2018-ம் ஆண்டு உலகளவில் முத்திரை பதித்த இந்திய சாதனையாளர்கள்- ஒரு தொகுப்பு!
அறிவியல் மற்றும் கட்டமைப்பு, அரசியல், கலை, திரைப்படம் என பல்வேறு துறைகளில் பங்களித்து இந்தியர்கள் உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளனர். 2018-ம் ஆண்டு நிறைவடையவுள்ள தருணத்தில் உலகளவில் முத்திரை பதித்து இந்தியாவைப் பெருமைப்படுத்திய இந்தியர்கள் சிலரை யுவர் ஸ்டோரி பட்டியலிட்டுள்ளது.
1. சோனம் வாங்சுக் மற்றும் பரத் வத்வானி (Sonam Wangchuk and Bharat Vatwani)
ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்ட ஆறு நபர்களில் பரத் வத்வானி, சோனம் வாங்சுக் இருவரும் அடங்குவர்.
மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் வசிப்போருக்கு மும்பையைச் சேர்ந்த பரத் அவரது மனைவியுடன் சேர்ந்து அவர்களது தனியார் கிளினிக்கில் சிகிச்சை அளித்தார். இந்தியாவில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோரை குணப்படுத்தவேண்டும் என்கிற இவர்களது இரக்க குணமும் துணிவும் பாராட்டைப் பெற்றுத்தந்தது.
சோனம் வாங்சுக் மாணவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த கல்வித் துறையில் ஏற்படுத்திய சமூக சீர்திருத்தங்களுக்காக அங்கீகாரம் பெற்றார்.
வட இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் இவர் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் லடாக் இளைஞர்கள் வாழ்வாதார வாய்ப்புகள் மேம்பட பெரிதும் உதவியதாக அறக்கட்டளை பாராட்டியது. சோனம் உள்ளூர் சமூகத்தின் பல்வேறு துறைகளில் பங்களித்தது அறிவியல் மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. இவர் உலகின் சிறுபான்மை சமூகத்தினருக்கு முன்மாதிரியாக விளங்கினார் என்றும் அறக்கட்டளை தெரிவிக்கிறது.
2. பாலகிருஷ்ண தோஷி (Balkrishna Doshi)
இந்திய கட்டிட வடிவமைப்பாளர் பாலகிருஷ்ண தோஷி கிழக்கத்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப வடிவமைத்ததற்காக 2018-ம் ஆண்டு ’பிரிட்ஸ்கர் விருது’ பெற்றார்.
’பிரிட்ஸ்கர் விருது’ கட்டிட வடிவமைப்பாளர் சமூகத்திற்கு நோபல் பரிசுக்கு சமமானதாகும். 90 வயதான பாலகிருஷ்ண தோஷி, அவரது சொந்த ஊரின் தரத்தை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக பிரிட்ஸ்கர் விருது நடுவர் குழு தெரிவித்தது.
இந்தியாவின் முன்னணி கட்டிடக் கலைஞர் மற்றும் நகர்புற திட்டமிடுபவரான தோஷி குறைந்த விலையிலான வீடுகளின் வடிவமைப்பு திட்டங்களுக்கும் பொது நிறுவனங்கள் வடிவமைப்பிற்கும் பிரபலமானவர். புனேவைச் சேர்ந்த இந்தக் கட்டிடக்கலைஞர் அவரது நாட்டிற்கும் மக்களுக்கும் முழு அர்ப்பணிப்புடன் தனித்துவமான வகையில் பணியாற்றியுள்ளார். பேராசிரியராக பணியாற்றி உலகம் முழுவதும் உள்ள தொழில்முறையினர் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்கியுள்ளார். இவையே அவர் அங்கீகரிக்கப்படுவதற்கான காரணங்கள் என நடுவர் குழு தெரிவித்தது.
பாலகிருஷ்ணா மும்பையில் உள்ள ஜே ஜே கட்டிடக்கலை பள்ளியில் கட்டிடக்கலைப் பயின்றார். 1950-ம் ஆண்டு லீ கோர்பூசியர் என்று பிரபலமாக அழைக்கப்படும் சார்லஸ்-எடோவர்ட் ஜென்னெரெட் உடன் பணிபுரிய பாரீஸ் சென்றார்.
3. விகாஸ் சதாயே (Vikas Sathaye)
புனேவைச் சேர்ந்த பொறியாளரான 50 வயது விகாஸ் சதாயேவிற்கு 2018-ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. எனினும் கலை தொடர்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படவில்லை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகள் பிரிவில் விருது பெற்ற நால்வர் அடங்கிய குழுவில் இவரும் ஒருவர். இந்தக் குழு K1 கேமிரா சிஸ்டமை வடிவமைத்தது. இந்தக் கேமிரா Guardians of the Galaxy, Dunkrik, Kong-Skull Island உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது.
1967-ல் பிறந்த விகாஸ் மும்பையின் முலுந்து பகுதியில் வளர்ந்தார். அங்கு பள்ளிப்படிப்பை முடித்த அவர் புனே சென்று விஐடி-யில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் படிப்பை முடித்தார். அதன் பிறகு பெங்களூரு ஐஐஎஸ்சி-யில் இன்ஸ்ட்ருமெண்டேஷன் பிரிவில் முதுகலை பட்டம் படித்தார். புனேவின் Cummins பெண்கள் பொறியியல் கல்லூரியில் ஏழாண்டுகள் பேராசிரியராக பணியாற்றினார். அதன் பிறகு நியூசிலாந்து சென்று க்வீன்ஸ்டவுன் ஷாட்ஓவர் கேமிரா சிஸ்டம்ஸில் பணிபுரியத் துவங்கினார்.
ஷாட்ஓவர் K1 கேமிரா சிஸ்டம் வடிவமைத்த நால்வர் அடங்கிய குழுவில் இவரும் ஒருவராவார்.
4. வீர் தாஸ் (Vir Das)
வீர் தாஸ் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள கேல்ஸ்பர்க் Knox-லிருந்து பட்டம் பெற்றவர்.
நகைச்சுவை நடிகரான இவர் கலைத் துறையில் புரிந்த சாதனைகளுக்காக கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார். இந்திய நடிகரான இவர் தற்போது உலகெங்கும் அறியப்படும் நகைச்சுவை நடிகராக விளங்குகிறார். நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சிறந்து விளங்கும் இரண்டு இந்திய நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர்.
இவர் 1971-ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தின் ஆண்டு துவக்க விழாவின் துவக்க பேச்சாளாராக இருந்து வரும் முதல் முன்னாள் மாணவர் ஆவார். இதற்கு முன்பு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நடிகர் ஏவா லங்கோரியா போன்ற குறிப்பிடத்தக்க ஆளுமைகள் இந்த சிறப்பைப் பெற்றுள்ளனர்.
5. சோனல் பெய்ட் (Sonal Baid)
உலகளவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பப் போக்குகளை இந்தியா தழுவிக்கொண்டு வரும் இன்றைய காலகட்டத்தல் 28 வயதான சோனல் பெய்ட் 2018 ஆளில்லா ஏர் சிஸ்டம் (UAS) பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியர் ஆவார்.
நவம்பர் மாத துவக்கத்தல் Women and Drones ’UAS-ல் கவனிக்கப்படவேண்டிய பெண்கள்’ பட்டியலை வெளியிட்டது. உலகம் முழுவதும் இருந்து இதற்காக பரிந்துரைக்கப்பட்ட 288 பேரில் இந்த ஆண்டு குஜராத்தின் வடோடராவைச் சேர்ந்த வானூர்தி பொறியாளரான சோனல் பெய்ட் ஒருவர். இவர் இந்த பட்டியலில் இடம்பெற்ற முதல் இந்தியர் ஆவார். ’UAS-ல் கவனிக்கப்படவேண்டிய பெண்கள் பட்டியல்’ என்பது UAS துறையைச் சேர்ந்த பெண்களுக்கான ஆன்லைன் தளமான Women and Drone group Delair, GLOBHE மற்றும் Sundance media group உடன் இணைந்து ஏற்பாடு செய்யும் வருடாந்திர நிகழ்வாகும். முதல் பட்டியல் 2017-ம் ஆண்டு 110 பரிந்துரைகளுடன் வெளியிடப்பட்டது.
தற்போது சோனல் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப்பின் தயாரிப்பு மேலாண்மை மற்றும் ஸ்ட்ராடெஜிக் செயல்பாடுகளுக்கு தலைமை வகிக்கிறார். மக்களிடையே ஆளில்லா விமானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
6. பிரபாகர் ஷரன் (Prabhakar Sharan)
இந்த ஆண்டு லத்தீன் அமெரிக்க திரைப்படத்தில் கதாநாயகராக நடித்த முதல் இந்தியர் பீஹாரின் மோதிஹரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபாகர் ஷரன்.
பிரபாகர் இந்தியத் திரைப்படத் துறையில் சாதிக்கவேண்டும் என்கிற கனவுடன் மும்பை வந்தார். பல முயற்சிகள் மேற்கொண்டும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. பிறகு பணி வாய்ப்பு தேடி லத்தீன் அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்கா சென்றார். 2014-ம் ஆண்டு பாலிவுட் பாணியில் படம் எடுக்க தீர்மானித்து Enredados : La Confusion (Entangled: The Confusion) என்கிற ஸ்பானிஷ் திரைப்படம் எடுத்தார். அது பாக்ஸ் ஆபீஸ் வெற்றி பெற்று 2017-ம் ஆண்டின் பிரபலமான திரைப்படங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.
பிரபாகரின் லத்தீன் அமெரிக்க அறிமுக திரைப்படம் பாடல், நடனம் போன்ற வழக்கமான அம்சங்களுடன் பாலிவுட் பாணியில் எடுக்கப்பட்டது.
