தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்த தேர்தல்: 71.87% வாக்குப்பதிவு!
election2019: தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல்கள் அமைதியான முறையில் நடந்தது. 2 தேர்தல்களிலும் சராசரியாக 71 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் சார்பில் குரல் எழுப்புவதற்கான எம்.பி.களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18 அன்று நடைபெற்றது. தமிழகத்தில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடந்த தேர்தலில் காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். மாநிலம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 300க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்காளர்கள் சிலர் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. திரை நட்சத்திரங்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்டோர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்து பின்னர் அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வாக்களித்துவிட்டு சென்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் விஜய், அஜித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வாக்களித்துவிட்டு சென்றது, ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் முன்மாதிரியாக அமைந்தது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்குச்சாவடிகளை நோக்கி வந்தவண்ணமே இருந்தனர். எனினும் எந்த அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. மதுரையில் மட்டும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு இரவு 8 மணி வரையில் தேர்தல் நடத்தப்பட்டது.
வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அருகில் இருக்கும் எந்திரத்தில் சரிபார்த்துக் கொள்ளும் வசதியையும் தேர்தல் ஆணையம் இந்த முறை செய்திருந்தது வாக்காளர்களுக்கு திருப்தியை அளிப்பதாக அமைந்தது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீலிடப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தமிழகம் முழுவதும் 71.87% சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு கூறியுள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் 80.49% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 56.41% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 73.68 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், 100 சதவிகித வாக்குப்பதிவு என்று தேர்தல் ஆணையம் செய்த பிரச்சாரங்கள் பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. புதிய வாக்காளர்கள் வாக்களித்தும் இந்த ஆண்டு 72% மட்டுமே எட்ட முடிந்துள்ளது. புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் 2014ம் ஆண்டு 82.10 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் 2019ம் ஆண்டில் 82.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆமைணயம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி டிடிவி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்த 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இவற்றிற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தினத்திலேயே ஆம்பூர், ஆண்டிப்பட்டி, குடியாத்தம், அரூர் ஓசூர், மானாமதுரை, நிலக்கோட்டை, பாப்பிரெட்டிபட்டி,பரமக்குடி, பெரம்பூர், பெரியகுளம், பூந்தமல்லி, சாத்தூர், சோளிங்கர், தஞ்சாவூர், திருப்போரூர், திருவாரூர், விளாத்திக்குளம் உள்ளிட்ட18 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் சராசரியாக 71.62% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம் மட்டுமின்றி 2வது கட்டமாக ஏப்ரல் 18 அன்று நாடு முழுவதிலும் மொத்தம் 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்திரபிரதேசத்தின் 8 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 62.30% வாக்குகள் பதிவாகின. மராட்டியத்தின் 10 தொகுதிக்கான தேர்தலில் 57.22 சதவிகிதமும், அசாமில் 73.32%, பீகாரில் 62.52%, ஒடிசாவில் 64% வாக்குகள் பதிவாகியுள்ளன.
அசாம், பீகார், ஒடிசாவில் தலா 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்காக ஜம்மு காஷ்மீரில் நடந்த தேர்தலில் 42.05%, மேற்கு வங்கத்தின் 3 தொகுதிக்கு நடந்த தேர்தலில் 76.07% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதிக்கு நடந்த தேர்தலில் 75.69 சதவிகித சத்தீஷ்கர் மாநிலத்தின் 3 தொகுதிக்கு நடந்த வாக்குப்பதிவில் 68.70 சதவிகிதமும், கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் 67.79% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி