘ஜெய்ப்பூர் ஃபுட்’ முகாம் ஏற்பாடு செய்து 14 லட்ச ரூபாய் நிதி உயர்த்தியுள்ளார்.
ஒரு விபத்து ஏற்பட்டு படுக்கையிலேயே நகரமுடியாமல் கிடக்கும் நாட்கள் மிகவும் மோசமாக இருக்கும்.
”சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாலை விபத்து ஏற்பட்டு தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பல வாரம் படுக்கையிலேயே நான் கழித்தேன். அந்த வலிநிறைந்த அனுபவம் மிகுந்த மன வேதனையை அளித்தது. இந்தச் சம்பவம் நலிந்த மாற்றுத்திறனாளிகள் மீண்டும் நடக்க உதவவேண்டும் என்கிற உந்துதலையும் எனக்கு அளித்தது,” என்றார் வீர் அகர்வால்.
அமெரிக்கன் ஸ்கூல் ஆஃப் பாம்பே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவரான வீர் அகர்வால், கால்களை இழந்த 300 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ 14 லட்ச ரூபாய் உயர்த்தியுள்ளார். நவம்பர் 23 முதல் 26-ம் தேதி வரை மஹாராஷ்டிராவின் வாஹிம் மாவட்டத்தில் உள்ள ரிசோட் பகுதியில் நடைபெற்ற ’ஜெய்ப்பூர் ஃபுட்’ முகாமில் வீர் அகர்வால் தனது நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
”ஜெய்ப்பூர் ஃபுட்’ முகாம் குறித்து கேள்விப்பட்டதும் vhelptowalk.org என்கிற தளத்தை உருவாக்கி கூட்டுநிதி பிரச்சாரம் மேற்கொள்ள தீர்மானித்தேன்,” என்று குறிப்பிட்டார்.
வீர் அகர்வால் இந்த முயற்சிக்குத் தேவையான தொகையை சேகரித்த பின்னர் சேத் பகவான்தாஸ் அறக்கட்டளையைத் தொடர்புகொண்டு முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கிறது.
அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இந்தச் செய்தி பரவி சுமார் 350 மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைக்காக முகாமிற்கு வருகை தந்தனர். ஆனால் 300 பேருக்கு மட்டுமே செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. மற்றவர்களுக்கு வீல்சேர் வழங்கப்பட்டது.
இந்தியாவில் செயற்கை கால் பொருத்திக்கொள்ள செலவு செய்ய இயலாதோரின் நிலை குறித்து இணையம் வாயிலாக ஆய்வு செய்த பின்னர் இந்தச் சேவையை செய்வதற்கு உந்துதல் ஏற்பட்டதாக அகர்வால் தெரிவிக்கிறார்.
இந்தியாவில் சுமார் எட்டு கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் சுமார் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பதால் முறையான சிகிச்சை பெறுவது கடினமாகிறது.
அகர்வால் மேலும் கூறுகையில்,
”அவர்கள் நடப்பதைப் பார்க்கும்போது மன நிறைவு ஏற்படுகிறது. இந்த நோக்கத்திற்கு ஆதரவளித்து முகாமை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.
கட்டுரை : THINK CHANGE INDIA