சாம்சங் நிறுவனத்தை பிரச்சனையில் கொண்டு சென்ற 'நோட் 7' போன்கள்...
உலகமெங்கும் விமானங்களில் தடை செய்யப்பட்டுள்ளது... அதை வைத்துக்கொண்டு பறப்பது மிகவும் அபாயமானது என்று அமெரிக்க போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பல இடங்களில் வெடித்துள்ளது... பாம் இல்லை அது சாம்சங் காலக்சி நோட்7... தென் கொரிய தொழில்நுட்ப ஜாம்பவானான சாம்சங் நிறுவனம், தற்போது தாங்கள் விற்பனை செய்த நோட் 7’ களை திரும்ப பெற்றுகொண்டிருக்கிறது. அதன் தயாரிப்பையும் நிறுத்திவிட்டது. பல இடங்களில் நோட்7 தானாகவே தீ பிடித்து வெடித்துள்ள சம்பவம் உலகமெங்கும் மக்களிடையே பயத்தையும் அவநம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது. சுமார் 17 பில்லியன் டாலர் நஷ்டத்தை சாம்சங் நிறுவனம் சந்தித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இணையதளம் ஒன்று, நோட் 7’வாங்கி அதை சார்ஜில் போட்டு எப்போது எப்படி வெடிக்கின்றது என்று படமெடுத்து லைவாக ஃபேஸ்புக்கில் பகிர்ந்தனர். இந்த வீடியோவை 5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்தனர்.
செல்போன் விற்பனையில் கொடிகட்டி பறந்து வந்த கொரியன் நிறுவனம் ஆன சாம்சங்கின் மொபைல் போன் மாடல்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. 2011இல் சாம்சங் தனது பெரிய அளவு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய போது, பலரும் கேலி செய்து சிரித்தனர். அத்தனை பெரிய போனை காதில் பேசுவதை கண்டு பலர் கிண்டல் செய்தனர். ஆனால் அதே வகை போன்கள் மெல்ல பிரபலமடைந்து விற்பனை அதிகரித்தது.
சாம்சங் நோட் வகை போன்களின் திரை பெரிதாக இருந்ததால், அதில் படங்களை பார்த்து மகிழ மக்கள் விரும்பினர். ஸ்டைலஸ் பென்களுடன் வரும் இந்த நோட் போன்களில் தேவையான தகவலை குறித்துக்கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
சாம்சங் நோட் வகை போன்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பை கண்டு அந்நிறுவனம், அதில் பல புதுமைகளை புகுத்தி புதிய மாடல்களை வெளியிட்டு வந்தது. வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இந்த நோட் போன்கள் தற்போது திடீரென் வீழ்ச்சியை சந்தித்துள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
“நான் சில நாட்கள் காலக்சி நோட் 7 போன் வைத்திருந்தேன். நல்லவேலை என்னிடம் இருந்தது வெடிக்கவில்லை, இருப்பினும் சாம்சங் நோட் போன்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. நோட் 7 தயாரித்து நன்கு அதை டெஸ்ட் செய்து சந்தையில் விட்டிருக்கவேண்டும்...”
இந்த போனை கையில் எடுத்து கருவிழியை காண்பித்தால் சுலபமாக அன்லாக் செய்யமுடியும். பார்க்க அற்புதமாக இருந்தது. கேமராவும் அருமையாகவே இருந்தது, ஆனால் பின்னரே அதில் உள்ள குறைபாடு வெளியில் தெரியவந்தது.
ஆப்பிள் நிறுவன போட்டியை எதிர்கொள்ளவும், சாம்சங் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்டவும் இந்தவகை மொபைல் போன்களின் விற்பனை உதவியாக இருந்தது. ஆனால் தற்போது நோட்7 வெடித்தது சாம்சங் நிறுவனத்தையும் வெடிக்கச்செய்துள்ளது. விமானத்தில் போன் வெடித்து தீ, பயணிகளிடையே பய உணர்வு, குழந்தைகளுக்கு காயம் என்று அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகள் சாம்சங் நிறுவனத்தின் தலை எழுத்தையே புரட்டிப்போட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு பெருத்த நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
நோட் வகை போன்களின் முதல் பாட்ச் வெளியில் வந்து தீப்பிடித்தபோதே மக்களிடையே நம்பிக்கை இழந்தது சாம்சங். அப்போது அவர்கள் வேறு நோட் போன்களை அனுப்பி மாற்றிக்கொண்டனர். ஆனால் அதுவும் தீ பிடித்தபோதுதான் அதன் உண்மை நிலை வெளிவந்தது. பேட்டரி கோளாரா? அல்லது டிசைனிலேயே ஏதும் பிரச்சனையா? சந்தைக்கு வருமுன் போன்கள் டெஸ்ட் செய்யப்பட்டதா? என்று பலவகை சந்தேக கேள்விகள் எழுந்தது. ஆப்பிளின் புதிய மாடல் போன் வருவதற்குள் நோட்7 வெளியிட அவரசரமாக வெளியிட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்தியாவை பொருத்தவரை, சாம்சங் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. நோட்7 போன்களை ஆர்டர் செய்துள்ளோருக்கு, சாம்சங் காலக்சி S7 போன், அதனுடன் சாம்சங் கியர் விஆர் மற்றும் சாம்சங் லெவல் யு ஸ்டிரியோ வயர்லெஸ் ஹெட்செட் எல்லாவற்றையும் அதற்கு மாற்றாக தருவதாக உறுதி அளித்துள்ளது. கூடுதலாக Oculus content voucher’ களையும் அதனுடன் இலவசமாக வழங்குவதாகவும், போன்களின் திரைகளுக்கு ஒரு வருட மாற்றுக்கான இலவச சலுகையும் அறிவித்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: மாலா பார்கவா