7. பிப்லாப் சர்கார் (Biplap Sarkar)
சிலிகுரி பகுதியைச் சேர்ந்த 29 வயது பிப்லாப் சர்கார் Glenfiddich Emerging Artist of the Year 2018-ல் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அவருக்கு 10 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் சர்வதேச உதவித்தொகையாக 1.2 லட்ச ரூபாயும் பணிக்கான உதவித்தொகையாக 5 லட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், உள்ளூர் சந்தைகள் போன்ற பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள் சந்திக்கும் சவால்களையும் அவர்களது வாழ்க்கைமுறையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் அமைந்த இவரது கலைப் படைப்பு இந்த வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது.
வெற்றியாளர்கள் ஸ்காட்லாந்தில் உள்ள கிளென்ஃபிடிச் டிஸ்டிலரிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அகில் மோகன், சீதாராம் ஸ்வெயின், வந்தனா கோதாரி, சுபேந்து மிஸ்ரா, மங்கேஷ் ராஜ்குரு ஆகியோர் இறுதி பட்டியலுக்கு தேர்வான மற்ற இந்தியக் கலைஞர்கள் ஆவர். பிப்லாப் இந்த வியாபாரிகளுடன் உரையாடி தனது கலைக்கு சரியான வடிவம் கொடுத்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கலைக் கல்லூரியில் ஓவியத்தில் எம்எஃப்ஏ முடித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு கலைக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.
8. த்ரிஷ்னீத் அரோரா (Trishneet Arora)
சைபர் பாதுகாப்பு பகுதியில் பிரபலமானவர் 25 வயதான த்ரிஷ்னீத் அரோரா. இவர் ஃபோர்ப்ஸ் 30 வயதிற்குள் இருக்கும் 30 ஆசிய நபர்கள் 2018 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
சண்டிகரைச் சேர்ந்த இவர் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்தவர். இருப்பினும் 30 வயது அல்லது அதற்கும் கீழே உள்ளவர்களில் ஆசியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டவர்களின் பட்டியலில் இவர் இடம்பெற்றுள்ளார்.
TAC Security நிறுவனர் மற்றும் சிஇஓ-வான த்ரிஷ்னீத், சைபர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் நூல் ஆசிரியர். மொஹாலியைச் சேர்ந்த இவரது நிறுவனம் சைபர்ஸ்பேஸில் கார்பரேட்களுக்கு பாதுகாப்பு சாரந்த சேவைகளை வழங்குகிறது (penetration testing) என ஐஏஎன்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு முன்பு GQ magazine-ல் செல்வாக்கு நிறைந்த 50 இளம் இந்தியர்கள் பட்டியலில் த்ரிஷ்னீத் இடம்பெற்றுள்ளார்.
9. அனிஷ் சூட் (Anish Sood)
கோவாவைச் சேர்ந்த எலக்ட்ரானிக் நடன இசைக் கலைஞரான அனீஷ் சூட் இண்டிபெண்டெண்ட் மியூசிக் அவார்ட்ஸ் (IMA) விருது பெற்றுள்ளார். இவர் சிறந்த எலக்ட்ரானிகா/டான்ஸ் சிங்கிள் பிரிவில் விருது வென்ற முதல் இந்தியர் ஆவார்.
லிங்கன் செண்டரின் டேவிட் ரூபென்ஸ்டெயின் அட்ரியமில் நடைபெற்ற 16-வது சர்வதேச விருது வழங்கும் விழாவில் அனிஷுடன் Nik West, Reeve Carney, Esprit D’Air, Eh440, Karim Baggili, Sofia Rei, Air Traffic Controller, John McEuen, Rozina Patkai, Jake La Botz, The Bankesters ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
சாக் சோர்கன் மற்றும் Kelechi நடித்த அனீஷின் ’ஸ்டேரி நைட்’ பாடல் உலகளவில் பிரபலமானது. கடந்த பத்தாண்டுகளில் அனீஷ் நாட்டின் எலக்ட்ரானிக் இசையில் பெரியளவில் பங்களித்துள்ளார். டேவிட் குவெட்டா, சன்பர்ன் போன்றோருடன் இணைந்து இசையமைத்துள்ளார்.
10. நிஷ்தா துடேஜா (Nishtha Dudeja)
செக் குடியரசின் ப்ரேக் நகரில் கேட்கும் திறன் இல்லாதோருக்கான 18-வது ஐரோப்பிய-ஆசிய கண்டங்களுக்கான அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் மணி குலாதி மிஸ்டர் ஆசியா 2018 பட்டமும் நிஷ்தா துடேஜா மிஸ் ஆசியா 2018 பட்டமும் வென்றனர். கேட்கும் திறனற்ற நிஷ்தா ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதுப் பெண்.
கேட்கும் திறன் இல்லாதவர்களுக்கான அழகிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த பெண் தேர்வாவது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமல்லாது Deaflympics 2013, உலக காது கேளாதோர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் 2015, Deaflympics 2017 போன்றவற்றிலும் பங்கேற்றுள்ளார்.
ஆக்கம் : சோஷியல் ஸ்டோரி குழு | தமிழில் : ஸ்ரீவித்யா